Friday, November 21, 2014

மனமே ஒரு மகாசக்தி


இயற்கையின் படைப்பில் மிகவும் பிரமிக்க வைப்பது பிரபஞ்சம். பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பு. இவற்றுடன் தொடர்புடைய வன் தான் மனிதன். நீர்நிலை என்பது வாய்ப்பகுதியாகவும், நிலம் என்பது தேகமாகவும், காற்று என்பது சுவாசமாகவும், ஆகாயம் என்பது மனிதனின் நெற்றிப்பகுதியாகவும், நெருப்பு என்பது உடம்பின் உஸ்ண- மாகவும் மனித உடற் கூறுகளை இயற்கை இரசித்து அமைத்து இருக்கின்றது. இதற்கும் மேலாக உடலின் உறுப்புக்கள் யாரும் உணரமுடியாத உன்னதமாக படைப்புக்கள். இதற்கெல்லாம் மேலாக மனிதனின் உடல், மற்றும்..

உடல் உறுப்புக்கள் அனைத்திற்கும் தலைமைப் பீடமாக விளங்குவது மனம். ஒவ்வொரு உறுப்புக்களின் இயக்கங்களும். செயல்பாடுகளும் மனமே.எந்தக் காரியத்தை எடுத்தக்கொண்டாலும் நன்மையோ அல்லது தீமையோ மனச்சாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் என்று நடைமுறையாக சொல்லுகின்றோம். மனம்தான் சாட்சி.அந்த மனச்சாட்சி என்பதையே நாம் இறைவன் எனக் கூறுகின்றோம். சித்தர்களும் ஞானிகளும் சொல்லும் வார்த்தைகளோ மனதில் குடிகொண்டிருக்கும் ஆண்டவனே என்று கூறுவார்கள். மனத்தை ஆண்டு கொண்டிருக்கும் அந்த மகாசக்திக்கு அண்டவன் என்று பொருள் கொள்கின்றோம். அந்த மனதை அமைதிப்படுத்தி உடலையும் பக்குவப்படுத்தி அமைதி நிலையை அடைந்து விட்டால் பல சாதனைகளை செய்யலாம் என்று யோகிகளும் சித்தர்களும் கூறி உள்ளார்கள்.

இந்த மனக்கோவிலில் வாழும் புனிதத்தை புனிதமாக வைத்துக்கொள்ள மனிதன் மறுக்கின்றான்.

இந்த மனதை நல்வழிப்படுத்திக் கொள்ளும் வழிகள் பலவகை இருந்தாலும் சராசரி வாழ்வை மட்டுமே மனம் நாடுகின்றது. இதற்கு பிறந்த நாள்முதல் பிறவி நாள்வரை புகட்டும் ஆரம்ப நிலைப்பாடமும் வழியில் நாம் முறைகேடாக கற்றுக்கொண்ட பாடங்களிலும் மனிதனை சராசரி நிலைக்கு தள்ளுகின்றது. இதை எவ்வாறு சரிசெய்து கொள்வது ? உயர்ந்த நிலைப்பாடான நமது நல்லமனம் என்பது பிறக்கும் போது வெற்றிடமாகத்தான் படைக்கப்படுகின்றது. இந்த வெற்றிடத்தில் எதை செயல்படுத்துகின்றோமோ அதுவாகவே மனம் செயல்படுகின்றது. கோபம், காமம், அன்பு, விருப்பு, வெறுப்பு என்று எதை நெஞ்சில் விதைக்கின்றோமோ அந்த வகையைச் சார்ந்த குணங்களே உருவாக்கப்படுகின்றது. குணங்களையோ, எண்ணங்களையோ மாற்றி அமைப்பதின் மூலமாக பழுதடைந்த மனங்களைக் கூட தெய்வீக மனம்கொண்ட மாமனிதனாக மாற்றலாம். ஆகவே எண்ணங்களின் வடிவமைப்புக்களை மாற்றிக் கொள்வதன் மூலம் நம்முடைய மனங்கள் பண்படுத்தப் படுகின்றது.

இறைநிலை என்றால் என்ன.? அமைதியான மனதை, மனநிலையை இறைநிலை என்கின்றோம். மனம் அடங்கவில்லை, மன அமைதியில்லை என்றால் கோவிலுக்கு செல்கின்றோம். ஏன்? கோவிலுக்கு செல்லும்போது நம்மைப்போல் பல மனிதர்களின் மன அதிர்வுகள் மன அலைகளாக நேர்மறையான அதிர்வுகளாக மண்டபத்துக்குள் பரவியிருக்கும். அந்த அதிர்வுகளால் நம்மனம் சீர்படுகின்றது. அங்கே செல்லும்போது நம் மனத்துக்கு சக்தி கிடைக்கின்றது. இந்த பேருண்மையை உணர்ந்தவர்கள்தான் யோகிகளும், சித்தர்களும். இவர்களின் மனதின் சூட்சும சக்திகளை தெரிந்து கொண்டு மனித குலங்களுக்கு மகா காவியங்களை நூல்களாக நமக்கு படைத்துத் தந்து விட்டுச் சென்றுள்ளார்கள். ஆகவே எண்ணங்களின் வீரியத்தை நம்வாழ்க்கையின் தேவைக்கு ஏற்ப வடிவமைத்துக் கொள்ளுதல் அவசியம். எங்களின் எண்ணங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள சில வழி முறைகள் உண்டு.

