Friday, May 30, 2014

ஆக்க மனப்பான்மையே அரும்பெருஞ்செல்வம்

நீங்கள் வெற்றிபெறப் பிறந்தவர்; நினைத்தை முடிக்கும் ஆற்றல் பெற்றவர்; விரும்பியதை அடையும் தகுதியும் திறமையும் இயற்கையாகே உங்களிடம் உள்ளன. உங்களைப் போன்றுதான் எல்லா மனிதர்களுமே படைக்கப்பட்டுள்ளனர்.

 இயற்கை, மனிதன் வளர்வதற்கேற்ப, உயர்வதற்கேற்ப, முன்னேறுவதற்கேற்ப, வெற்றிபெறுவதற்கேற்ப, அவன் உடலையும், மனதையும் நுணுக்கமாக உருவாக்கியுள்ளது. ஆனால், பெரும்பாலான மனிதர்கள் வறுமையில் வாடுகின்றனர். பற்றாக்குறையில் பரிதவிக்கின்றனர். தோல்வியில் துவண்டுபோய் இருக்கின்றனரே! இது ஏன்?

 நீங்கள் எதிர்மறைச் சிந்தனை என்னும் சிறையில் அகப்பட்டுக் கொண்டீர்கள். வேறு எரும் உங்களைச் சிறையில் அடைக்கவில்லை. சிறையை அமைத்தவரும் நீங்கள்தான். அதனுள் அடைத்துக் கொண்டவரும் நீங்கள் தான். சுதந்திரத்தை இழந்து துன்பப்படுபவரும் நீங்கள்தான். எவராவது நம் அறையை நோக்கி வர மாட்டார்களா? கதவைத் திறக்க மாட்டார்களா? நம்மைச் சிறைமீட்க மாட்டார்களா? என்று ஏங்கிக் கொண்டுள்ளீர்கள்.

 சிறைக்கதவில் உள்ள “முடியாது, நடக்காது, ஆகாது, கிடைக்காது” என்னும் நான்கு கம்பிகளையும் எண்ணிக் கொண்டுள்ளீர்கள். “வறுமை, பற்றாக்குறை, தோல்வி” ஆகிய சிறையிலிருந்து நீங்கள் விடுதலை பெறுவது எப்படி? ஒன்று முடியாது, ஆகாது, கிடைக்காது என்னும் நான்கு கம்பிகளையும், வளைத்து முறித்துக்கொண்டு வெளியில் வரவேண்டும். அல்லது சிறைக்கதவின் பூட்டைத் திறக்கும் சாவி எங்கே, எவரிடம் உள்ளது என்று கண்டுபிடிக்க வேண்டும். 

உங்கள் விடுதலையைத் தடை செய்யும் கம்பிகளை முறிப்பது கடினமானதன்று. அத்துடன் சிறைக்கதவின் பூட்டைத்திறக்கும் சாவி உங்களிடமே உள்ளது என்பது ஒரு ஆச்சரியமான, அதிர்ச்சிதரும் உண்மை. “எதிர்மறை எண்ணம்” என்னும் கற்களால் சிறையை அமைத்து, “முடியாது, நடக்காது, ஆகாது, கிடைக்காது” என்னும் கம்பிகளால் கதவை அமைத்து, உங்களை நீங்களே சிறையில் அடைத்துக்கொண்டு, கதவைத் திறக்கும் சாவியை சட்டைப்பையில் போட்டுக் கொண்டீர்கள். “மனம்” என்னும் சட்டைப்பையில் “எண்ணம்” எனும் சாவியைப் போட்டது நீங்கள்தான். ஆனால், பூட்டுவதற்குப் பயன்பட்ட எண்ணம் என்னும் சாவிதான் திறப்பதற்கும் பயன்படும் உண்மை உங்களுக்கு தோன்றவில்லை. 

உண்மையில் உங்களை விடுதலையாக்கும் “ஆக்கமனப்பான்மை” என்னும் சாவி உங்கள் மனம் என்னும் சட்டைப் பையில்தான் உள்ளது. அதை நீங்கள் எடுக்க வேண்டும், அடைத்துக் கொண்டதும் “எண்ணம்” என்னும் சாவியால்தான்; சிறைக்கதவின் பூட்டைத்திறக்கப் பயன்படுத்தப்போவதும் “எண்ணம்” என்னும் சாவிதான். எண்ணம் என்னும் சாவிக்கு இரு முக்கள் உண்டு. ஒன்று ஆக்க முகம். மற்றொன்று எதிர்மறை முகம் ஆயினும் சாவி ஒன்றுதான். 

