Thursday, October 30, 2014

ஆண்டாள் ஓர் அறிமுகம்


சூடிக்கொடுத்த சுடர்க்கொடி

ஆண்டாளைப் பற்றி சரித்திரக் குறிப்புகள் அதிகம் கிடையாது. குரு பரம்பரைப்படி, ஸ்ரீவல்லிபுத்தூரே நம் ஆண்டாளின் பிறப்பிடமாகும். கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் கொத்தி வைத்த பூமியில் துளசி மடியில் கிடந்த பெண் குழந்தை என்று சொல்கிறது. இவளைப் பெரியாழ்வார் எடுத்து ‘கோதை’ எனப் பெயரிட்டு வளர்த்தார். கோதை என்றால் தமிழில் மாலை. வடமொழியில் வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள்.

பெரியாழ்வார் பெருமாளுக்குத் தொடுக்கும் மாலைகளைத் தானே ரகசியமாகச் சூடி கண்ணாடியில் அழகு பார்த்து, இந்த அழகு பெருமானை மணக்க தனக்குப் பொருந்துமோ என எண்ணிக்கொடுத்து அனுப்புவாளாம். அதைத் தினமும் செய்து வந்தாள். ஒருமுறை பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டு, “இது தகாத காரியம்” என்று கோபித்துக்கொண்டார். அடுத்த முறை சூடாத மாலையை எடுத்துக்கொண்டு சென்றபோது பெருமாள், “அந்தப் பெண் சூடிய மாலைதான் எனக்கு உகப்பானது; அதை எடுத்து வாரும்!” என்றாராம்.

பெரியாழ்வார் வியந்து, ‘நம் பெண் மானிடப் பிறவி இல்லை; ஒருவேளை பூமித் தாயாராக இருக்கலாம்’ என்று எண்ணி, ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்று பெயரிட்டு அழைத்தார். அவளுக்கு மணப்பருவம் நெருங்க, “நீ யாரை மணம் செய்துகொள்வாய்” என்று தந்தை பெரியாழ்வார் வினவ, அவள்

வானிடை வாழும் அவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வதும் ஒப்ப, ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள் மானிடர்வக் கென்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

[தேவர்களுக்காக அந்தணர்கள் யாகங்களில் சேர்த்த உணவை காட்டில் திரியும் நரி புகுந்து மோப்பம் பிடிப்பது போல, உடலைப் பிளக்கும் சக்கரமும் சங்கமும் தாங்கிய திருமாலுக்கென்று ஏற்ப்பட்ட என் மார்பகங்கள் மனிதர்களுக்காக என்கிற வார்த்தை காதில் பட்டாலே என்னால் வாழ முடியாது] என்று சொல்லிவிட்டாள். அவன் எந்த ஊரான் என்று பெரியாழ்வார் கேட்டு, திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தையும் சொல்ல, திருவரங்கனின் பெயர் கேட்டதும் நாணினாள். ‘இந்தத் திருமணம் எவ்வாறு சாத்தியம்? அரங்கனோடு மணம் புரிவதாவது’ என்று பெரியாழ்வார் கவலைப்பட அவர் கனவில் பெருமாள் தோன்றி `“அவளை அலங்கரித்து கோயில் என்னும் திருவரங்கத்துக்கு அழைத்து வா!’ என்று கட்டளையிட்டார். கோவில் பரிசனங்களுக்கும் அவள் வரவைத் தெரிவித்தார். அவ்வாறே கோதையை அலங்கரித்து திருவரங்கத்துக்கு அழைத்து வர, அவர்களுக்குப் பெரிய வரவேற்பு. பெருமானிடத்தில் அவளை விட்டுவிட, கோதை அவருடன் ஐக்கியமாகி மறைந்து போனாள்.

இது ஆண்டாளை பற்றி குரு பரம்பரை சொல்லும் ஏறக்குறைய உண்மையின் அருகில் இருக்கும் கதை. இதன் அடிப்படைச் சம்பவங்கள் ஆண்டாளின் பல பாசுரங்களில் இருக்கின்றன. மேலும் கண்ணன் மேல் ஆசைப்பட்டு, அவனை விரும்பிப் பாவை நோன்பு, ‘வாரணமாயிரம் சூழ வலம் செய்து’ என்று துவங்கும் நாராயணனுடைய திருமந்திரத்தைப் பற்றி பாசுரங்கள் எல்லாம் இந்த வசீகரமான கதையின் அடிப்படையாகின்றன.

