Friday, December 20, 2013

விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்




அன்புதான் வாழ்க்கை

* நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவிபுரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும் தான்.
* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை. வளர்ச்சி அடைவதும் அன்பு செலுத்துவதுமே வாழ்க்கை. அதுவே வாழ்க்கை நியதி.
* மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும், பிரம்மச்சரியமும், வாழ்க்கையின் அடிப்படை லட்சியங்களாக நமக்குத் தேவைப் படுகின்றன.
* கல்வி என்பது மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப் படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணம்ஆகாமல் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.
* அனைத்து தேவைகளையும், துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.

மதத்தின் ரகசியம்

* நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் மாறிவிடும். உங்கள் குரல் மாறிவிடும், உங்கள் தோற்றமே மாறிவிடும். நீங்கள் மனித குலத்திற்கு
ஒரு வரப்பிரசாதமாக இருப்பீர்கள்.
* உடலையும் புலன்களையும் வழிநடத்தும் போது, மனம் என்ற கடிவாளத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
* சிறு சிறு ஆசைகளை அனுபவித்துத்தீர்க்க வேண்டும். பெரிய ஆசைகள் அனைத்தையும் விவேகத்தால் ஆராய்ந்து விட்டுவிட வேண்டும்.
* இல்லறத்தில் வாழ்ந்தபடியே காமத்தையும், பணத்தாசையையும் துறந்தவர்கள் பாக்கியசாலிகள்.
* மதத்தின் ரகசியம் கொள்கைகளில் இல்லை. செயல்முறையில் தான் உள்ளது. நல்லவனாக இருப்பது, நன்மை செய்வது தான் மதத்தின் முழுப்பரிமாணமாகும்.
* ஒருவன் தன்னை வெறுக்கத் துவங்கிவிட்டால், அவன் கீழ்நிலைக்குச் செல்வதற்கான கதவு திறந்துவிட்டது என்று பொருள்.
* எந்த வேலையாக இருந்தாலும், அதனைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளி. எந்த வேலையும் அற்பமானதல்ல.

உன்னைப் பற்றியே சிந்திக்காதே!

* சமநிலையில் இருந்து பிறழாதவன், மன சாந்தமுடையவன், இரக்கமும், கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்ல
பணிகளை மட்டும் வாழ்வில் செய்ய
முற்படுவர். அதன்மூலம் அவன் தனக்கே நன்மையைத் தேடிக் கொள்கிறான்.
* தீமையைச் செய்வதால், நமக்கு நாமே
தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதால் நமக்கு நாமே நன்மை தேடிக் கொண்டவர்களாகிறோம்.
* சித்தாந்தங்களையும், தத்துவங்களையும் தெரிந்து
கொள்வதால் என்ன நன்மை விளையப்போகிறது!
நல்லவர்களாக வாழுங்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்து வாழ்வைப் பயனுடையதாக்குங்கள்.
* சுயநல எண்ணம் சிறிதும் இல்லாமல், பணம், புகழ்
என்னும் எதிர்பார்ப்பு வைக்காமல் பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்பதற்காகவே ஒருவன் தொண்டு செய்தால், உலகத்தையே மாற்றி அமைக்கும் சக்தி
அவனிடமிருந்து வெளிப்படும்.
* நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருப்பது
சுயநலங்களிலேயே மிகப்பெரிய பாவமாகும். சுயநலஎண்ணம் எவ்வளவு குறைகிறதோ அந்த அளவுக்கு
ஒருவன் கடவுளை நெருங்க முடியும்.

விருப்பங்கள் நிறைவேறும்

* அனைத்திலும் இறைவனை காண்பது
நம்முடைய லட்சியமாகும். அனைத்திலும் காண முடியாவிட்டால், நாம் நேசிக்கும்
ஒன்றிலாவது பார்க்க வேண்டும்.
* வாழும் காலம் எவ்வளவு
வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், லட்சியத்தை அடைவதே நம்முடைய
உயிர் மூச்சாக இருக்க வேண்டும்.
* இயற்கையின் ரகசியத்தை அறியும் போது மனிதன் இயற்கையின் உதவியால் இயற்கைக்கு அப்பாற்பட்ட பரம்பொருளை உணர்வதுடன் மரணத்தையும்
வெல்கிறான். இயற்கையைக் கடந்த அந்தப் பொருளின் உதவியால் அவன் எல்லையற்ற ஆனந்தத்தை
அனுபவிக்கிறான்.
* நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம்
மாறுவதுடன், குரலும், தோற்றமும் மாறுகிறது.
அப்போது நீங்கள், மனித குலத்திற்கு ஒரு
வரப்பிரசாதமாக மாறிவிடுவீர்கள்.
* பிரார்த்தனையால் நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக விழிப்படைகின்றன. பக்தியுணர்வுடன் பிரார்த்தனை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

Monday, December 9, 2013

திருப்பாவை - 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.

விளக்கம்: ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, "ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் "கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே "பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக "கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.

சிந்தனையை ஒரு மையத்தில் குவிப்பது எப்படி?

எப்போதும் கற்றுக்கொள்ளும் தயார் நிலையில் உங்கள் மனதை வைத்திருந்தால், நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளலாம். வாழ்க்கையின் கையிருப்பில் இருப்பதோ ஏராளம். நமக்குத்தான் பெற்றுக்கொள்ள நேரமும் இல்லை.. மனமும் இல்லை. 

ஒரு ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் பார்க்க வேண்டி, லிப்கோ அகராதியை புரட்டினேன். ஒரு பக்கதில் இருந்த வாசகங்கள் என்ன மிகவும் கவர்ந்தன. இவைதான் அந்த வாசகங்கள்:

ஒரே ஒரு கருத்தைத் தெரிவு செய்யுங்கள்.அதையே உங்கள் வாழ்வாகத் தீர்மானியுங்கள்.

அது பற்றியே சிந்தியுங்கள்; அதையே கனவு காணுங்கள். அதற்காகவே வாழுங்கள். உங்கள் மூளை, தசைகள் நரம்புகள்… ஏன்..உடம்பின் ஒவ்வொரு பகுதியிலும் அக்கருத்தே நிரம்பியிருக்கட்டும்.மற்ற எல்லாக் கருத்துக்களையும் ஒதுக்கி விடுங்கள்.இதுவே வெற்றிகான் வழி”

இந்த இணையற்ற மந்திர வரிகளைச்சொல்லயிருந்தவர் வீரத்துறவி விவேகானந்தர்.சுவாமிகளின் இச்சத்திய வரிகள் துறவிக்கு மட்டுமின்றி வாழ்வின் எல்லா நிலையில் இருப்போர்க்கும் மிகச்சரியாய் பொருந்தும்.

சிதறிய கவனத்தை, ஒரு நிலையில் குவித்து, வெற்ற காண விழைவோர் ஒவ்வொருவருக்கும் இவ்வரிகள் நிச்சயம் கரை காணாத் தோணிக்கு, கரை காட்டும் கலங்கரை விளக்கு.இவ்வைர வரிகளை பெரிதாய் எழுதி, ஒவ்வொருவரும் தங்களது இல்லங்களில் வைத்து, அனுதினமும் வாசித்து வர, எண்ணம் குவிந்து வலுப்பெறும்! செயல் துவங்கும்.

Wednesday, November 13, 2013

திருப்பாவை - 3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.

விளக்கம்: திருப்பாவை என்றாலே கிருஷ்ணாவதாரம் குறித்து பாடப்படுவது தான். அதிலே முதல் பத்து, அடுத்த பத்து, அதற்கடுத்த பத்து என மூன்று பிரிவாக்கி அதற்குள் ஒரு பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்பதும் ஆண்டாளின் அனுக்கிரஹமாக இருக்கிறது. இந்தப் பாடல் திருக்கோவிலூர்

(விழுப்புரம் மாவட்டம்) உலகளந்த பெருமாளைக் குறித்து பாடப்பட்டுள்ளது.

தெய்வத்திடம் அழுது முறையிட்டு வரம் கேட்பதுதான் நல்லது என்று எண்ணுகின்றார்கள்




1. பெரும்பகுதியானவர்கள் கோவிலுக்குள் சென்று, எந்த எண்ணத்துடன் வழிபடுகின்றார்கள்?

அன்று மெய்ஞானிகள் சொன்ன நிலைகள், கோவிலிலே போய் தியானம் செய் என்று சொன்னால், “அன்று அவர்கள் செய்ததெல்லாம் தப்பா.., முட்டாளா..,?” என்று கேள்வி கேட்கின்றார்கள்.

அங்கு கோவிலுக்குச் சென்று ரூ. 50, 100, 1000 என்று செய்வதற்குப் பதில் அந்த தெய்வகுணத்தை அருளிய மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும் அந்த தெய்வகுணம் பெறவேண்டும் என்று எண்ணச் சொன்னால், 

அங்கே தெய்வத்திற்குக் காசைக் கொடுத்துவிட்டு, 

நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்தால் 

தெய்வம் ஓடி வந்து செய்யும் என்றுதான் எண்ணுகின்றார்கள்.

மத்திரத்தினால் சொல்லிச் சொல்லிப் பார்த்தால், இந்த மந்திரத்தினால் இன்னொரு மனிதரிடம் விளைந்தது இங்கே வரும். இது நம்மை அருளாடச் செய்யும்.

நாம் நான்கு பேருக்கு நல்லது செய்தோம், 

அவர்கள் கஷ்டத்தையெல்லாம் நுகர்ந்தோம். 

அவர்களுக்கு நல்லதாகிவிட்டது. 

ஆனால், தெய்வம் என்னை இப்படிச் சோதிக்கின்றதே என்று மறுபடியும் விஷத்தைத்தான் சேர்த்துக் கொள்கிறோம்.

அன்றைய ஞானிகள், முனிவர்கள் என்ற நிலைக்கு வரப்படும் பொழுது, புஷ்பம், பழம் மற்றவையெல்லாம் போட்டு மனிதனுடைய உணர்வுக்குள் ஆசையை எடுத்துச் சொல்லும் பொழுது, 

சாதாரண மனிதனுடைய ஆசைகள் நாலாகச் சேர்க்கும் பொழுது, 

இந்த ஆசைகள் கூடி அதன் வழிகளிலேதான் அழைத்துச் செல்லும். 

இப்படி பூஜை செய்து செல்ல வேண்டுமென்றால் மனித உணர்வுக்குள் போகலாம். இன்றைக்குக் காரியம் நடக்கும். ஆனால், செல்வம் பெற பூஜை செய்துவிட்டு, நீங்கள் எதை இழுக்கின்றீர்களோ அடுத்தவர்களுக்கு ஏதாவது சொல்லும் பொழுது அந்த உடலில் இருக்கக்கூடிய வியாதியெல்லாம் சேர்த்து இழுத்துக் கொள்ளும். 

ஆக, நான் எல்லாம் நல்லது செய்தேன், 

ஆண்டவன் எனக்கு முதலில் அருள் கொடுத்தான், 

இப்பொழுது தொல்லை கொடுக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருப்போம். 

2. தெய்வத்திடம் அழுது முறையிட்டு வரம் கேட்பதுதான் நல்லது என்று எண்ணுகின்றார்கள்


கோவிலுக்குச் சென்று, அங்கே கஷ்டத்தை எல்லாம் விட்டுவிட்டு வருகிறோம். கோவிலுக்குச் சோர்வாக சென்றோம் என்றால் அவை நம்மைப் பிடித்துக் கொள்ளும். 

கோவிலுக்குச் சென்று வரும் பொழுது சோர்ந்துதான் வருகின்றோமே தவிர நன்றாக வருகின்றோமா? கோவிலுக்குப் போகும் பொழுது எந்த வேகத்தில் செல்கிறோமோ, அதே வேகத்தில் வீட்டிலிருக்கக்கூடிய கஷ்டத்தை எண்ணுகின்றோம். 

நீங்கள் சோர்வாக வரப்படும்பொழுது, இன்னொருவர் கஷ்டம் என்று சொல்வதைக் கேட்டுக் கொண்டேயிருந்தால் அந்தக் கஷ்டம் உடனே நமக்கும் வந்துவிடும். 

ஆக, நாம் கோவிலிலே போய் எதை எடுக்கிறோம்? சோர்வு வரப்பபடும் பொழுது இதே மாதிரி சோர்வலைகளை அங்கே நுகர்ந்தால் நம்மைச் சோர்வடையத்தான் வைக்கிறது. 

நம்மை அறியாமல் சோர்விலேயும் சஞ்சலத்திலேயும் தான் கோவிலுக்குச் சென்று வருகிறோமே தவிர, நல்லதை நாம் பெறமுடிவதில்லை.

இந்தச் சோர்வுடன் போய் தெய்வத்திடம் வரம் கேட்பதுதான் நல்லது என்று நினைக்கிறார்கள். 