அப்படியானால், ஆக்கமனப்பான்மை, என்றால் என்ன? அச்சாவியை கொண்டு வறுமை என்னும் சிறைக்கதவின் பூட்டைத்திறந்து, வெற்றி என்னும் விடுதலையை அடைவதுஎப்படி? என்று அறிவதில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. நல்லது. அறிந்துகொள்வோம். 

நீங்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில்வெற்றி பெற விரும்புகிறீர்கள் அல்லது தொழில், வணிகத்தில், ஐந்து ஆண்டுகளில் ஒருகோடி ரூபாய் சம்பாதிக விரும்புகிறீர்கள். அல்லது நீங்கள்பணியாற்றும் கல்லூரியின் முதல்வர் ஆக விரும்புகிறீர்கள். அல்லது தமிழ் நாட்டளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆக விரும்புகிறீர்கள் அல்லது தமிழ் நாட்டு அமைச்சராக விரும்புகிறீர்கள். மேற்கூறிய குறிக்கோளில் ஒன்றை அல்லது உங்கள் ஆசையில் ஒன்றை மட்டும், தேர்ந்தெடுத்து அதற்கான முயற்சியில் இறங்கிவிட முடியுசெய்யுங்கள். 

நீங்கள் தேர்ந்தெடுத்த குறிக்கோளை நினைத்துக்கொண்டே சற்று நேரம் கண்களை மூடுங்கள். கண்களை மூடிய நிலையிலேயே ‘என் குறிக்கோளில் நான் வெற்றிபெற முடியுமா?’ என்று வாய்விட்டுக் கேளுங்கள். மீண்டும் மீண்டும் சில நிமிடங்களுக்கு இதே கேள்வியைக் கேளுங்கள். நீங்கள் கேட்ட கேள்விக்கு ‘முடியும்’ என்னும்பதில் கிடைத்திருக்கலாம். சிலருக்கு ‘முடியாது’ என்னும் பதில் கிடைத்திருக்கலாம். குறிக்கோளை நிறைவேற்றத் தேவையான சம்பவங்கள் நடக்குமா? “நடக்கும்” நான் செய்ய விரும்பும் சாதனைக்கான உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்குமா? “கிடைக்கும்” . நான் செய்துவரும் முயற்சிகள் ஒன்று சேர்ந்து சாதனையாக மாறுமா? “மாறும்”.

 நீங்கள் கேட்ட வினாக்களுக்கெல்லாம் உங்களுக்குள்ளிருந்து “முடியும், கிடைக்கும், நடக்கும் ஆகும், வேண்டும். இருக்கிறது” என்னும் பதில்கள் கிடைக்குமானால் நீங்கள் ஒரு நேர்மறைச்சிந்தனையாளர். நீங்கள் கேட்ட வினாக்களுக்கு உங்களுக்குள்ளிலிருந்து “முடியாது, கிடைக்காது, நடக்காது, ஆகாது, இல்லை” என்னும் பதில்களைப் பெறுவீர்களானால் நீங்கள் ஒரு எதிர்மறைச் சிந்தனையாளர். 

நீங்கள் புரிந்துகொண்டாலும் இல்லாவிட்டாலும் இவ்விருவகைச் சிந்தனைகள்தான் உங்கள் வாழ்க்கையை நிர்ணயித்திருக்கின்றன. அல்லது நிர்ணயிக்கப் போகின்றன. மீண்டும் ஒருமுறை அதே கேள்விகளைக்கேட்டு முடியும். நடக்கும், கிடைக்கும், ஆகும் போன்ற பதில்களை அழுத்தமாக உணர்ச்சியோடு, மனப்பூர்வமாச் சொல்லிப்பாருங்கள். உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி த்தும்பும்; முகம் விரிவடையும், உடல் பூரிக்கும்; மனதில் தெம்பு உண்டாகும். 