பயம், கவலை எதிர்மறையான எண்ணம் தன்னைத் தானே நொந்து கொள்ளுதல் தேவை இல்லாத சிந்தனைகளை மனதில் இருந்து அகற்றி எண்ணங்களை சுத்தப்படுத்தி கொள்ளுதல் போன்ற பயிற்சிகள் மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். மனித வாழ்க்கையின் மூலாதாரமாக விளங்கும் மனத்தின் நிலைகளை பலவாறாகப் பிரித்துக் கூறலாம்.. இந்த மனம் தனது வாழ்நாள் முழுவதும் இறைநிலை என்னும் தெய்வீகத்தை மனதோடு சேர்த்து வாழ்தல் எனவும் நல்ல விசயங்களுக்காகச் சொல்லப்படும் வார்த்தைகளும். நேர்த்தியுடன் நல்லகாரியங்களை செய்து முடிக்கும் மன உறுதியும். ஏற்படும் போது மனித உள்ளத்தில் அமைதி ஏற்படும்.. சில நேரங்களில் இனிமையான, சுவையான சில விசயங்கள் கூட துன்பத்தைத் தழுவ நேரிடுகின்றது. மலையாக தெரிகின்ற பெரும் துன்பம் கூட இன்பமாக மாறிவிடுகின்றது. இவை அனைத்துக்கும் என்ணங்களே காரணம். அதற்காகத்தான் எண்ணங்களை சரிசெய்ய வேண்டுமென நம்மூத்தோர் நமக்கு சொல்லி உள்ளார்கள்.

அதுபோல் நாம் சொல்லுகின்ற சொல்லுக்கு ஒருவகை வலிமை உண்டு. அதை எந்த கோணத்தில் செயலாக்கம் செய்கின்றோமோ அவ்வாறே அந்தக் காரியம் இனிமையான காரியமாகவோ, இல்லை துன்பம் தரும் காரியமாகவோ அமைந்து விடுகிறது. இந்த மனநிலைகளை அறிந்து, புரிந்து, வாழ்ந்தால் மனித வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் உண்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை. பிறவியில் உயர்ந்த பிறவி மனிதப்பிறவி. இந்தப்பிறவி எடுத்து விட்டாலே தெய்வீகத்துக்கு சமம். என்பார்கள்.. அப்படி என்றால் வாழ்நாளில் நம்மோடு வாழ்பவர்களிடம் உண்மையோடும் நம்பிக்கையோடும் நடந்துகொள்வது அவசியம். உண்மை மட்டும் இருந்தால் போதுமா ? நன்மையும், நம்பிக்கையும் இருக்கவேண்டாமா? அவ்வாறு உண்மையுடன் சேர்ந்து பயன் தரக்கூடிய நன்மைகள் இருந்தால் உலகமே உன்னைப் போற்றும். அதுபோல மனித வாழ்க்கையில் உயர்வு தாழ்வு என்பது இயற்கைதான். அதேசமயம் உயரும்நிலை வரும்போது பணிவும் வரவேண்டும். பணிவோடு சேர்ந்த உயர்வே நிரந்தரமானது.

உண்மை என்றால் என்ன? அன்பு என்றால் என்ன? அன்போடு இருந்தால் உண்மை என்றுமே நிலைத்து நிற்கும். இந்த உண்மை என்பது அன்பைப் பொறுத்தது. அதேபோல பணிவு என்பது பண்பைப் பொறுத்தது. இந்த வகையான மனநிலைகளும் நம் வாழக்கைக்கு நன்மையான விசயங்களை உருவாக்கித் தருவதற்கான சாத்தியக்கூறுகளே.

மனித மனம் தவிர்கப்படவேண்டிய விசயங்கள் என்னவென்றால் ஆசை ,கோபம், களவு இவைகள் தான். இந்த மனோநிலையில் உள்ள மனிதர்கள் பேசத்தெரிந்த மிருக இனத்தை சேர்ந்தவர்கள் எனலாம். முயற்சியோடு சேர்ந்த நல் வழிப்பயிற்சியும் எடுத்துக் கொண்டால் தான் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். இதற்கு மாறாக அன்பு, நன்றி, கருணை அகியவற்றைக் கொண்ட மனம். மனித வடிவிலே நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லமனம் என்றே கூறலாம்.

ஆக்கம்:வேலணையூர் பொன்னண்ணா

No comments:

Post a Comment