3. நாம் எடுக்கும் எண்ணமே நமக்குள் தெய்வமாகி, நம் உடல் ஆலயமாகின்றது - ஆதிசங்கரர் காட்டியது


அந்த மெய்ஞானிகள் சொன்ன வழிப்படி, ஆத்ம சுத்தி என்ற நிலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கவும், விஞ்ஞான உலகத்தில் வரக்கூடிய விஷத்தை நீக்கி மகிழ்ந்த நிலையில் வாழவும் முடியும். 

உங்களுக்கு எது பிரியமோ அதைச் செய்யலாம். ஏனென்றால், நமது குருநாதர் காட்டிய நிலைகள், இந்த உடலைவிட்டுச் சென்றபின் நாம் எங்கே செல்லவேண்டும் என்ற நிலைகள்.

நம் உடலின் நிலைகளைத்தான் ஆலயங்களாகப் புறத்தால் காட்டப்பட்டது. எந்த ஆலயத்துக்குக் சென்றாலும், அந்த தெய்வகுணத்தைப் பெறவேண்டும், அதை அருளிய அந்த மகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

அப்படி எண்ணும் பொழுது, இந்த உணர்வின் அலைகள் நம் உடலுக்குள் மறைந்திருக்கக்கூடிய 

நல்ல குணங்களின் சக்தியை இயக்கி, 

நம் மூச்சினாலே பிறருக்குள் மகிழ்ச்சி ஊட்டி 

நம் காரியங்களைச் சித்தியாக்குகின்றது.

ஆக எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை, 

உன் உடலுக்குள் எடுக்கும் சுவாசம் 

உனக்குள் தெய்வமாக நின்று, 

உன் உடலுக்குள் இருக்கக் கூடிய பிணிகளை நீக்குகின்றது. 

உன் உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மைதான் 

உன் உடலை ஆலயமாக்குகின்றது. 

ஆக நீ எண்ணி எடுப்பதேதான், நீ வேள்விகள் செய்வது அல்ல. நீ செய்யவேண்டிய வேள்விகள் உன் எண்ணத்திற்குள் வேள்விகள் அடங்கியிருக்கின்றது என்று,. இவ்வாறு தனக்குள் மறைந்ததைத்தான் அன்று ஆதிசங்கரர் தெளிவாகக் காட்டினார்.

மலரின் மணத்தைப் பெறவேண்டும் என்று எண்ணி எடுக்கும் பொழுது, அதே ஏக்கத்தில் திரும்பத் திரும்ப செயல்படுத்தும்போது அந்த மணத்தின் தன்மை நமக்குள் சுவாசிக்க நேருகின்றது. 
அந்த மலரின் குணத்தின் தன்மை எவ்வளவோ அதே போல செயல்படவேண்டுமென்று உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது, உணர்ச்சிகள் நமக்குள் ஊட்டி அந்த செயலின் தன்மை செயல்படும். மணத்தின் தன்மை கொண்டு பேசவைக்கின்றது. 

ஆக எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உயிராத்மாவில் படும்பொழுது அந்த நிலைகள் செயல்படுகின்றது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

4. உங்கள் உயிர் ஈசன், உங்களை நீங்கள் நம்ப வேண்டும்

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் தியானம் செய்து பழகுங்கள். உங்களுக்குள் மகிழ்ச்சி வருவதைப் பார்க்கலாம். 

அர்ச்சனை செய்வதற்குப் பதில் அந்தக் கோவிலிலே நின்று, இந்த தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும். இதை அருளிய மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று ஏங்கி தியானித்து அந்த மூச்சலைகளைப் பரப்புங்கள்.

பின், இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும் இந்த தெய்வ குணத்தைப் பெறவேண்டும், 

அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்ற இந்த மூச்சலைகளை நூறு பேர் ஒவ்வொரு நாளும் அங்கே விட்டார்கள் என்றால் அங்கே எல்லாம் சுத்தமாகும்.

அர்ச்சனை செய்கிறீர்கள். அந்தக் காசை உண்டியலில் போடுங்கள். நல்ல காரியத்திற்கு அது பயன்படட்டும். அதை அந்த தேவஸ்தானம் செய்யும். வருபவர்களுக்குத் தங்குவதற்கு வசதி செய்யட்டும். 

நீங்கள் வசதியாகப் போய் அங்கே உட்கார்ந்து, இந்த தெய்வகுணத்தைப் பெறவேண்டும், இங்கே வருபவர்கள் எல்லாம் பெற்வேண்டும் என்று மூச்சை விட்டுப் பாருங்கள். அங்கே நல்லது நடக்கும்.

ஆக, அந்த மெய்ஞானிகள் காட்டிய அருள்வழியில் சென்றால் உங்களுக்குள் வரக்கூடிய இருளை நீக்கலாம். 

உங்கள் உயிர் ஈசன்.

உங்களை நீங்கள் நம்பவேண்டும்.

Tuesday, November 12, 2013

ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!

விஞ்ஞானி ஆண்ட்ரூ நியூபெர்க்

உலகின் பிரபல மூளை இயல் நிபுணரும் விஞ்ஞானியுமான ஆண்ட்ரூ நியூபெர்க் தனது அதிசய ஆராய்ச்சிகளின் மூலம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தியை அளித்துள்ளார். இறை நினைவு ஏற்படும்போதெல்லாம் மூளையில் அதிசயத்தக்க விதத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் அது!

ஆண்ட்ரூ நியூபெர்க் பல பிரமிக்க வைக்கும் புத்தகங்களைப் படைத்தவர். 150க்கும் மேற்பட்ட அரிய ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர்கள் வியக்கும்படி சமர்ப்பித்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி பிரிவில் அசோசியேட் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் ஆன்மீகம் மற்றும் மன மையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.

ஆன்மீக அனுபவங்களால் பல்வேறு நிலைகளை அடையும் ஏராளமானோரை அவர் தனது ஆய்வுக்கு உட்படுத்தினார். இதற்காக அவர் கையாளும் தொழில்நுட்ப உத்தியின் பெயர் சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி ( Single Photon Emission Computed Tomography ). இந்த ஆய்வுக்கு உட்படுவோரின் உடல்களில் காமா கதிர்களை வெளிப்படுத்தும் ஒரு வித கெமிக்கல், ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த கதிர்கள் தரும் தகவல்களை ஒரு கணினி சேகரிக்கிறது. அதன் மூலம் அவர்களின் மூளையில் ரத்தம் பாயும் பகுதிகள் பற்றிய படம் சித்தரிக்கப்படுகிறது. எந்தப் பகுதியில் அதிகமாக ரத்தம் பாய்கிறதோ அங்கு மூளை அதிகமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம்.

பிரான்ஸிஸ்கன் நன் களையும் திபெத்திய யோகிகளையும் தனது ஆய்வுக்கு வருமாறு ஆண்ட்ரூ அழைத்தார். மகிழ்வுடன் அவர்களும் இசைந்தனர். சுமார் 15 ஆண்டுகாலம் பென்சில்வேனியாவில் இடையறாது தன் குழுவினருடன் ஆய்வை நடத்தி வந்த ஆண்ட்ரூ மூளையின் முக்கியமான ஆறு பகுதிகளில் இறை உணர்வால் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டறிந்தார்.



அந்த ஆறு முக்கிய பகுதிகள் :

1) முன் மடல் (frontal lobe)


2) லிம்பிக் அமைப்பு (limbic system)
                                         

3)ஆன்டீரியர் சிங்குலேட் (anterior cingulate)




4) அமிக்தலா (amygdale)

                               

5) தாலமஸ்(thalamus)
                                     
                                       
                                        
6) சுவர் மடல்(parietal lobe)




தியானம் அல்லது ஆன்மீக உணர்வுகள் மேம்படும்போது மடல்கள் ஒரு வலிமை வாய்ந்த உணர்வை அனுபவிக்க வைக்கின்றன. ரத்த ஓட்டத்தினால் முன் மடல் மேலே செல்வதற்குப் பதிலாக கீழே செல்கிறது! இதன் மூலம் அவர்கள் கூறும் அல்லது அனுபவிக்கும் அற்புத அனுபவங்கள் உண்மையே என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.

இறை நினைவு அனைத்து மதத்தினருக்கும் ஏற்றம் தரும்

ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இறைவனைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதே மூளையில் வெவ்வேறு சர்க்யூட்டுகள் உருவாகின்றன. ஹிந்து, புத்த, யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இது ஏற்படுகிறது.

அறிவியல் உணர்த்தும் ஐந்து பேருண்மைகள்

பிரான்ஸிஸ்கன் நன்கள் மற்றும் புத்த குருமார்களை நான்கு வருட காலம் சிறப்பாக ஆய்வுக்குட்படுத்திய பின் ஆண்ட்ரூ பின் வரும் உண்மைகளைக் கண்டறிந்தார்.

1) மூளையின் ஒவ்வொரு பகுதியும் கடவுள் பற்றிய வெவ்வேறு கருத்தை அமைத்துக் கொள்கிறது. அதிகம் தியானிக்கத் தியானிக்க கடவுள் இன்னும் அதிக மர்ம புருஷராகிறார்!

(ஒப்பீடு:-சொல் பதம் கடந்த தொல்லோன் போற்றி-மாணிக்கவாசகர் திருவண்டப்பகுதியில்)

2) கடவுள் பற்றிய அமைப்பை ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாக அமைத்துக் கொள்வதோடு, கடவுளுக்கு வெவ்வேறு குணநலன்களையும், மதிப்பையும், அர்த்தத்தையும் கற்பித்துக் கொள்கிறான்.

(ஒப்பீடு:-அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர் என அடி உடையவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் - நம்மாழ்வார்)

3) மத நம்பிக்கையே இல்லாவிட்டாலும் கூட ஆன்மீகப் பயிற்சிகளை ஒருவர் மேற்கொள்ளும்போது உடல் நலமும் உள்ளநலமும் மேம்படுகிறது.
(ஒப்பீடு:-வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே – வள்ளலார்)

4) நீண்ட கால தியானப் பயிற்சி மூளையின் அமைப்பையே முற்றிலுமாக மாற்றி விடுகிறது!இது மூட் எனப்படும் மனநிலையை சீராக ஒரே மாதிரி இருக்கும்படி செய்கிறது.ஆன்ம அறிவை ஏற்படுத்தி புலன் உணர்வுகளை நன்கு உருவாக்குகிறது.

(ஒப்பீடு: அடிமுடியும் நடுவும் அற்ற பரவெளிமேல் கொண்டால் அத்வைத ஆனந்த சித்தம் உண்டாம்: நமது குடி முழுதும் பிழைக்கும்; ஒரு குறையும் இலை – தாயுமானவர்)

5) சாந்தி, சமூகம் பற்றிய விழிப்புணர்வு. தயை ஆகியவற்றிற்கு ஆதாரமான குறிப்பிட்ட மூளை சர்க்யூட்டை அதற்குரிய பகுதியில் வலிமைப்படுத்துகிறது. 
(தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே- மாணிக்கவாசகர் – சிவ புராணத்தில்)

கடவுளை இடைவிடாது நினைக்க நினைக்க அவர் உங்கள் மூளையை நிச்சயம் மாற்றிக்கொண்டே வருகிறார்.

இப்படி ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தில் நம்பிக்கை கொண்டவர்களே அதிக நோபல் பரிசுகளை சமாதானத்திற்காகப் பெற்றதை ஆண்ட்ரூ சுட்டிக் காட்டுகிறார்.மார்ட்டின் லூதர் கிங்.,பிஷப் டெஸ்மாண்ட் டுடு. தலாய் லாமா, மதர் தெரஸா ஆகியோர் உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்கு அவர்கள் உலகின் பால் கொண்டுள்ள அதீத தயை உணர்ச்சியே ஆகும்!

நியூரோபிளாஸ்டிசிடி

நியூரான்கள் ஒரு கட்டத்தில் கற்பதை நிறுத்தி விடுகின்றன என்று மூளை இயல் நிபுணர்கள் இது வரை கருதி வந்தனர். ஆனால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான எரிக் காண்டல்,” மூளை நியூரான்கள் கற்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை.உள்ளும் புறமும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ப நரம்பு செல்கள் மாறுகின்றன.இது வயதானாலும் தொடர்கிறது” என்று கூறுகிறார். இப்படிப் பல கண்டுபிடிப்புகளை இன்று நமக்குத் தரும் புதிய துறையின் பெயர் நியூரோபிளாஸ்டிசி.

ஆன்மீகவாதிகளுக்கு மூன்று ‘C’க்களில் அதிக திறன் ஏற்படுகிறது. Cognition. Communication creativity ஆகிய அறிவுத் திறன், தகவல் தொடர்புத் திறன், படைப்பாற்றல் திறன் மூன்றும் அபரிமிதமாக செழிக்கிறது.இறுதியாக ஆன்மாவை அறியச் செய்கிறது!