அதே கேள்விகளை மீண்டும் கேட்டு, முடியாது, நடக்காது, ஆகாது என்னும் பதில்களை உணர்ச்சியோடு சொல்லிப்பாருங்கள். உங்கள் உள்ளத்தில் கவலையும், ஏமாற்றமும் உதிக்கும்; முகம் சோர்ந்து போய்விடும்; மனதில் இருக்கும் தெம்பு இறங்குவதை நீங்களே உணர முடியும். 

ஆக்கச் சிந்தனையால் ஏற்படும் உடல் உணர்ச்சி மாறுதல்களை நீங்களே அனுபவித்து அறியலாம். எதிர்மறைச் சிந்தனையால் உண்டாகும் உடல், உணர்ச்சி மாறுதல்களையும் நீங்களே அனுபவித்து உணரலாம். ஒரே ஒருமுறை முடியும், நடக்கும், ஆகும், கிடைக்கும் என்று நினைத்தாலே உடலும், உள்ளமும் மாற்றம் அடைகின்றன. பல்லாயிரம் முறை இதே ஆக்கச்சொற்களை திரும்பத்திரும்பச் சொல்லி உள்ளத்தில் பதியவைத்தால், அப்பதிவு உங்கள் உடலிலும், உள்ளத்திலும், உண்விலும் மிகப்பெரும் மாற்றத்தைத் தோற்றுவித்து விடுகின்றன. 

‘என்னால் எதுவும் முடியும்; நான் நினைப்பது எல்லாம் நடக்கும்; நான் கேட்பது எல்லாம் கிடைக்கும். நான முயல்வது எல்லாம் ஆகும்’ என்னும் நம்பிக்கை உடலோடும், உள்ளத்தோடும், உணர்வோடும் கலந்து விடுகிறது. ஒரே ஒருமுறை முடியாது, நடக்காது, கிடைக்காது, ஆகாது என்று நினைத்தாலே உடலிலும், உள்ளத்திலும் எதிர்மறை மாற்றம் ஏற்படுகிறது. பல்லாயிரம் முறை இதே எதிர்மறைச் சொற்களைத் திரும்ப திரும்பச் சொல்லிப் பதியவைத்தால், அப்பதிவு உங்கள் உடலிலும், உள்ளத்திலும், உணர்விலும் மிகப்பெரும் எதிர்மறை மாற்றங்களைத் தோற்றுவித்து விடுகின்றன. என்னால் எதுவும் முடியாது; நான் கேட்பது எதுவும் கிடைக்காது; நான் கேட்பது எதுவும் கிடைக்காது; நான் நினைப்பது எதுவும் நடக்காது; நான் முயல்வது எதுவும் ஆகாது என்னும் அவநம்பிக்கை உடலோடும், உள்ளத்தோடும் உணர்வோடும் கலந்துவிடுகிறது. நம்பிக்கை நம்மோடு கலக்கும்போது வெற்றி, செல்வம், மகிழ்ச்சி, ஆரோக்கியம், புகழ் பெருமை ஆகியவை நம்மை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. அவநம்பிக்கை நம்மோடு கலக்கும்போது தோல்வி, வறுமை, கவலை, நோய், தாழ்வு, சிறுமை ஆகியவை நம்மை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. 

இப்போது நேர்முகச்சிந்தனை எதிர்மறைச் சிந்தனை ஆகிய இரண்டில் ஒன்றை நீங்ள்ளே தேர்ந்தெடுக்கலாம். எதைத் தேர்வு செய்கிறீர்கள்; நிச்சயம் நேர்முகச் சிந்தனையைத்தேர்வு செய்வீர்கள். “எதுவும் என்னால் முடியும்; நான் நினைத்தபடியே நடக்கும்; விரும்பியது எல்லாம் கிடைக்கும்; நான் முயல்வது எல்லாம் ஆகும்” என்று திரும்பத் திரும்ப சொல்லுங்கள். கண்களை மூடிக்கொண்டு சொல்லுங்கள்; திறந்துகொண்டும் சொல்லுங்கள். உறங்குவதற்கு முன்னர் சொல்லுங்கள். உறங்கி எழுந்த பின்னரும் சொல்லுங்கள். நின்றுகொண்டும், நடந்துகொண்டும் அமர்ந்துகொண்டும், படுத்துக்கொண்டும் சொல்லுங்கள். நீங்கள் இதைச் சொல்லச் சொல்ல உங்கள் ஆழ்மனதில் இருந்த எதிர்மறைப் பதிவுகள் மறைந்துகொண்டே வருகின்றன. மறைந்த இடத்தில் ஆக்கப்பதிவுகள் படிந்து விடுகின்றன. 