அவைகளில் நமக்கு வெளிப்படும் பெண்ணின் தெய்வீகச் சாயல்களுக்கும் திருமாலை மணக்கும் இச்சைக்கும் பொருத்தமாக, பின்னர்தான் ஆண்டாளின் திவ்ய சரித்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும். தெய்வத்தை மணக்கும் பெண் தெய்வீகம் பொருந்தியிருக்க வேண்டும். மானிடருக்குப் பிறந்தவளாக இருக்கக்கூடாது என்று அவள், சனக மன்னர் யாக சாலைக்கு ஸ்தலம் எழுப்பும்போது சீதை கண்டெடுக்கப்பட்டதுபோல் கண்டெடுக்கப்படுகிறாள். ‘நாச்சியார் திருமொழி’யில் வரும் பாடல்கள் அனைத்தும் திருமாலை விரும்பி அவருடன் ஐக்கியமாகிவிடும் இச்சையை வெளிப்படுத்தும் அற்புதமான பாடல்கள். அந்தப் பாடல்களுக்கேற்ப சரித்திரம் பின்னப்பட்டிருக்கிறது என்று நம்பலாம். எப்படியாவது என்னைத் திருமாலிடம் சேர்த்துவிடு என்று காமதேவனை வேண்டிக்கொண்டு நோன்பெடுக்கும் பாடல்களில் துவங்குகிறது நாச்சியார் திருமொழி. அதன்பின் கண்ணனின் லீலைகளில் திளைக்கும் பாடல்கள்; தரையில் வட்டம் வரைந்து அது கூடினால் கண்ணன் என்னுடன் கூடுவான் போன்ற கவிதைத்தனமான விருப்பங்கள்; மேகங்களையும் குயில்களையும் கார்கோடற் பூக்களையும் விளித்து திருமாலைப் பற்றி பேசுவது;ரணமாயிரம் சூழ வலம் செய்யும் கல்யாணத்தைக் கனவு காண்பது; அவன் ஆடையைக் கொண்டு என்மேல் வீசுங்கள், அவன் திருத்துழாயை என் குழலில் சூட்டுங்கள், அவன் மாலையை என் மார்பில் புரட்டுங்கள், அவன் வாய் நீரைப் பருகக் கொடுங்கள், அவன் குழல் ஊதிய துளைவாய் நீரை என் முகத்தில் தடவுங்கள், அவன் அடிப்பொடியை என் மேல் பூசுங்கள்; இப்படி ஆண்டாள் பாசுரங்கள் அனைத்திலும் ஒருவிதமான பாசாங்கற்ற உடல்சார்ந்த விருப்பம் இருப்பதைக் காண்கிறோம். பக்தி மறைமுகமாகத்தான் உள்ளது.

யார் இந்தப் பெண்?

ஆண்டாளின் பாடல்களின் உள்ளடக்கத்திலிருந்து நமக்கு மிக மிக உண்மையான ஒரு பெண்ணுருவம் கிடைக்கிறது. பெரியாழ்வாரின் பாடல்களின் சாயல் இருந்தாலும் அவை ஒரு பெண்ணுக்கே உரிய மென்மையான எண்ணங்கள் வெளிப்படும் பாடல்கள் என்பதில் சந்தேகமே இல்லை. திருமாலின் மேல் அதீதமான விருப்பம் தன் உடலை வாட்டும் ஒரு பெண்ணால்தான் இப்படி எழுத முடியும்.

பிரேமா அருணாச்சலம் எழுதிய ‘பத்தினித் தெய்வங்களும் பரத்தையர் வீதிகளும்’ என்ற நூலில் பெண் தன் காதல் வேட்கையை வாயினால் சொல்வதற்கு வாய்ப்பூட்டு போடும் தொல்காப்பிய விதியான, “தன்னுள் வேட்கை கிழவன் முற் கிலித்தல் எண்ணும் காலை கிழத்திக்கில்லை” என்கிற தளையை ஆண்டாளே முதன் முதலில் உடைத்தது. ஆண்டாளாகிய பெண் இலக்கியவாதியின் இந்த மரபு மீறலின் குரல் வியப்பானதே” என்கிறார். எனினும் ஒரு தெய்வத்தின் மூலம்தான் இந்த மரபு மீறல் முடிந்திருக்கிறது.