ஒழுங்கான முறையான விரதம், தியானம், பிரார்த்தனை, வழிபாடு, இதர மதச் சடங்குகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் போது இரண்டு விதமான மாற்றங்களை ஏற்படுத்துவதை மூளை காண்பிக்கிறது.

ஆன்மீகப் பயிற்சி தரும் அளப்பரிய நன்மைகள்

ஆகவே 
1)உலகில் நிலை பெற்றிருக்கும் கடவுள். 
2)அவரைப் பற்றிய ஆழ்மன நிலையில் நமது அறிவும் அனுபவமும், 
3)வெளிப்படையாக அவரைப் பற்றிய நமது கருத்தினால் முன்மடல், பக்கமடல்,சுவர் மடல் ஆகிய மூளைப் பகுதிகளில் நாம் அமைத்துக் கொள்ளும் அமைப்பு 
ஆகிய மூன்று நிலைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இதற்கு பிரார்த்தனை உள்ளிட்ட அனைத்தும் நமக்கு உதவி செய்து வியக்கவைக்கும் சாந்தியை நமக்கு அளிக்கிறது.
தயை என்பது நமக்கு உயரிய ஆன்மீக அனுபவத்தைத் தருகிறது. இந்த தயை (பிற உயிர்களிடத்து இரக்கம்) உச்சநிலையை எட்டுவதற்கும் நமது ஆன்மீகப் பயிற்சியே அடித்தளமாக அமைகிறது.

மூளையை மாற்றும் இறைவன்

இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக கடவுள் உங்கள் மூளையை எப்படி மாற்றுகிறார் (How God Changes Your Brain) என்ற பல லட்சம் பிரதிகள் விற்பனையான தனது புத்தகத்தில் மார்க் ராபர்ட் வால்ட்மேன் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார் ஆண்ட்ரூ!

இதன் ஆழமான பொருள் அறிவியல் ஆராய்ச்சியால் அல்லவா இப்போது விளங்குகிறது.அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்!!




Thursday, October 31, 2013

திருப்பாவை - 2

பாடல் 2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.

விளக்கம்: ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத்தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள். இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.

Tuesday, October 29, 2013

திருப்பாவை - 1

பாடல் 1
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்

வாஸ்து விளக்கங்கள்

அன்பாலும், எளிமையாலும் எதிர்கொள்ளும்படியாகவா இருக்கிறது இவ்வாழ்வு..?

இதற்கு முன்பும் இத்தனை முன்னேற்பாடுகளோடுதான் வாழ்வை எதிர்கொண்டோமா.? போகிறபோக்கில் வாழ்வை கடக்கிற காலம் ஒன்று நமக்கு இருந்ததேயில்லையா? “எந்த நேரத்திலும, காலுக்கு கீழே பூமி பிளந்து தன்னை இழுத்துக்கொள்ளக்கூடும்” என்ற பதற்றமும, அச்ச உணர்வும் தினவாழ்வின் இயல்பாகிப்போயிற்று.

தன்னை பற்றி மட்டும் சிந்திக்கும் சுயமோகிகளாக மனித மனங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. தரைக்குள் அமிழ்த்தி வீழ்த்தவே மற்றவர்கள் பிறப்பெடுத்து வந்திருப்பதாக எல்லோரும் நம்புகிறோம். ஆதாரத்துடன் கைகுலுக்க நீளும் கரங்களுக்குள் ஆயுதம் துலாவுகிறோம். ஆனால் இது விரும்பிய வாழ்வில்லை, நிர்ப்பந்தம். மறுத்தால் இல்லாதொழிந்து விடுவோமோ என்ற பயத்தில், தற்காத்துக்கொள்ளலின் வெளிப்பாடு. ஓட்டத்தில் பின்தங்கிவிடக்கூடாது என்ற பதற்றத்தின் பக்க விளைவு. அதைத்தான் வலியது வெல்லும் எனச்சொல்லி நியாயப்படுத்திக் கொள்கிறோம்.எல்லோரையும் சந்தேகிக்கிறோம்… புரட்சி செய்வதற்கு அல்ல. பிழைத்து வாழ்வதற்கு..!

கண்ணுக்குத் தெரியாத மைதானத்தில் நிகழும் மாயப்பந்தயத்தில், யாரையோ முந்த ஓடிக்கொண்டிருக்கிறோம். நாம் எப்போதுமே பிரச்சனைகளோடு வாழப் பழகி விட்டோமே ஒழிய, ஆற அமர்ந்து பிரச்சனைகளைத் தீர்த்து பிரச்சனை இன்றி வாழ இயலாமல் போய்விட்டது. இந்த சூழலில, நம் பிரச்சனைகளுக்கு காரணம் வாஸ்து என்றொரு அறிவியல் சார்ந்த ஓர் விஷயத்தை பேச ஆரம்பித்தால்,

வாஸ்து உண்மையில்லை …
வாஸ்து ஏமாற்றுவித்தை …
வாஸ்து பொய் …
என்று சமூக அக்கறையோடு பதிவு செய்யப்படும் குற்றச்சாட்டுகளுக்கு என் பதில்
வாஸ்து என்பது உண்மை.
வாஸ்து என்பது அறிவியல்.

வாஸ்து என்பது மத சம்பந்தப்பட்ட விஷயமில்லை. வாஸ்துவில் யந்திரம், மந்திரம், பூஜை, தாயத்து மற்றும் கண்கட்டுவித்தைகளுக்கு வேலையில்லை.

வாஸ்து விளக்கங்கள் என்றுமே அறிவியல் சார்ந்து தான் கொடுக்கப்படும் என்று அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் ” அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை” என்றார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். பொதுவாக உலகில் உள்ள கண்டுபிடிப்புகள் அனைத்தும் இரண்டு முறைகளில் வகைப்படுத்தப்படும். முதன்மையாக

தர்க்கரீதியான முடிவு ( Logical Conclusions )

குறிப்பிட்ட கண்டுபிடிப்பை தர்க்கரீதியாகத்தான் மெய்ப்பிக்க முடியும் என்பதற்கு கீழ்க்கண்ட உதாரணத்தை எடுத்து கொள்வோம்.

( உ . ம் )

A = B என்றும் B=C என்றும் வைத்து கொண்டால் A=C என்று மெய்ப்பிக்க முடியும்

அடுத்ததாக தர்க்கரீதியாக மெய்ப்பிக்க முடியாத விஷயங்களை புள்ளிவிவரங்களை (Statistics) கொண்டுதான் மெய்ப்பிக்க முடியும் / சொல்ல முடியும். இது அனுபவத்தை அடிப்படையாக கொண்ட ஒரு விஷயமாகும்.

இதே போன்று வாஸ்து என்பது அறிவியலே என்று தர்க்கரீதியாக அனைத்து விஷயங்களையும் மெய்ப்பிக்க முடியாவிட்டாலும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் அனைத்தையும் மெய்ப்பிக்க முடியும்.

வாஸ்து விதிகள்


வாஸ்து சாஸ்திரம் என்பது ஒவ்வொரு மனித வாழ்வின் வெற்றிக்கும் அடித்தளமாக விளங்கக்கூடிய ஒன்றாகும். வாஸ்து விதிகளின் படி ஒரு வீடோ/ தொழிற்சாலையோ அமைக்கப்படும் பொது அங்கு இருக்ககூடிய அனைவருக்கும் எப்பொழுதும் நல்ல ஆற்றலே இருக்கும். என்றும் மன அமைதி , உடல் நலம், செல்வா செழிப்போடு காணப்படுவர். வாஸ்து என்றால் நான்கு திசை மற்றும் நான்கு மூலைகள் கொண்டே கருதப்படுகின்றன. அவை, வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு. மேலும் நான்கு மூலைகள் வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு ஆகும். இவற்றை கொண்டு வாஸ்துவில் அடிப்படையாக கருதப்படும் ஆறு மிக முக்கியமான பொதுவான விதிகள்.


வாஸ்து பொதுவான விதிகள்

1,மனை மற்றும் அதனுள் கட்டப்படும் கட்டிடம் இரண்டும் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும்.

2.வடக்கு மற்றும் கிழக்கில் அதிக காலி இடம் இருத்தல் அவசியம்.

3.தலைவாசல் என்றுமே உச்சத்தில் தான் அமைக்கப்பட வேண்டும்.

4.தெருதக்கமும்(தெருகுத்து) உச்சமாக தான் இருக்க வேண்டும்.

5.உட்புறம் மற்றும் வெளிப்புறம் போடப்படும் படிக்கட்டுகள் அமைக்கப்படும் முறையை அறிவது அவசியம்.

6.வடகிழக்கு பள்ளமாகவும் / கனமில்லாமலும், தென்மேற்கு உயரமாகவும் /கனமாகவும் இருத்தல் அவசியம்.

வாஸ்து இயற்கை பரிகாரம்


இன்றைய நவீன காலகட்டத்தில் வாழும் மக்களுக்கு ஏற்றார் போல், இந்த உலகில் எல்லா இடங்களிலும் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்டன. அக்கட்டிடங்கள் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இல்லாவிடில், அங்கு நிம்மதியற்ற வாழ்வு ஏற்படும், நாம் நமது பிரச்சனையிலிருந்து வெளிவர முயலும்போது அதற்கு ஒரு தீர்வு வரும். அதே போல், வாஸ்து விதிகளின்படி ஒரு வீடோ / வியாபார ஸ்தலமோ அமைக்கப்படவில்லையென்றால். அதற்கான தீர்வு பணத்தினால் வாங்கப்படும் பரிகாரப்பொருட்களில் இல்லை. வாஸ்துவில் என்றுமே தீர்வுகள்(பரிகாரங்கள்) இயற்கை தரக்கூடியதாகவே இருக்கும். இயற்கையால் உண்டாகின்ற தீர்வு ஒன்று மட்டுமே மனித இனத்திற்கு என்றுமே வெற்றி வாழ்விற்கு துணை செய்யும்.

வாஸ்துவில் யந்திரங்களுக்கும், மந்திரங்களுக்கும் வேலை இல்லை. வாஸ்து குறைபாடுகள் உள்ள வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் இயற்கையான பரிகாரம் என்பது கீழ்கண்ட விஷயங்கள் மட்டும் தான்:
வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன், கணவனை பிரிந்த மனைவி, மனைவியை பிரிந்த கணவன், உடல் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பேறு இல்லாதவர்கள், ஆதரவற்ற அனாதைகள் ஆகியோர் வசிக்கும் போதும், வேலை பார்க்கும்போதும் 100% வாஸ்து கோளாறுகள் அந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடம் அங்கு இருப்போரை பெரிய பாதிப்பில்லாமல் வாழவிடுகின்றது. பெரிய பிரச்சனைகளை அந்த இடம் ஏற்படுத்துவதில்லை.(ஒரு இடத்தில் பெரிய வாஸ்து கோளாறுகள் இருந்தும் அந்த இடத்தில் உள்ள ஒருவர் உயரமான நிலைக்கு போகிறார் என்கிறபோது அப்படி போகிறவர் மேலும் உயரமான நிலைக்கு போக வேண்டும் என்ற விதி இருப்பின் அந்த இடமே மேற்சொன்ன பரிகாரங்களை உருவாக்கி கொள்ளும்.)
பசு வளர்ப்பதும் / நாய்கள் வளர்ப்பதும் / காக்கைகளுக்கு பச்சரிசி, எள் அளிப்பது மிகப் பெரிய பரிகாரம்.
பெண் பெயரால் நிலத்தை வாங்குவதும், பெண் பெயருக்கு நிலத்தை கொடுப்பதும், பெண்ணை முன்னிறுத்தி வியாபாரம் செய்வதும் மிகச் சிறந்த பரிகாரங்களாகும்.
தினமும் சூரியனை வணங்குதலும்,சீரான குலதெய்வ வழிபாடும், உண்மையான ஏழைகளுக்கு திருமண உதவி செய்தலும்மிகச் சிறந்த பரிகாரமாகும்.
உண்மையான ஏழைகளுக்கு பசி ஆற்றுதுல், வஸ்த்திர தானம், கல்வி தானம் அளிப்பது சாலச்சிறந்தது.
பெற்ற / வளர்த்த தாய், தந்தையரை எல்லா காலத்திலும் நல்லபடியாக காப்பாற்ற வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையான முறையில் பொருளீட்ட வேண்டும்.
இயற்கைக்கு முரணான முறையில் வட்டி தொழிலில் ஈடுபட்டு பொருள் சம்பாதிப்பது தவறாகையால் அதனை தவிர்த்தல் நல்லது.
எண்ணம், சொல், செயல், எப்போதும் நேர்மையாக இருக்க வடகிழக்கு மூலையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் கண்டிப்பாக ஜன்னல்கள் இருக்க வேண்டும். (24 x 7) ஜன்னல்கள் திறந்தே இருக்க வேண்டும்).