மனதைப் பற்றிய முக்கியமான ஒரு விதி ஈர்ப்பு விதியாகும். “முடியும்” என்று நினைத்தால் முடிப்பதற்குத் தேவையான அறிவு, திறமை, வசதி, வாய்ப்பு, உதவி, ஒத்துழைப்பு ஆகியவற்றை மனமே ஈர்த்துக்கொடுக்கும். “நடக்கும்” என்று நினைத்தால் நடப்பதற்குத் தோதான நடவடிக்கைகளையும், சம்பவங்களையும் மனமே ஈர்த்துத் தரும் “ஆகும்” என்றுநினைத்தால் ஆவதற்குரிய வாய்ப்பை உங்கள் மனமே ஈர்த்துத் தரும். முடியாது, நடக்காது, கிடைக்காது, ஆகாது, ஆகிய எதிர்மறைச் சொற்களை நீங்கள் இனி மனதால் நினைக்கவும் கூடாது; வாயால் சொல்லவும் கூடாது, உங்கள் அகராதியில் எங்கெல்லாம் இச்சொற்கள் வருகின்றனவோ அங்கெல்லாம் கிறுக்கி அவற்றை மறைத்து விடுங்கள். அதன்பின்னர், உங்கள் எல்லாச் செயல்களுமே முடியும், நடக்கும், கிடைக்கும், ஆகும் என்னும் அடிப்படையில் அமைந்துவிடும். “உங்களால் முடியும்; முடியும் என்று நினைத்தால்” என்று நார்மன் வின்சன்ட் பீல் கூறுகிறார். “உங்களால் ஒரு காரியம் முடியும் என்று நினைத்தாலும் முடியாது என்று நினைத்தாலும் இரண்டும் உண்மைதான்” என்று கூறுகிறார் என்றிபோர்டு. இவ்விரு வாக்கியங்களிலும் வெற்றியின் இரசிகயம் அடங்கியுள்ளது. 

‘என்னால் மாவட்ட கலெக்டர் ஆக முடியும்; அதற்குத் தேவையான காரியங்கள் தாமே நடக்கும்; பொருத்தமான உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்கும்’ என்னும் நேர்முகச் சிந்தனை ஆக்கமனப்பான்மையை உங்களிடம் உருவாக்கிவிடுகிறது. ஆகமனப்பான்மை உங்கள் மூளை அணுக்களிலும்,நரம்பு அணுக்களிலும், இரத்த அணுக்களிலும், தசைத் திசுக்களிலும் ஒரு இரசாயன மாற்றத்தை உருவாக்குகிறது. இராசாயண மாற்றம் உங்கள் அறிவை விரிவாக்கி, திறமையை திடப்படுத்தி, ஆற்றலை வெளிக்கொணர்ந்து, வாய்ப்புகளும், மனிதர்களும் உங்கள் நோக்கி ஈர்க்கபட்டு நீங்கள் வெற்றிபெற்று விடுகிறீர்கள். வெற்றியின் முதல் இரகசியம் இதுதான்! 

ஆகவே வறுமை, தோல்வி, நோய் போன்ற சிறைகளில் நீங்கள் அடைபட்டிருப்பீர்களானால், சிறைக்கதவின் பூட்டைத்திறகும் சாவி, மனம் உங்கள் சட்டைப்பையில் தான் உள்ளது. ஆக்கமனப்பான்மை என்னும் அச்சாவியில் முடியும், கிடைக்கும், நடக்கும், ஆகும் என்று பொறித்திருப்பதைக் காணுங்கள். ஆக்கமனப்பான்மையை கையிலெடுத்தால், அனைத்துச் சிறைகளிலிருந்தும் விடுதலை பெறலாம். செல்வம், பதவி, புகழ், பெருமை, ஆரோக்கியம், ஆகியவற்றை விரும்பும் அளவுக்கு பெற்றுக் கொள்ளலாம். நம்புங்கள்; 
       ஆக்கமனப்பான்மையே அரும்பெருஞ்செல்வம்!