காமமும் காதலும் மிகுந்த இந்தப் பாடல்களை வைணவ சம்பிரதாயத்தில் வேறுவடிவில் பார்க்கிறார்கள். ‘தமிழ் இலக்கியத்தில் வைணவம்’ என்கிற இந்திரா பார்த்தசாரதியின் நூலில் இந்த வரிகள் கவனிக்கத்தக்கவை. இவர் ஸ்ரீ வைணவத்தின் ஒரே பெண் ஆழ்வார். விஷ்ணு பூமியுடன் கொண்ட தொடர்பு நன்கு தெரிந்ததே! மனித குலம் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரமாக உள்ள பூமி விஷ்ணுவின் கூட்டுறவால் வளமுடையதானது என்பதை மையமாகக்கொண்ட பல கதைகள் தோன்றின. அதனால் காதற் கடவுளான காமன் விஷ்ணுவுடன் இந்த நோக்கில் ஒன்றாகிறான். விஷ்ணு கிருஷ்ணன், காமன் எனப்படுகிறான்; கண்ணனுக்கும் காமனுக்கும் வேறுபாடில்லை. காமனின் பெயரால் திருமால் வழிபடப்படுகிறான். விஷ்ணுவின் பல பெயர்களில் காமனும் ஒன்று என்று மகாபாரதம் கூறுகிறது. ஆகவே இந்த இணைப்பிலுள்ள சிற்றின்பக் கூறு என்பது நாச்சியார் திருமொழியில் உள்ள சிற்றின்பப் பாடல்கள் காமனாக இருந்த கண்ணன் ஆண்டாளிடம் உருவாக்கிய இன்ப உணர்வு மனநிலைகளின் வெளிப்பாடாகும். ஆண்டாளை பூமித்தாயாகவும் விஷ்ணுவை வரங்களை நல்கும் கடவுளாகவும் கொண்டு படித்தால் கோதையின் கதை வேறு பல புதிய பரிமாணங்களைக் கொடுக்கும்.

கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்

ஆண்டாளைப்பற்றி யோசிக்கும்போது அவளை ஒரு அறியாப் பெண்ணாக, நாராயணனையே நினைந்து அவனுக்கு வாழ்க்கைப்பட பிடிவாதம் செய்யும் பெண்ணாக மட்டும் நினைக்க இயலவில்லை. அவர் பாடல்களிலுள்ள தேர்ந்த புலமையும் திறமையும் பிரமிக்க வைக்கின்றன. திருப்பாவை மிகக் கடினமான ‘இயற்றர விணை கொச்சகக் கலிப்பா’ வகையைச் சேர்ந்தது. நாச்சியார் திருமொழியில் ஆசிரிய விருத்தமும் கலி விருத்தமும் களிநடம் புரிகின்றன. திருப்பாவை சந்தம் மட்டுமின்றி வெண்பாவுக்குரிய தளைகளையும் பெற்றிருக்கிறது.

அவர் பாடல்களில் உள்ள நுட்பமான பழக்கவழக்கங்கள், நுட்பமான இயற்கை வருணனைகள் எல்லாவற்றையும் நோக்கும்போது ஆண்டாளை ஒரு அறியாச்சிறுமியாக எண்ணுவதில் சிரமமிருக்கிறது. அவர் பாடல்களிலேயே கிடைக்கும் உண்மையான ஆண்டாளின் வடிவம் இது.

அவர் பிறந்தது கி.பி. 885 நவம்பர் 25 அல்லது அல்லது 886 டிசம்பர் 24. ஆண்டாள் அவதார காலம் அவள் இயற்றிய திருப்பாவையில் வரும் ”புள்ளின் வாய் கீண்டானை“ என்று தொடங்கும் பாடலில் வரும் ”வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று“ என்று சொற்றொடரை ஆராய்ச்சி செய்து அறுதியிடப் பட்டுள்ளது. (ஆழ்வார்கள் கால நிலை பக் 123-128 ஆரய்ச்சிப் பேரறிஞர் திரு.மு.இராகவைய்யங்கார்)

அவருடைய தந்தை தாய் யாரென்று தெரியவில்லை, அந்தக் காலங்களின் தெய்விகம் ஏதும் கலக்காமல் இதை ஆராய்ந்தால் துளசித்தோட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட குழந்தை என்பது தெரிகிறது. பெரும்புலவரான பெரியாழ்வாரிடம் நிச்சயம் அவர் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் பயின்றிருக்க வேண்டும். பயின்று அதில் தந்தையின் பக்தி ரசம் மிகுந்த பாடல்களில் திளைத்து கண்ணனின் மேல் ஆசை வந்திருக்க வேண்டும். கடவுளுக்காக தன்னை அர்ப்பணித்த பெண்கள் சரித்திரத்தில் பலர் உள்ளனர். மீராபாய், அக்கமகாதேவி, காரைக்கால் அம்மையார் போன்ற பல உதாரணங்கள் உண்டு.