இயற்கைவளம்

இயற்கைவளம் அழிக்கப்படுவதால் மனித இனத்திற்கு "நண்பனாக' விளங்கிய பல பறவைகள் மாயமாகி விட்டது.
சிட்டுக்குருவி,சிட்டுக்குருவி சேதி தெரியுமா... என்ற பாடல் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அந்த சிட்டுக்குருவியை தான் பார்க்க முடியவில்லை. வல்லூறுகள், கரிச்சான், மைனா, காட்டுபுறா, சிரகி, தாரா, உள்ளான், வெள்ளை கொக்கு போன்ற பல பறவை இனங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தது. இவை இப்போது அழிந்து விட்டதோ என்ற அச்சமும், அழிந்து வருகிறதோ என்ற கவலையும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மரங்கள், காடுகள் அழிக்கப்பட்டு மனைகளாகவும், பாலங்களாகவும், சாலைகளாகவும் மாறியது. பறவைகளின் இனப்பெருக்கத்திற்கான சூழ்நிலைகள், தங்கும் வசதிகளில் பின்னடைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுச்சூழலின் பாதுகாவலனாக விளங்கிய பறவையினங்கள் அழிக்கப்பட்டும், அழிந்தும் வருகிறது என இயற்கை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.தொற்று நோய் பரப்பும் இறைச்சிக்கழிவுகளை அகற்றும் பிணம் தின்னி கழுகுகள், காடு, வயல்வெளி மற்றும் பரந்து விரிந்த குப்பைமேடு உள்ளிட்ட திறந்த வெளிகளில் அழுகி கிடக்கும் எலி முதல் மாடுகள் உள்ளிட்ட பல்வேறு இறைச்சிகளை தின்று துப்புரவு பணி மேற்கொண்ட வல்லூறுகள். தேள், பூரான், விஷ வண்டுகளை காலி செய்யும் காடை, கரிச்சான் போன்ற பறவைகள், வீட்டுக்கு வீடு செல்ல பறவையாக வளர்ந்த மைனா ஆகியவை அழிந்து விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மனிதனுக்கு மருத்துவ ரீதியாகவும், சுகாதார ரீதியாகவும் உதவிய அற்புத பறவையினங்கள் இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலும் இல்லாமல் போய்விடும் நிலை காணப்படுகிறது. காடுகளிலும், வயல்களிலும் தோகை விரித்து ஆடி திரிந்த மயில்களும், வெளிநாட்டில் இருந்து இரை தேடி வரும் பொன்னி குருவிகளும் உணவுக்காக வேட்டையாடப்படுகிறது. பொன்னி குருவிகள் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இப்படி பல்வேறு இடையூறுகளின் காரணமாக பறவைகள் இனமே காணாமல் போய்விட்டது. வீடுகளிலும், தோப்புகளிலும் மக்கள் புறாக்களை மட்டும் வளர்த்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட காட்டுநாயக்கன் முன்னேற்ற சங்க தலைவர் சி.முருகேசன் கூறியதாவது;கண்மாய்களில் காணப்பட்ட கொக்குவும் தற்போது காணமுடியவில்லை. வேட்டை முற்றிலும் தடுக்கப்பட்ட நிலையில், பறவைகள் இனமே அழிந்து விட்டது. இவற்றின் நடமாட்டத்தின் போது சிக்குன் குனியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவவில்லை. இயற்கை வளம் அழிக்கப்பட்டதன் எதிரொலியாக பறவைகளின் நடமாட்டம் குறைந்தது.மொபைல்போன் டவர் கதிர் வீச்சுக்களின் தாக்குதலில், பறவை இனம் அழிந்து போயிருக்கலாம். குளத்தில் தவளைகள் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது, என்றார்."இயற்கையை காப்போம்' என்பதை சொல்லளவில் இல்லாமல் செயலளவில் காட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தான் எதிர்கால சந்ததிக்கு, நாம் செய்யும் உதவி என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

முருகர் நிகழ்த்திய அற்புதங்கள்


முருகர் நிகழ்த்திய அற்புதங்கள் என்று பல கதைகள் உண்டு. வரலாற்றுரீதியில் லேட்டஸ்ட்டாக அருணகிரிநாதர் கதையை அறிந்திருப்பீர்கள். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியதால், தொழுநோய் வந்து உற்றார் உறவினர் எல்லோராலும் விரட்டியடிக்கப்பட்ட அருணகிரிநாதர், தான் செய்த தவறுகளை உணர்ந்து இனியும் தான் வாழ்வது வீண் என்று முடிவு செய்து திருப்பரங்குன்றம் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயல்கிறார். அப்போது முருகர் தடுத்தாட்கொண்டு, நல்ல உடல்நலனையும், அருளையும் வாரி வழங்கியது வரலாறு.

அதிகமாக அறிவு வளர்ந்துவிட்ட நமக்கு ‘இதென்னடா, இப்படிக் கதை விடுறானுக..தொழுநோய் வந்துச்சாம்..முருகரும் வந்தாராம்..ச்சூ மந்திரகாளின்னு தொழுநோயை விரட்டினாராம்..நல்லா விட்றுக்காங்கப்பா ரீலு’ என்று தோன்றும். அது ஒன்றும் பெரிய தவறில்லை தான்..அது அப்படியே இருக்கட்டும்..

இன்று நான் என் உறவினர் வாழ்வில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்..இது நடந்தது சரியாக 22 வருடங்கள் முன்பு..அவர் ஒரு கடின உழைப்பாளி. கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களே ஆகியிருந்தது. குழந்தையில்லை. நன்றாக இருந்த மனிதர் திடீரென மெலியத் தொடங்கினார். கூடவே தீராத ஜலதோஷம் வேறு. பல மாத்திரைகளை அவராகவே வாங்கிப் போட்டும் ஒன்றும் கேட்கவில்லை.

உடம்பில் இருந்த சத்தையெல்லாம் யாரோ ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவது போல், தினமும் அவரின் மெலிவு சீராகத் தொடர்ந்து. கூடவே இருமலும் சேர்ந்துகொண்டது. அதன்பின் ஆஸ்பத்திரிக்குச் சென்று காட்டினால் ‘காசநோய்’ என்று சொல்லிவிட்டார்கள். அதுமட்டுமல்ல, மிகவும் முத்திப்போய்விட்டதாகவும், இன்னும் சில மாதங்களே இருப்பார் என்றும் சொல்லிவிட்டார்கள். அப்போது மருத்துவ வசதிகளும் இந்த அளவிற்கு இல்லை. வசதியின்மை காரணமாக அரசு ஆஸ்பத்திரியை விட்டால், வேறு வழியும் இல்லை.

அவர் உழைப்பில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. அவர் இனி அவ்வளவு தான் என்ற செய்தி கிடைக்கவுமே அவர் உடன்பிறப்புகள் இந்தப் பக்கமே வருவதில்லை. நோய் ஒட்டிக்கொள்ளுமோ என்ற பயம் வேறு. கையிலோ காசும் இல்லாமல், வறுமையும் சேர்ந்து அவரைக் கொன்றது. அப்போது அவர் மனைவி செய்தது தான் ஆச்சரியமான விஷயம். அவராலோ வேலைக்குப் போக முடியவில்லை. இனி ரொம்ப நாள் அவர் இருக்கப்போவதும் இல்லை. இனி எதற்கு அவருடன் சேர்ந்து கஷ்டப்பட வேண்டும் என்று நன்றாக யோசித்துவிட்டு, தன் தாய்வீட்டிற்கு கிளம்பிப் போய்விட்டார்.

‘இல்லானை இல்லாளும் மதியாள்’ என்ற அவ்வையின் வாக்கின் அர்த்தத்தை அன்று தான் அவர் உணர்ந்தார். மனம் நொந்தார். உயிருள்ள அனாதைப் பிணமாய் ஆனார். ’இது என்ன வாழ்க்கை..சிறு நோய் வந்தால் எல்லாமே தலைகீழாய் மாறிவிடுமா? இதற்கா இத்தனை ஆட்டம், கொண்டாட்டம்’ என்று யோசித்தார். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை. அவருக்கு அவர்களது குடும்பம் அடிக்கடி சென்று வழிபடும் ஸ்ரீவாளசுப்பிரமணியர் கோவில் ஞாபகம் வந்தது. அது ராஜபாளையம் அருகே தென்மலை என்ற கிராமத்து மலைமேல் உள்ளது. மிகச் சிறிய கோவில். முருகர் மட்டுமே அங்கு உண்டு. யாரும் அடிக்கடி அங்கு போக மாட்டார்கள். ஏறிச்செல்வதும் கஷ்டம். அங்கே அப்போது கட்டிடங்களும் ஏதும் கிடையாது. ஒதுங்க நிழலும் கிடையாது. ஆனால் ஒரு நாழிக்கிணறும், சிறு குட்டை போன்ற தெப்பமும் உண்டு.

தான் இனி அதிக நாள் இருக்க மாட்டோம் என்று அவருக்கே தெரிந்தது. இந்த மனிதர்களிடையே சாவதைவிட அங்கு சென்று முருகன் காலடியில் உயிரை விடலாம் என்று முடிவு செய்தார். அந்த முருகரைப் பற்றி பலகதைகள் உண்டு. எங்கள் தாத்தா ஒருவர் ஒரு நள்ளிரவில் அந்த மலையில் இருந்து கோமணம் கட்டிய ஒருவர், கையில் தடியுடன் உலாத்தியதைக் கண்டிருக்கிறார். எனவே அந்த சக்தி வாய்ந்த மலைக்குப் போய், அங்கேயே வயனம் காப்பது என்று முடிவு செய்தார்.

வயனம் காத்தல் என்பது ஏறக்குறைய துறவு நிலை. கோவிலே கதி என்று உட்கார்ந்து விடுவது. அங்கு என்ன கிடைக்கிறதோ, அதை மட்டுமே உண்டு வாழ்வது. அந்த மலையில் த்ண்ணீரைத் தவிர வேறேதும் கிடையாது. எப்போதாவது யாராவது வந்தால், சாப்பாடு தருவார்கள். இல்லையென்றால் அதுவும் அவன் சித்தம் என்று சும்மா உட்கார்ந்து விடுவது.

அவர் அப்படியே அங்கு அமர்ந்தார். ‘ஏன் எனக்கு இந்த நிலைமை? வாழ வேண்டிய வயதில் ஏன் என்னை நோயாளி ஆக்கினாய்?’ என்று தினமும் அழுதபடியே முருகரைப் பார்த்துக் கேட்டுக்கொண்டேயிருந்தார். காசநோயும் முத்திக்கொண்டே போனது. இப்படியே ஏறக்குறைய ஆறுமாதங்களுக்கு அவர் தனித்திருந்தார். உடம்பில் சதை காணாமல் போய், எழும்பும் உருகத் தொடங்கியிருந்தது. சளி உடலை அரித்துத் தின்றுகொண்டிருந்தது.

அவர்-மலை-முருகர் மூவர் மட்டுமே இருந்தனர். நாளாக நாளாக அவரே மலை போல் தன்னைப் பற்றிய உணர்வற்றவராய் ஆனார். தன் உடலை மறந்தார், நோயையும் மறந்தார். முருகரை மட்டுமே நினைந்தார். கோவணாண்டி மட்டுமே அவருக்குத் தெரிந்தார். இவரும் சிலையாய் முருகர் சன்னதி எதிரே சமைந்திருந்தார். ஒரு கார்த்திகை மாத நள்ளிரவில் அவருக்கு ஒரு குரல் கேட்டது. ”எழுந்து உள்ளே வா” என்று கர்ப்பகிரகத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. அவர் எழுந்து உள்ளே போனார். அங்கே முருகரின் சிலை இல்லை. கண்ணை கூசச் செய்யும் ஒளி மட்டுமே அங்கே இருந்தது. அவருக்கு இது கனவோ என்று தோன்றியது. ஆனால் தான் கருவறைக்குள் நின்றுகொண்டிருப்பதும் அவருக்குத் தெரியவில்லை. அவருக்கு ஏதும் சொல்ல வராமல் அழுதார், அங்கேயே சரிந்து உட்கார்ந்து அழுதார். அப்படியே தூக்கம் அவரை இழுத்துக்கொண்டது.

மறுநாள் காலையில் உடலில் பலம் கூடியிருப்பது போல் தெரிந்தது. இருமல் இல்லை. சந்தேகத்துடனே தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே இருந்தார். சளியோ இருமலோ இல்லவே இல்லை. அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. ‘முருகா..முருகா’ என்று ஆனந்தக் கூத்தாடினார். மலையில் இருந்து இறங்கி ஊருக்குள் போய்ச் சொன்னார். மனைவியும் திரும்பி வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு பழைய நிலைக்கு மாத்திரைகள் இல்லாமலே திரும்பியது. டாக்டர்களுக்கும் ஆச்சரியம் தான். சொந்தங்களுக்கும் ஆச்சரியம் தான்.

இப்போதும் அவர் செவ்வாய்-வெள்ளியன்று அதிகாலையில் அந்த முருகர் கோவிலுக்குப் போய் வருகிறார். ஒவ்வொரு மாத கார்த்திகை நட்சத்திர நாளன்று அவர் பொறுப்பில் பூஜையும் நடத்தப்படுகிறது. எனக்கு அவர் சித்தப்பா முறையாவார். இப்போது அவருக்கு இரண்டு குழந்தைகள். நல்ல வசதியுடன் முருகன் அருளால் வாழ்கிறார்.

சென்ற வருட கார்த்திகைத் திருவிழாவின்போது, அந்தக் கோவிலில் அவருடன் இருந்தேன். இன்றும் அவர் பக்திகுறையாமல் ஒவ்வொரு படி ஏறும்போதும் முருகா..முருகா என்று அழைத்தபடியே வந்தார். முருகரின் அருளுக்குச் சாட்சியாக அவர் வலம் வருவதை பலரும் சுட்டிக் காட்டிப் பேசிக்கொண்டிருந்தனர். ‘இது எப்படிச் சாத்தியம்?” என்று இப்போது புதிதாக அவரைப் பார்த்த எல்லோருமே கேட்டார்கள்.

அது அவருக்கு எப்படித் தெரியும்?

அதை அவன் மட்டுமே அறிவான்.

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

கோவிலுக்குச் செல்லும் வழி:

ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் பருவக்குடி-முக்குரோடு பஸ் ஸ்டாப்பில் இறங்கவும். அங்கிருந்து தனியே சிவகிரிக்கு ஒரு சாலை செல்லும். அதில் சென்றால் இரண்டாவது ஊர் தென்மலை. அங்கே மலை மேல் வீற்றிருக்கின்றார் ஸ்ரீவாள சுப்பிர மணியர். சிறிய கோவில், இப்போது கொஞ்சம் எடுத்துக் கட்டியுள்ளார்கள். வெள்ளிக்கிழமை மட்டுமே பூஜை நடக்கும். ஆனாலும் மற்ற நாட்களிலும் நல்ல அதிர்வு இருக்கும் இடம் அது. யாருமே இல்லாத நேரத்தில் தரிசிப்பதும் நல்ல அனுபவம்.

நம்பினோர் கைவிடப்படார்...!

Monday, October 28, 2013

நீங்களும் சம்பாதிக்கலாம் - ஷேர் மார்க்கெட்


மாதா மாதம் 10% வருமானத்தை பற்றிய , பதிவையும், சில பின்னூட்டங்களையும் படித்தவர்கள் - ஷேர் மார்க்கெட்டில் நான் பரிந்துரைத்த மெத்தட் எதுவென்று புரிந்திருக்க கூடும்....!
                                                                                                                                                                                 It is - OPTIONS INDEX trading. (NIFTY).

சில BASIC விஷயங்களை - உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டிய / தேவையானவற்றை மட்டும் கீழே விவரிக்கிறேன் :

1) முதலில் உங்களுக்கு - PAN CARD இருப்பது முக்கியம். இல்லையென்றால், உடனே அப்ளை செய்யுங்கள். இப்போதெல்லாம், அதிக பட்சம் இரண்டு வாரங்களிலேயே கிடைத்து விடுகிறது.

2) இரண்டாவது உங்களுக்கு DEMAT அக்கௌன்ட் இருப்பது அவசியம். HDFC , ICICI மாதிரி இருக்கிற பெரிய வங்கிகளில் இருந்தால் ONLINE ,TELE BANKING பண்ண வேண்டிய சூழ்நிலைகளில் வசதியாக இருக்கும். உங்கள் அருகில் இருக்கும் வங்கியை அணுகினால், ஒரே நாளில் வேலை முடிந்துவிடும்.

Account புதிதாக தொடங்கினால் - ஒரே சமயத்தில் சேவிங்க்ஸ் , டீ மேட் மற்றும் F & O அக்கௌன்ட் என THREE - IN - ONE அக்கௌண்டை தொடங்குங்கள்...!

நாம் சொல்லவிருக்கும் வழி முழுவதும் F & O சம்பந்தப்பட்டது. F & O ஆக்டிவேட் செய்ய, நீங்கள் ஏதாவது ஒரு வங்கியில் குறைந்தது ஆறு மாத காலத்திற்கு பரிவர்த்தனை செய்து இருக்க வேண்டும். அந்த ஸ்டேட்மென்ட் இருந்தால் மட்டுமே , F & O - ஆக்டிவேட் செய்வார்கள்.

இதுவரை நீங்கள் வேறு எந்த வங்கியிலும், உறுப்பினராக இல்லையென்றால், ஆறு மாதம் நீங்கள் பொறுத்து இருந்தாக வேண்டும். வேறு வழியில்லை..! இப்போதாவது Savings Bank account தொடங்கி விடுங்கள்....! பின்னால் உபயோகப்படும்.

F & O என்றால் - FUTURE & OPTIONS என்று பெயர்.

நீங்கள் இந்த அக்கௌன்ட் ஆக்டிவேட் செய்து விட்டு , மேலே என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்......

 இந்த கட்டுரையின் நோக்கம் - உங்களுக்கு ஷேர் மார்க்கெட் பற்றிய நெளிவு, சுளிவு எல்லாம் கற்றுக் கொடுத்து - உங்களை ஷேர் மார்க்கெட்டின் சிங்கம் , புலி ஆக்க வேண்டும் என்பது கிடையாது....! நீங்கள் ராவும் , பகலும் கண் முழித்து மார்க்கெட் நிலவரம் பற்றி Follow பண்ண வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இப்போது இருப்பது போலவே, தொடர்ந்து உங்கள் வேலையை மட்டும் செய்து கொண்டு இருந்தாலே போதும்.

என்னுடைய நோக்கம் - உங்களாலும் வாழ்க்கையில் நேர்மையான முறையில் சம்பாதிக்க முடியும், என்கிற விதையை விதைப்பது மட்டுமே. உங்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தி, ஷேர் மார்க்கெட்டில் , குறைந்தது 10% சம்பாதிக்க ஒரு சுலபமான, உறுதியான ஒரு முறையை உங்களுக்கு சொல்லிக் கொடுப்பது மட்டுமே! சரியாக பற்றிக்கொண்டீர்களே யானால், உங்கள் பரம்பரையே உங்களுக்கு கோவில் கட்டி கொண்டாடும்...!

ஷேர் மார்க்கெட் பற்றி பொதுவா, தெரிஞ்சுக்க வேண்டிய சில விஷயங்களை பார்ப்போம் : ஒரு கம்பெனி பப்ளிக் லிமிட்டெட் ஆ இருக்கிறப்போ - அந்த கம்பெனியோட குறிப்பிட்ட சதவீத ஷேர் களை மார்க்கெட்ல விற்கும். முதன் முதலில் விற்ப்பதற்கு IPO என்று பெயர்.

நீங்க தான் ஒரு கம்பெனிக்கு ஓனர் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்க முதல் ஒரு கோடி என்று வைத்துக் கொள்ளுவோம். 100% சதவீதம் ஷேர்களுக்கும் நீங்கள் தான் ஓனர். ஒரு ஷேர் விலை பத்து ரூபாய்னு வைச்சுப்போம். So , உங்க கிட்ட பத்து லட்சம் ஷேர் இருக்குது.

சரி, இப்போ இதுவே பப்ளிக் லிமிட்டெட் கம்பெனியா இருக்கிறப்போ நீங்க - உங்களோட வியாபார அபிவிருத்திக்காக - இன்னொரு ஒரு கோடி தேவைப்படுதுன்னு வைச்சுப்போம்...! பப்ளிக் கிட்ட இருந்து பணம் கலெக்ட் பண்ணப்போறீங்க. உங்க கிட்ட இருக்கிற ஷேர்மதிப்புல 10% நீங்க விற்ப்பதற்க்கு முடிவு எடுக்கிறீங்க....! So , ஒரு லட்சம் ஷேர் - அதோட ஒரிஜினல் Face Value ஒவ்வொரு ஷேர்க்கும் பத்து ரூபாய் தான். நீங்கள் சந்தையில் QUOTE பண்ணப்போற குறைந்த பட்ச விலை - ஒவ்வொரு ஷேர்க்கும் நூறு ரூபாய் என்று வைத்தால் தான், உங்களுக்கு ஒரு கோடி கிடைக்கும் இல்லையா? இப்படி முதல் முறை விற்ப்பதைத் தான் IPO என்று சொல்கிறார்கள்....( Initial Public Offer )

சரி, நீங்க நூறு இல்லை , ஆயிரம் கூட சொல்லலாம், வாங்க ஆள் இருந்தா! உங்க கம்பெனிக்கு நல்ல பேர் இருந்தால் , கடந்த வருடங்களில் நல்ல வருமானம், லாபம் இருந்தால் - நீங்கள் சொன்ன நூறு ரூபாய் விலைக்கு மேல் , நூற்றிப் பத்துக்கு நான் வாங்கிக் கொள்கிறேன், நூற்றி பதினொன்று, பனிரெண்டு என்று orders வரும்.... அதிக பட்சம் யார் கேட்டு இருக்கிறார்களோ , அவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்து , உங்கள் ஒரு லட்சம் ஷேர்களும் முடியும் வரை, நீங்கள் விற்க முடியும்...!

சரி, உங்க கிட்ட இருந்து நான் நூறு ஷேர் - நூற்றி ஐம்பது ரூபாய்க்கு வாங்குறேன்னு வைச்சுப்போம்.....! நாளைக்கு இன்னொருத்தர் - ஐம்பது ஷேர் இரு நூறு ரூபாய்க்கு கேட்கிறார், எனக்கு அந்த ரேட் ஓகே... அவருக்கு நான் கொடுத்திடுறேன்...! இப்போ அந்த ஒரு ஷேரோட வேல்யூ இருநூறு ரூபாய் ஆகிவிட்டது. மீதி என் கையில ஐம்பது ஷேர் இருக்குது. கொஞ்ச நேரம் கழித்து இன்னொருத்தர் நூற்றி தொண்ணூறு ரூபாய்க்கு கிடைக்குமா என்று கேட்கிறார். இதுவும் எனக்கு கட்டுபடியாகிறது... நான் விற்று விடுகிறேன் . இப்போ அதோட ஒரு ஷேர் வால்யூ 190/- ஆகிறது. இப்படி, எந்த விலைக்கு வாங்குவதற்கு ரெடியாக இருக்கிறார்களோ - அந்த விலைதான், அதோட மதிப்பு.... இதுதான் EQUITY ஷேர் ..... யார் கையில் இது இருக்கிறதோ , அவர்கள் அந்த கம்பெனியின் பங்குதார்கள்.... அவர்களுக்கு அந்த கம்பெனியில் அவர்கள் வைத்து இருக்கும் பங்குகளைப் பொறுத்து உரிமை உண்டு...!

அதனால் , சந்தைக்குன்னு வந்தபிறகு, ஒரு கம்பெனியோட மதிப்பு ஏறலாம் , அல்லது இறங்கலாம்... இதைத்தான் TV இல இந்த கம்பெனி, இன்னைக்கு இவ்வளவு புள்ளி ஏறி இருக்குது, அல்லது இறங்கி இருக்குதுன்னு சொல்றது...!

இந்த மெத்தட் தான் - ஷேர் மார்க்கெட்ல இருக்கிறவங்க , பெரும்பாலானவங்க செய்து கொண்டு இருக்கிற விஷயம்....! ஆனா, ஆயிரத்துல ஒருத்தார் தான் இதில சக்சஸ் ஆக இருக்கிறாங்க...! நமக்கு இது வேண்டாம்....!

கம்மாடிட்டி - தங்கம்,வெள்ளி யிலிருந்து , மிளகு , மஞ்சள் வரைக்கும் சந்தையில் நீங்கள் விலை குறைவாக இருக்கும் பட்சத்தில் வாங்கி , அதிகமாகும் பட்சத்தில் விற்கலாம்...! அதேமாதிரி FOREX - currency trading பண்ணலாம்...! இதெல்லாம், ஓரளவுக்கு மார்க்கெட் பற்றிய Knowledge , மார்க்கெட் Watch , Follow -up அவசியம் வேணும்....! பைசாவை உள்ள போட்டுட்டு, நீங்க அக்கடான்னு இருக்க முடியாது...! பதைபதைப்பு , டென்ஷன் எகிறும்...!