ஆண்டாளின் நாச்சியார் திருமொழி

ஆண்டாளின் நாச்சியார் திருமொழியின் 143 பாடல்களைப் பலர் பலவிதத்தில் ஆராய்ந்திருக்கிறார்கள். சிலர் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். சிலர் மிக ஆழ்ந்த விசிஷ்டாத்வைதக் கருத்துகளைக் கண்டிருக்கிறார்கள். ஆண்டாளைப் படிப்பவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அவர் பாடல்களால் பாதிப்பு அடையாமல் இருக்கவே முடியாது.

ஒரு பெண் தன் காதலனை அடையச் செய்யும் பிரார்த்தனைகள், குட்டித் தெய்வங்களிடம் வேண்டுகோள்கள்; சிறு நம்பிக்கைகள் இவைகளை எல்லாம் அழகாகச் சித்திரிக்கும் பலவகைப் பாடல்கள் உள்ளன. அவள் காதலன் மானிடனல்லாமல் திருமால் என்று உயரும்போது அதில் உள்ள காதல் உணர்ச்சிகள் எல்லாம் தூய்மையடைகின்றன. இருந்தாலும் அவள் காட்டும் விருப்பம் மிகமிக மனம் சார்ந்தது. அந்தரங்கமும் அன்னியோன்யமும் எச்சிலும் வாசனைகளும் கொண்டது.

கடவுளா மனிதனா, பக்தியா காதலா என்கிற இருநிலை, நாச்சியார் திருமொழியில் எப்போதும் விரவியிருக்கிறது. ஆண்டாள் தனக்காகப் பாடுகிறார்; சிறுமிகளுக்காகப் பாடுகிறார்; ஆயர்பாடிப் பெண்களுக்காகப் பாடுகிறார்; கூடல் குறிப்புகள் கேட்கிறார். குயில், மேகம் போன்றவற்றைத் தூது விடுகிறார். நேராக வழிபடுகிறார். கனவுகளில் திருமாலை மணந்து கொள்கிறார். இப்படிப் பலவித உணர்வுகளைக் காட்டும் நாச்சியார் திருமொழி, ஓர் இளம் பெண்ணிடம் இத்தனை எண்ணங்களா, சொல்லாட்சியா, இத்தனை அழகான வரிகளா என்று வியக்க வைக்கின்றன. உலக இலக்கியத்தில் வேறு எந்த மொழியிலும் இவ்வகையிலான கவிதைகள் இருப்பதாக தெரியவில்லை. காரைக்கால் அம்மையார், சில சங்ககால அகத்துறைப் பாடல்கள், கன்னடத்தில் அக்கமகாதேவியின் வசனங்கள், மீரா பஜன் போன்றவை ஆண்டாளின் கவிதைகளுக்கு அருகில் வருகின்றன. ஆனால் ஆண்டாள் தருவது முழுமையான உடலையும் உள்ளத்தையும் இரண்டறக் கலக்கும் அனுபவம்.

வாலண்டைன்ஸ் டே- காதலர் தினம் என்றெல்லாம் கொண்டாடுகிறார்கள். அதற்கு ஆண்டாள் தினம் என்று பெயர் மாற்றலாம். அந்த அளவுக்குக் காதல் தெய்வமான மன்மதன் பண்டிகைக்கான விவரங்கள் தருகிறார். மதமத்தம் பூவும் முருக்கம் பூவும் சேர்த்து, சுவரில் மன்மதன் பேரை எழுதி, பெண் கவரிமானைப் பிடித்துக் கட்டி, கரும்பை வில்லாகக் கட்டித்தந்து நெல், கரும்பு, கட்டியரிசி படைத்து, உதடுகளை வெண்மையாக்கி தலையலர்த்தி ஒரு வேளை மட்டும் உண்டு (இது போன்ற பழக்கங்கள் அந்த நாள்களில் இருந்திருக்க வேண்டும்) இவைகள் எல்லாம் செய்கிறேன் திருமாலை மட்டும் எனக்குக் கட்டிவை என்கிறபோது, மிகமிக யதார்த்தமான ஒரு மானுட நோன்பை தெய்வத்தை அடையப் பயன்படுத்தும் போது, அதன் குறிக்கோள் கொச்சை நீக்கப்படுகிறது. காமம் காதலாகி பக்தியாகிறது.