அதையெல்லாம் விடுங்க..! கத்துக்க முடியாத விஷயம்னு எதுவும் இல்லை...! முயற்சி பண்ணினால், இதைப் பற்றியெல்லாம் தெரியாமலா போய்விடும்..! ஆனா, நம்ம அதிர்ஷ்டம்னு ஒன்னு இருக்குல்லே, தலைஎழுத்து...! எங்கே போனாலும் நம்மளை விடவா போகுது...? மேலே ஏற்றி, கீழே கவிழ்த்து விடும் என்கிற பயம் கூட வர்றதில்லை சார் இப்போ எல்லாம். மேலே ஏற விடுறதே இல்லை..... ஒரு படி ஏறினால் , இரண்டாவது படியிலேயே கீழே தள்ளிவிடுகிறது ... இப்படித்தானே இருக்குது நம்மளை மாதிரி சாமான்யர்களுக்கு ...!

நான் சொல்ல வர்ற மெத்தட் , இந்த நிலைமையையும் உங்களுக்கு மாற்ற வல்லது...! ஆமாம் சார்.... ! ஒவ்வொரு படியா, ஏறி ஏறி உண்மையிலேயே மேலே போகவைக்கும் எல்லாரையுமே...! அப்படி இருக்கிறதாலதான் , நான் உங்களுக்கு இதை சொல்லிக்கிட்டு இருக்கேன்..! உங்களின் இடைவிடாத பிரார்த்தனையால், இறைவன் உங்கள் கோரிக்கைக்கு செவி சாய்த்து, உங்களுக்கு நல்லது செய்ய அவர் திருவுளம் கொண்டு , இந்த பதிவை நீங்க படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார் என்பதை, நீங்கள் விரைவில் உணர்வீர்கள்.!

சரி,எப்படின்னு .பார்ப்போம்.!

இப்போ மேலே ஒரு கம்பெனி மார்க்கெட் EQUITY ஷேர் ஏறுது , இறங்குதுன்னு சொன்னேன் இல்லையா? இந்த மாதிரி கம்பெனிங்க எல்லாம் இருக்கிற சந்தைக்கு NSE (National Stock Exchange) ன்னு பெயர். அதோட குறியீட்டு இன்டெக்ஸ் - நிப்ட்டி ன்னு சொல்வாங்க...! (NIFTY). இதுல முக்கியமா ஒரு ஐம்பது கம்பெனிங்க இருக்கிறது. அந்தந்த நாளில் இந்த ஐம்பது கம்பெனிகளின் , ஏற்ற இறக்க நிலவரத்தை பொறுத்து, NIFTY இன்றைக்கு இத்தனை புள்ளி ஏறி இருக்கிறது, இறங்கி இருக்கிறது என்று சொல்வார்கள். இதே மாதிரி தான் BSE (BOMBAY STOCK EXCHANGE) - நமக்கு BSE பற்றி ஒன்றுமே தேவையில்லை.

NIFTY பற்றி மட்டும் பார்ப்போம்...!

NIFTY இன்னைக்கு நிலவரத்துல 5850 புள்ளிகள் என்கிற நிலவரத்தில் இருக்கிறது. இப்போ சந்தையில் உள்ள கம்பெனிகளின் நிலவரத்தைப் பொறுத்து அது ஏறலாம், அல்லது இறங்கலாம்.....! சமயத்தில் ஒரே நாளில் இருநூறு புள்ளிகள் கூட ஏறலாம், இறங்கலாம். அது ரொம்பவே அதிகம். ஐம்பது , அறுபது புள்ளிகள் என்பது ஆவரேஜ் . நூறு புள்ளிகள் என்பது குட் மூவ்மென்ட்.

எப்படி ஒரு கம்பெனியோட ஷேர் வாங்குறமோ, அதே மாதிரி - இந்த NIFTY இன்டெக்ஸ்- ஐயும், நாம ட்ரேட் பண்ணலாம். உதாரணத்துக்கு, NIFTY ஒரு 5200 இலிருந்து 6200 வரை போகும் என்று வைத்துக் .கொள்வோம். இப்போ 5850 இல் இருக்கிறது. இப்போ நாம வாங்கினால் , அது ஏறும்போது நமக்கு லாபம். இறங்கினால் நஷ்டம். இந்த இன்டெக்ஸ் trade பண்ணுவதற்கு FUTURE என்று பெயர். ஒரு லாட் என்பது 50 எண்ணிக்கை. So, ஒரு லாட் வாங்க நமக்கு (50 x 5850) ரூபாய் தேவைப்படும். கிட்டத்தட்ட Brokerage கமிஷன் எல்லாம் சேர்த்து ஒரு மூன்று லட்ச ரூபாய் வரும். நமக்கு கட்டுபடி ஆகாது... இல்லையா?

இதிலேயே OPTIONS என்று ஒன்று இருக்கிறது. இதில இரண்டு பிரிவு இருக்கிறது. ஒன்னு CALL & இன்னொன்னு PUT . நூறு , நூறு புள்ளிகள் வித்தியாசத்தில லாட் இருக்கும். 5000, 5100, 5200,5300 , 5400.... இப்படி. இந்த மாதத்தில் இருந்து 50 புள்ளிகள் ஸ்லாட் வந்துவிட்டது.

ஒருவரே எத்தனை CALLs வேண்டுமானாலும், எத்தனை PUTs வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்...! உங்கள் கையில் இருக்கும் பணத்தைப் பொறுத்து...!

ஒரு புள்ளியை எடுத்து CALL 6000 என்று வாங்கினால், அந்த புள்ளியை கடந்து போக, போக நமக்கு காசு அதிகமாகும். அதே மாதிரி PUT 5700 என்று வாங்குவோம் என்று வைத்துக் கொள்வோம்... NIFTY 5700 க்கு கீழே வர, வர நமக்கு காசு கிடைக்கும். இதில டைம் லிமிட் இருக்கிறது. ஒவ்வொரு மாத Validity இருக்கிறது. நீங்கள் இந்த மாத contract வாங்கினால். இந்த மாதம் முடிவதற்குள் அதை விற்க வேண்டும். அல்லது Expiry ஆகிவிடும்.

ஒவ்வொரு மாத கடைசி வியாழக்கிழமை அந்த காண்ட்ராக்ட்டின் கடைசி நாளாக இருக்கும். நீங்கள் இன்று ஒரு செப்டம்பர் மாத contract வாங்கினால், செப்டம்பர் 26 ஆம் தேதி அது expire ஆகும்.

உதாரணத்துக்கு இந்த மாத 6000 Call - வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்... ஒரு எண்ணிக்கை 65 ரூபாய் என்று இருக்கிறது. ஒரு லாட் (50 x 65 = 3250 ரூபாய் வரும்.) இன்றைக்கே நீங்கள் அக்டோபர் 31 ஆம் தேதி வாங்கினால் அது சுமார் 100 ரூபாய் இருக்கும். நவம்பர் வாங்கினால் 140 ரூபாய் இருக்கலாம். மூன்று மாத Validity வரை வாங்கலாம்...!

சரி, செப்டம்பர் 26 CALL 6000 வாங்குகிறீர்கள்..... மார்க்கெட், அதாவது NIFTY நீங்கள் வாங்கிய உடனே ஏற ஆரம்பிக்கிறது என்று வைப்போம்...! உடனே நம்மளைப் போல அதே லாட் வாங்க நிறைய பேர் முற்படுவார்கள்.... ! அதனால்,அந்த ரேட் அதிகமாக தொடங்கும். 66,67, 68 , 69 என்று.... ஐயா, ஒரு எண்பது ரூபாய் வரை ஆகிவிட்டது .... நீங்கள் விற்க நினைக்கிறீர்கள்...! விற்றுக்கொள்ளலாம். ஒரு எண்ணிக்கை வாங்க, விற்க ரெண்டும் சேர்த்து - Brokerage சுமார் ஐந்து ரூபாய் ஆகும். எனவே,நீங்க 65 ரூபாய்க்கு வாங்கினால், 70 ரூபாய்க்கு மேலே போகும்போது விற்றால் தான் உங்களுக்கு லாபம். அதைப் புரிந்துகொள்ளவும்...! உங்கள் கையில் உள்ள பணத்திற்கு 10 லாட் வாங்கினீர்கள் என்றால், 10x 50 = 500 Qty. நீங்கள் வாங்கியது 70 ரூபாய்க்கு.விற்றது 80 ரூபாய்க்கு. So 500 x 10 = 5000 ரூபாய் உங்களுக்கு லாபம்.

சரி, இன்னைக்கு தேதி 15. இன்னும் 12 நாள் இருக்கிறது. அதனால் வாங்குவதற்கு ஆட்கள் நிறைய பேர் இருப்பார்கள். இதுவே 25 ஆம் தேதி என்றால்,இதே நிலைமையில் அந்த பிரீமியம் 20 ரூபாய்க்கும் குறைவாக இருக்க கூடும். 20 ரூபாய்க்கே நீங்கள் விற்க நினைத்தால், ரிஸ்க் எடுத்து வாங்க ஆள் இருக்காது. ஏன் என்றால், இன்னும் இரண்டு நாளில் 5850 இலிருந்து 6000 வரை போகுமா என்று தயக்கம் இருக்கும் இல்லையா?

சரி, 26 செப்டம்பர் அன்று மார்க்கெட் 6178 என்று முடிகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் CALL 6000 வைத்து இருந்தால், ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் 178 ரூபாய் உங்கள் கணக்கில் கிரெடிட் ஆகும்.

மார்க்கெட் 5999 இல் முடிந்தால், உங்களுக்கு பணம் எதுவும் கிடைக்காது.

புரிகிறதா?

சரி, நீங்கள் CALL ஆப்ஷனுக்கு பதிலாக PUT 6000 வைத்து இருந்தால், மார்க்கெட் 6000 புள்ளிக்கு எத்தனை புள்ளி குறைவாக முடிகிறதோ , அத்தனை பணம் உங்களுக்கு கிடைக்கும். 6000 க்கு மேல் முடிந்தால், உங்களுக்கு எதுவும் கிடைக்காது...! ஓகே...?

So , EXPIRY வரை வெயிட் பண்ணி இருக்கிற நிலைமை என்றால், இந்த மாதிரி. இல்லையா, TRADE ஆகும்போது , நீங்கள் வாங்கிய விலைக்கு அதிக விலையில் விற்க முடிந்தால், நீங்கள் எதிர் பார்க்கும் நிலைமை வந்தால்,விற்றுவிட வேண்டியது...!

இன்னொன்னு என்ன புரியுது? நாம வாங்கும்போது - அந்த Contract க்கு expiry க்கு முன் TRADING DAYS அதிகமா இருந்தால், நமக்கு விற்கிறது ஈசி. அதனால், நாம் வாங்கிறது முதல் நாளிலேயோ அல்லது ஒரு இரண்டு மூன்று நாட்களுக்குள்ளேயோ, அதிக பட்சம் ஒரு பத்து நாட்களுக்குள்ளேயோ வாங்கி விட்டால், நாம ரிலாக்ஸ் ஆக இருக்கலாம். கரெக்டா...?

சரி, மார்க்கெட் ஏறுமா அல்லது இறங்குமா என்று எப்படி சொல்ல முடியும்? நாமளே SHARE MARKET க்குப் புதுசு....! நாம எப்படி சொல்ல முடியும்?

நீங்க இல்லை , உலகத்துல இருக்கிற எந்த 'எக்ஸ்பெர்ட்' டும் தெளிவா சொல்ல முடியாது. விடிய விடிய ஆராய்ச்சி பண்ணினாலும், யாரும் தெளிவாக கணிக்க முடியாது...! சோதனையா, எந்த நேரத்துல CALL வாங்குறமோ, அதுக்கு நேர் எதிரே மார்க்கெட் இறங்க ஆரம்பிக்கும்...! அப்புறம்,நெஞ்சை பிடிச்சுக்கிட்டு உட்கார வேண்டியதுதான்.

அப்போ வழி?

நான் ஏற்கனவே சொன்னேனே ...! ஒருவரே, CALL & PUT ரெண்டுமே வாங்கிக்கலாம் என்று...! உங்க கிட்ட இருக்கிற பணத்திலே பாதிக்கு , மார்க்கெட் மேலே போகும் என்று NIFTY அன்றைய நாளில் இருக்கிற புள்ளியில் இருந்து ஒரு நூறு புள்ளி மேல CALL OPTION வாங்கிக்கோங்க.. மீதி பாதி பணத்துக்கு நூறு புள்ளிகள் கீழே PUT OPTION வாங்கிக்கோங்க!

இப்போ, ரிலாக்ஸ் ஆக இருக்கலாம்...!

நீங்கள் AIM பண்ணுவது வெறும் 10% டார்கெட் தான். நீங்கள் 10,000 முதலீடு செய்து இருந்தால், கால் + புட் ரெண்டும் சேர்ந்து , பதினோராயிரம் வருகிறதா என்று பாருங்கள்....! ஒரு பக்கம் ஏறும் பணம் , இன்னொரு பக்கம் இறங்கி இருக்கும். இரண்டையும் கூட்டி , உங்கள் டார்கெட் அமௌண்ட் வந்த உடனே SELL பண்ணிவிட்டு , ஜம்மென்று உட்காருங்கள்.

நீங்கள் ஒரு மாதம் வரை வெயிட் பண்ணும் அவசியம் கண்டிப்பாக இருக்காது. மாதத்தில் குறைந்தது மூன்று, நான்கு தடவையாவது நிப்ட்டி மூவ்மெண்ட் ஹெவியாக இருக்கும். சமயத்தில் ஒரே நாளில் கூட வந்துவிடும். வந்தபிறகு, சீக்கிரமே வந்து விட்டால் , உங்களுக்கு விருப்பம் இருந்தால் அடுத்த பொசிஷன் எடுக்கலாம். இல்லை அடுத்த மாத contract கூட வாங்கி உட்காரலாம். இல்லையா, EXPIRY முடிந்த முதல் நாள் , திரும்பவும் உள்ளே நுழையுங்கள்..!

ஒன்றை மட்டுமே திரும்ப திரும்ப நினைவு படுத்துகிறேன். இதில் இருப்பது எல்லாம் , நீங்கள் உழைத்து சம்பாதித்த பணம். வெறுமனே புள்ளிகள் வைத்து விளையாடும் கம்ப்யூட்டர் கேம்ஸ் கிடையாது.பொறுமை வேண்டும். பேராசை நிச்சயம் இருக்க கூடாது. முக்கியமாக பணம் கையில் இருக்கும்போது, சும்மா உட்கார்ந்து இருக்கும் வித்தை உங்களுக்கு வர வேண்டும். இருக்கிறதுலேயே ரொம்ப கஷ்டம் இதுதான்...! அதை மட்டும் கத்துக்கோங்க..!

இருக்கிற, பணத்தை இப்படி போடு, அப்படிப் போடு என்று ஒரே மாதத்தில் சம்பாதிக்கணும் என்கிற எண்ணமே இருக்க கூடாது.

எந்த காலத்திலும் BUY பண்ணும்போது ஒரே சைடு வியாபாரம் பண்ணாதீங்க..! CALL / PUT ரெண்டுமே ஒரே நேரத்தில் வாங்குங்க...! பண விஷயத்தில் உங்கள் அதிர்ஷ்டத்தை எப்போதுமே பரிசோதிக்க வேண்டாம்..!

பொறுமையாக நாலு வருஷம் - அஞ்சு வருஷம் காத்து இருங்கள்...! நிச்சயம் நீங்கள் போடும் பணம் - பல நூறு மடங்கு பெருகும்...!

சரி, ஒரு CASE STUDY பார்க்கலாம்.....

சென்ற ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி NIFTY expiry அன்று 5409.05 இல் முடிந்து இருக்கிறது. நான் சொன்ன வழிமுறைப்படி

நீங்கள் வெள்ளிக்கிழமை 30 ஆம் தேதி காலையில் ஒரே ஒரு லாட் 5500 call OPTION & ஒரு 5300 PUT OPTION இரண்டையும் வாங்கி இருப்பீர்கள். இல்லையா?

www.nseindia.com என்ற தளத்தை திறந்து பாருங்கள்....

மேலே ஒரு search box மாதிரி தெரிகிறதா? EQUITY , EQUITY DERIVATIVE , CURRENCY DERIVATIVE என்று இருக்கும்...!

அதில் , EQUITY DERIVATIVE க்ளிக் செய்து NIFTY என்று டைப் செய்யுங்கள். CNX NIFTY என்று வரும். GET QUOTE க்ளிக் செய்யுங்கள்.

இப்போது INSTRUMENT TYPE என்ற இடத்தில், INDEX FUTURE என்று தெரிகிறதா? அதில் INDEX OPTION என்பதை தேர்வு செய்யுங்கள்...

இப்போது, NIFTY , EXPIRY DATE , OPTION TYPE , STRIKE PRICE என்று இருப்பதில், CALL மற்றும் 5500 செலெக்ட் செய்யுங்கள்...

நேற்றைய தேதியில் 395.75 க்கு கடைசியாக யாரோ வாங்கி இருக்கிறார்கள்... (LTP - Last traded Price ) 393.25 க்கு 500 நம்பர் வாங்க ரெடியா இருந்து இருக்கிறாங்க...

அதுக்கு கீழே FUNDAMENTALS & HISTORICAL PRICES இருக்குதா? அதில், HISTORICAL PRICES க்ளிக் செய்யுங்கள்....!

அதில் , 1 month data செலக்ட் செய்து GET DATA க்ளிக் செய்யுங்கள்.

ஆகஸ்ட் 30 ஆம் தேதி இதை நீங்கள் வாங்கும்போது opening 99 இருப்பதால், அனேகமாக நூறு ரூபாய்க்கு ஒரு லாட் ( 50 X 100) , 5000 ரூபாய் கொடுத்து வாங்கி .இருப்பீர்கள்..! அதன் பிறகு, மேலே அது என்னென்ன வால்யூவில் trade ஆகி இருக்கிறது பார்த்தீர்களா? (OPEN , HIGH , LOW , CLOSE ) பாருங்கள்...! அந்த 30ஆம் தேதி மட்டும், CALL 5500 மட்டும் வாங்க, விற்க ரெண்டும் சேர்ந்து 3647 கோடிக்கு வர்த்தகம் நடந்து இருக்கிறது. நாம 5000 ரூபாய்க்குத் தான் வாங்கி இருக்கிறோம். நாட்டுல எவ்வளவு பேரு, விவரமா திரியிறாங்க, நமக்கு இப்போத் தான் இதைப் பத்தியே தெரிய வருது.. பாருங்க..!

சரி, இப்போ PUT 5300 பார்ப்போம்...அதே மாதிரி திரும்ப வந்து GET DATA செலக்ட் பண்ணுங்க...! 30 ஆம் தேதி 173 ரூபாய்க்கு open ஆகி இருக்கு. ஒரு 7000 கோடிக்கு வர்த்தகம் நடந்து இருக்கு.

நாம ஒரு 175 ரூபாய்க்கு ஒரு லாட் வாங்கி இருப்போம்...! (50 x 175 = 8750). இன்னைக்கு அது வெறும் 9.95 க்கு trade ஆகிருக்கு.

ஆக நாம் வாங்கியது மொத்தம் = 100 + 175 = 275. Brokerage - ஒரு லாட் வாங்க - ரூபாய் 2.50 ; விற்க 2.50 ; ஆக மொத்தம் பத்து ரூபாய் ஆச்சா?

275 + 10 = 285 ரூபாய்க்கு மேலே வந்தா , நமக்கு லாபம்...! கரெக்டா?
இன்னைக்கு அது எவ்வளவு இருக்கு?

CALL 5500 : ரூபாய் : 393.25

PUT 5300 : ரூபாய் : 9.95

ரெண்டையும் கூட்டினால்.... ரூபாய் : 403.20 வருது...!

நம்ம காசு : 285 ரூபாய்... எவ்வளவு லாபம் பார்த்தீங்களா...? எழுபது சதவீதம்....70% ..... எண்ணி 15 நாட்களில்....! அப்புறம் ஏன் சார் , லட்சக்கணக்கான கோடின்னு உள்ளே வந்து பைசா குவியாது?

நாம வருஷக் கணக்குல வேலை பார்க்கிறோமே,கம்பெனிகள் அவங்களோட வருஷ PROFIT - EBT 15% வந்தா, அந்த முதலாளி , சந்தோசமா இருப்பாரு... கம்பெனி நல்ல போகுதுப்பானு ..! வருஷத்துக்கு 15% க்கே அப்படி... இங்கே...!?

சரி, நாம எதிர்பார்க்கிற....10% , அதாவது 285 ரூபாய்க்கு - ரூபாய் 314 /- எவ்வளவு நாளில் வந்தது பார்த்தீர்களா? ஆறாம் தேதி வந்து இருக்கிறது... அந்த ஒரு நாள் விட்டு பிள்ளையார் சதுர்த்தி முடிந்த மறுநாள் 10 ஆம் தேதி , அது ரூபாய் 462க்கு வந்தது...!

ஒவ்வொரு மாசமும் கொடுத்துக்கிட்டு இருக்கு...!

இப்போ புரியுதா.. நான் எப்படி அவ்வளவு உறுதியா , மாதா மாதம் அந்த 10% அதிகமாகிற கணக்கை உங்களுக்கு எடுத்துச் சொன்னேன்னு..?

இது இப்போ இருக்கிற மார்க்கெட் TREND க்கு அடுத்த மாசமும் கொடுக்கும்.. இன்னும் சில வருஷங்களுக்கு கொடுக்கும்...!

FUTURE ல ஒரு நாள் - இல்லை இந்த மெத்தட் , இந்த மாசம் வொர்க் அவுட் ஆகாதுங்கிற அளவுக்கு இருந்தா... நான் கண்டிப்பா சொல்றேன்.. கூவி , கூவி சொல்றேன், இந்த மாசம் வேண்டாம்... வெயிட் பண்ணுங்கன்னு...! அப்போ மட்டும் உஷாரா இருங்க..!

மத்தபடி, நீங்க தைரியமா அந்த கடவுளை நம்பி இறங்குங்க..!

உங்களுக்கு இந்த விஷயம் தெரியணும்னு நினைச்சது அவரால் தானே...! உங்கள் வேண்டுதல் பலிக்கப் போகிறது ! கடவுள் இருக்கிறார் சார்... ! நாம எல்லோரும் அவருக்கு நன்றி சொல்வோம்!

அடிச்சு, உரிமையா கெஞ்சி கேட்டதுக்கு எனக்கு ஒரு வழி காட்டி, உன்னை மாதிரி, இன்னும் நிறைய பேர் இருக்கிறாங்க, அவங்களுக்கும் சொல்லிக்கொடுன்னு நினைச்சு இருப்பார் போல...!

நாம என்னைக்காவது பார்க்கிறப்போ...! சார், நீங்க சொன்ன வழியிலே நான் கடன் எல்லாம் அடைச்சு, வீடு வாங்கி இருக்கிறேன்.. கார் வாங்கி இருக்கிறேன்...! என் பொண்ணு பெரிய காலேஜ்ல படிக்கிறா, பொண்ணுக்கு கல்யாணம் ஆகி இருக்குன்னு ....மனசுக்குள்ளே நீங்க நினைப்பீங்க பாரு...! அது போதும் எனக்கு .!

ஒரே ஒருத்தர், சின்சியரா , பொறுமையா - வாழ்க்கையில் இதை சாதிச்சுக் காட்டினால் , நிறைய , திருப்தி வர்ற அளவுக்கு சம்பாதிச்சு - , முடியாத இல்லாத ஏழைகளுக்கு உதவி பண்ணினால், இந்த விஷயத்துக்கு நானும் உங்களுக்கு ஒரு சிறிய கருவியாக இறைவன் என்னை உபயோகப்படுத்தியதில் - நான் வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் ஒரு சாதித்த திருப்தி எனக்கு இருக்கும்.!

நான் சொல்ற வழியிலே சம்பாதிக்கிற டெக்னிக் எல்லாம் விடுங்க..!

இப்போ, இந்த மொமென்ட் என்ன சார் நினைக்கிறோம்? இந்த கடன் எல்லாம் முடிஞ்சுட்டா, ஒரே ஒரு நாள் கடன் இல்லாம அந்த வாழ்க்கை வாழ்ந்தாக் கூட போதும்ன்னு நினைக்கிறோமா இல்லையா..? வட்டிக்கு கொடுக்கிற காசு இல்லாம, வாங்குற சம்பளம் மட்டும் கைக்கு நின்னா போதும்பா ஆண்டவான்னு கேட்கிறோமே..! அதுக்கு இதை விட பெஸ்ட் வழி எதுவும் கிடையாது...!

நிறைய சம்பாதிங்க....! சந்தோசமா இருங்க...! இப்போ இருக்கிற கஷ்டமான நிலைமையை எவ்வளவு மேலே வந்தாலும் மறக்காதீங்க..! உங்களால் முடிஞ்ச அளவுக்கு, இல்லாதவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க...!

வாங்குறது, விற்கிறது எல்லாம் நீங்களே, ONLINE ல பண்ணலாம், அல்லது STAFFs இதுக்குன்னே இருக்கிறாங்க...!அவங்களுக்கு போன் பண்ணி சொன்னால் போதும்...! இதுக்கு தனியா brokerage கிடையாது..! அதுனால, நாங்க ஆபீஸ்ல நெட் எல்லாம் பார்க்க முடியாதுன்னு பீல் பண்ணாதீங்க.! இப்போ எல்லாம், கையில இருக்கிற 'மொபைல்'லேயே trading வேலையை எல்லாம் முடிச்சிடுறாங்க...! உலகம் எங்கேயோ போய்க்கிட்டு இருக்குது..! அதனால நம்மளால் முடிஞ்ச அளவுக்கு கூட ஓடுவோம்... ! கண்டிப்பா ஒரு நாள் ஜெயிப்போம்.!

என்ன சார்...! படிச்சுப் பார்த்தீங்களா...? புரியலைனா, திரும்ப திரும்ப கேளுங்க..! மெயில் பண்ணுங்க...! முழுசா, புரிஞ்சுக்காம விடாதீங்க..! ஷேர் மார்க்கெட் பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவருக்கு, இந்த கட்டுரை முழுவதும் புரிந்தால் அது போதும்...! அப்படி இல்லைன்னா, புரிய வைக்கும்வரை, உரிமையோடு உங்கள் சகோதரன் போல எண்ணி, என்னை தொந்தரவு செய்து கொண்டே இருங்கள்..!

இறை அருள் இருந்தால், மீண்டும் ஒருநாள் கலந்துரையாடல் நடத்தலாம்...! பார்க்கலாம்..! அப்பொழுது இன்னும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கிளியர் செய்துக்கலாம்.

படிச்ச பிறகு, ஷேர் மார்க்கெட் இவ்வளவு ஈசியான்னு நினைச்சுக்காதீங்க.! அது ஒரு பெரிய புதைகுழி, பெரிய பெரிய யானைகளை எல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டுருக்கு! எவ்வளவோ நேரம் விரயம் செய்து, எவ்வளவோ பணம் இழந்து-ஜெயித்து, பல மாதங்கள் நானே எக்ஸ்பீரியன்ஸ் கெயின் பண்ணின பிறகு, எனக்கு தோன்றிய SAFEST METHOD இது...! எதோ விளையாட்டு போக்குல நெட்ல உளறித் தள்ளி இருக்கிற விஷயம்னு நினைச்சுக்காதீங்க...! ஷேர்ல ஏற்கனவே நொந்து நூலானவங்களுக்கு இதோட அருமை தெரியும்..! நெறைய பேருக்கு இந்த மெத்தட் இன்னும் தெரியாது. தெரிஞ்சாலும் சொல்லிக் கொடுக்க ஆள் கிடையாது. மனசு கிடையாது.

So, Undoubtedly You are all blessed to know about this method..! Enjoy ! Wish you all to get the great thrilling experience and excellent future...!

இப்போதைக்கு இது போதும்னு நினைக்கிறேன்...!

இன்னும் சில பொதுவான விஷயங்கள், விளக்கங்கள் இன்னும் சொல்ல வேண்டியது இருந்தால் - வரவிருக்கும் பதிவுகளில் பார்க்கலாம்...!

Wednesday, October 9, 2013

செல்வம் தரும் திருமண்


ஆண்டாள் அவதரித்த துளசி தோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்றும் உள்ளது. இங்கும் ஆண்டாளுக்கு ஒரு சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியின் முன்னால் துளசி மாடம் உள்ளது. இதில் இருக்கும் மண்ணை பக்தர்கள் சிறிதளவு எடுத்து கொள்கிறார்கள்.

இந்த மண்ணை வீட்டில் வைத்தால் தேவையான நேரத்தில் தேவையாக செல்வம் கிடைக்கும் என நம்புகின்றனர். சிலர் இந்த மண்ணை நெற்றியிலும் பூசிக் கொள்கிறார்கள். மாடத்தின் அடிப்பகுதியில் ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டு உள்ளது

சேலம் ஸ்ரீ ராஜ கணபதி ஆலயம்

சங்கடங்கள் அகல்
*******************
காரணம் எதுவும் தெரியாது துன்பங்களுக்கு மேல் துன்பம் என்ன செய்யவது என்று எண்ணுவோர் .சேலம் ஸ்ரீ ராஜ கணபதி ஆலயம்  சுகவனேஸ்வர ஸ்வாமி கோவிலின் தேர் நிலைக்கு அருகில் உள்ளது.
மாதா மாதம்  சங்கட ஹர சதுர்த்தி ஹோமம்  நடை பெறுகிறது.ஒரு முறை தரிசித்துவிட்டு உங்களால் இயன்ற அல்லது ஹோமதிர்கான முழு தொகையும் செலுத்திவிட்டு வாருங்கள் உங்கள் துன்பங்களை  அய்யன் கணேசன் பார்த்துகொள்வான் .

முகவரி ஸ்ரீ
சுகவநேஸ்வரசாமி தேவஸ்தானம் மேற்பார்வை
சேலம்
சேலம் மாவட்டம் 6360001

தொடர்புக்கு
சுகவனேஸ்வரர் கோயில் அதிகாரி
04272450954

Tuesday, October 8, 2013

ஆசைப் பட்டதை அடைவது எப்படி? - ஒரு அற்புத , ஆன்மீக வழிகாட்டுதல்

திடீரென்று , ஒரு மலையாள பத்திரிகை கொடுத்து படிக்க சொன்னால் , உங்களால் படிக்க முடியுமா? முடியாது இல்லையா... ஏன்? மலையாளம் படிக்கலை , அதனாலே நமக்கு புரியலை. அந்த மாதிரி இறைவன் ஒருவர் இருக்கிறதை நாம உணர்றதுக்கு நமக்கு உதவுவது தான் , கோவில்கள் , மந்திரங்கள், தியானம் இப்படிப் பல விஷயங்கள்.

நீங்க ட்ரெயின்லே போய்க்கிட்டு இருக்கிறீங்க . உங்களுக்கு ஹிந்தி தெரியும்னு வைச்சுப்போம்.. பக்கத்திலே ரெண்டு பேர் ஹிந்தி பேசுறாங்க..
என்னதான் நீங்க ஒரு புத்தகத்தை படிச்சுக்கிட்டு இருந்தாலும், உங்க காது , மனசு அவங்க பேசுறதை கவனிக்க ஆரம்பிக்கும்.. இல்லையா? நீங்க எதோ ஒரு வேலையா இருக்கிறீங்க ... அப்போ , உங்க பேர் சொல்லி , யாரோ ஒருவர் கூப்பிட்டதும், திரும்பி பார்க்கிறீங்க இல்லையா?

அதே மாதிரி - இறைவனை , அவனது கோவிலில் சென்று , நீங்கள் இந்த மந்திரங்கள் சொல்லி அழைக்கும்போது - அவனும் உங்களுக்கு செவி சாய்ப்பான்.. ராகு கால வேளையில் - லலிதா சஹஸ்ரநாமமோ, அல்லது சிவ ஆலயங்களில் ஸ்ரீ ருத்ரமோ, சமகமோ சொல்லும்போது - நீங்கள் அந்த பரம்பொருளால் நேரடியாக கவனிக்கப்படுவீர்கள்..... இது போதாதா ?
கடவுளை எப்படி வேண்டுவது?

உங்கள் தீராத பிரச்னைகளை , தீர்க்க சொல்லி - மனதில் மன்றாடுங்கள். உங்கள் குழந்தை ஒரு சில விஷயங்களில் அடம் பிடிக்குமே. சமயத்தில் , அந்த குழந்தை கேட்காமலே வாங்கி கொடுப்பீர்கள். சமயத்தில் , அது அழுது , முரண்டு பிடித்தாலும் - உங்களுக்கு அதை நிறைவேற்ற சக்தி இருந்தால் வாங்கி தருவீர்கள். இல்லையெனில் , உங்கள் இயலாமை , அந்த குழந்தைக்கு முதுகில் ஒரு அடியாக வெளிப்படும். அடித்த பிறகு , உங்களுக்கும் மனசு வலிக்குமே... !

இதில் ஒன்றை கவனியுங்கள். வேண்டும் ஒரு விஷயம் , கிடைக்க வேண்டும் என்பதற்காக - குழந்தை உங்கள் கவனத்தை திருப்புகிறது. அதற்குத் தெரியும், நீங்கள் மனது வைத்தால்... அந்த ஆசையை நிறைவேற்ற முடியும். அந்த கோரிக்கை , நியாயமானது எனில், நீங்கள் உடனே இல்லையெனினும், விரைவில் அந்த ஆசையை பூர்த்தி செய்ய முயலுவீர்கள்.. பிற்காலத்தில், ஒரு சில கெடுதல் ஏற்படும் விஷயங்கள் , என்று இருந்தால் - எப்பாடு பட்டாவது , அதை தடுக்க முயல்வீர்கள்.. இல்லையா?

அதே தான் சார்.. உங்கள் கோரிக்கை என்னவென்று மனதுக்குள் வேண்டுங்கள்.. கச்சா முச்சான்னு இருக்க வேண்டாம்.. ஒரே விஷயம்.. நியாயமான கோரிக்கையா இருக்கட்டும்.. !
உங்கள் ஆசையை நிறைவேற்ற யார் இருக்கிறா ? உங்கள் இஷ்ட தெய்வம்..

எப்படி , அந்த தெய்வத்தோட கவனத்தை உங்க மேல திருப்பப் போறீங்க? அடிக்கடி அந்த தெய்வத்தோட சன்னதிலே போய் நில்லுங்க.. பதிகம் பாடுங்க, ஸ்லோகம் சொல்லுங்க.. விரதம் இருங்க... ! மந்திரங்கள் எனக்கு புரியலையே என்று நீங்கள் வருத்தப்படாதீர்கள்.. I need something to eat ... என்று நீங்கள் புரியாமல் சொன்னால் கூட , ஆங்கிலம் தெரிந்த உங்கள் நண்பர் , உங்களுக்கு சாப்பிட ஏற்பாடு செய்வார்.. இந்த மந்திரங்கள் அனைத்தும், அவன் அருளால் , அவன் பக்தர்களுக்கு - சில நற்காரிய , காரணங்களுக்காக உருவானவையே.. ! அவனுக்கு இதன் அர்த்தம் நன்றாகவே புரியும் !

ஒரு ஆபீஸ்ல ப்ரோமோசன் வாங்குறதுக்கு நீங்க என்ன பாடு எல்லாம் படுறீங்க..? எவ்வளவு வித்தை எல்லாம் செய்யுறீங்க.. அதுக்கு அப்புறம் நீங்க தகுதி வாய்ந்தவர்ங்கிறதை அவங்க உணர்ந்துட்டா , உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்குது இல்லையா? அதே மாதிரி அத்தனை வித்தையையும், கடவுள் கிட்டேயும் நீங்க காட்டனும்.

கண்டிப்பாக திறமை மதிக்கப்படுவது போலே , உங்களுக்கும் இறைவன் முழு கருணை அளிப்பான்... சற்று தாமதம் ஆகலாம் .. ஆனால் , வெகுமதி நிச்சயம்.. நீங்கள் அவன் குழந்தை.. உங்களை ஏங்க வைத்து , அவன் சந்தோசம் அடையப்போவது இல்லை..

உங்கள் பெற்ற தாயிடம் வேண்டுவது போல , உரிமையுடன் - அந்த உலக மாதாவிடம் கேளுங்கள்.. ! தாய்க்கு கருணை ரொம்ப அதிகம்.. ! ஒரு எறும்பு , குருவி மேல் கூட பாசம் வைக்கும் அன்னை , உங்கள் மேல் இன்னும் பாசமுடன் இருப்பாள்.

தந்தை , உங்கள் திறமைக்கு ஏற்ப கொடுப்பவர். அதனால் , உங்கள் திறமையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் எந்த துறையில் இருந்தாலும், அந்த துறையில் வல்லவராக முயற்சி செய்யுங்கள்.. குழந்தை திறமை சாலி எனில், முதல் ஆளாக ஊக்குவிப்பது தந்தை தான்.. !

என்ன தான் உமை அன்பைப் பொழிந்தாலும், ஈசன் உங்கள் திறமை வளர்க்க சந்தர்ப்பம் கொடுத்து , அதன் பின் உங்கள் ஆசை நிறைவேற செய்வான். !

அதனால் , அந்த பரம்பொருளின் கவனத்தை திருப்புங்கள். உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.. !

ஆசை பட்டது , கிடைக்கும்போது - மனம் அடையும் ஆனந்தத்திற்கு அளவு இல்லை.. !!

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!

( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)

நட்ச்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.
சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.
இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில்

தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.
எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.
உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்
சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால்

பார்க்க முடியுமா..?முடியாது !
அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...
என் கையை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கை' உண்டு.
என் காலை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கால்' உண்டு.
நான் என் கண்ணை பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை, ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..? அது தவறு !
கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பிம்பம் தெரியும்...! அதைப்போல் விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது.
இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..
இது என்ன பூ எனக்கேட்டால்
அதன் பெயரை சொல்லலாம்..!
நிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்
இது எந்த இடத்தில் கிடைக்கும் என்வும் சொல்லிவிடலாம்..ஆனால்..
அதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால் "முகர்ந்து" பார் என்றுதான் சொல்லமுடியும்!
கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டால்..உணர்ந்துப்பார் என்றுதான் சொல்லமுடியும்!
( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)






Posted by Treasure at 8:34 AM
x