பெண்களில் சிலருக்கு இளமை, அழகு போன்றவை ஒரு சுமையாக உபத்திரவமாக இருந்திருக்கிறது. மனிதர்களைக் கல்யாணம் செய்வதும் பிள்ளை பெறுவதும் பிடிக்காமல் தெய்வத்தை நாடும் ஒரு விதமான மனப்பாங்கு எல்லா நூற்றாண்டுகளிலும் சில பெண்களுக்கு இருந்து வந்திருக்கிறது. இன்றுகூட பலரை நாம் பாக்கலாம். அவ்வையார், காரைக்கால் அம்மையார், மணிமேகலை, அக்கமாதேவி, மீரா போன்றவர்கள் உதாரணம். இந்த மரபில் வந்த கிறித்தவ கன்னியா ஸ்த்ரீகள், புத்த பிக்ஷுணிகள், பிரம்மகுமாரிகள் இவர்களுக்கெல்லாம் ஆண்டாள் ஒரு முன்னோடி என்று சொல்லலாம். மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன் என்பதுதான் அவர்கள் எண்ணங்களின் சாரம். இந்தப் பாடல்களின் ஆழ்ந்த கருத்துகளில் சிற்றின்பத்திலிருந்து பேரின்பம் நாடும் தத்துவத்தையும் பார்க்க முடிகிறது.

நாச்சியார் திருமொழியின் முதல் பத்து பாடல்கள் காமனுக்குத் தொழுதலுடன் துவங்குகிறது. அடுத்த பத்துப் பாசுரங்களை நதிக்கரையில் மணல் வீடு கட்டும் சிறுமிகள், எங்கள் சிறிய வீட்டைக் கலைக்காதே, நாங்கள் போட்ட கோலங்களைச் சிதைக்காதே என்று கெஞ்சும் பாடல்களாக யாத்திருக்கிறார். அடுத்த பத்துப் பாசுரங்களை ஆண்டாள் அதிகாலைப் பொய்கையில் குளிக்கச் சென்ற கன்னிப் பெண்களில் ஒருத்தியாகத் தன்னை எண்ணிக் கொண்டு கண்ணன் அவர்கள் ஆடைகளைக் கவர்ந்து செல்ல அவனிடம் திருப்பித்தா என்று கெஞ்சும் பாடல்களாக எழுதியிருக்கிறார். தலைவனைப் பிரிந்த பெண்கள் அவன் வருவான் என்று நிமித்தம் அறிய தரையில் சுழித்து அது கூடுகிறதா என்று பார்க்கும் வழக்கம் கூடல் குறிப்பு என்று அந்த நாள்களில் இருந்திருக்கிறது. ஆண்டாள் இந்த வகையில் பத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

ஆழ்வார்கள் காலத்தில் ஜ ஷ ஸ ஹ போன்ற கிரந்த எழுத்துகள் தமிழுக்கு வரவில்லை. சமஸ்க்ருத வார்த்தைகளை அவர்கள் அழகாக தமிழ்ப்படுத்தினார்கள். கிரந்த எழுத்துகள் இல்லாவிடினும் அழகான தமிழ் எழுத முடியுமென்பதற்கு ஆழ்வார் பாடல்களும் கம்பனும் உதாரணங்கள்.

திருமால் வருவதற்காகக் கூவுவாய் என்று குயிலைக் கேட்கிறார். உன்னொடு தோழமை கொள்வன் குயிலே உலகளந்தர் வரக் கூவுவாய் என வேண்டுகிறார்.

ஆண்டாளின் மிகப் பிரசித்தி பெற்ற பத்துப் பாடல்கள் அவருடைய கனவுகளின் தொகுப்பு.

ஆயிரம் யானைகள், தோரணங்கள், பாளை, கமுகு, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், நான்கு திசைகளிலிருந்து தீர்த்தங்கள், மத்தளம், சங்கம், முத்துப்பந்தல், தீவலம், அம்மி மிதித்தல், பொரி தட்டல், குங்குமம், சாந்தம், மங்கல வீதி வலம், மஞ்சனம் என்று அமர்க்களமான கல்யாணம். (தாலி கட்டுவதை மட்டும் ஏனோ குறிப்பிடவில்லை.)

இதில் சிறந்த பாடல் ஒன்று

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மையுடையவன் நாராயணன் நம்பி செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி அம்மிமிதிக்கக் கனாகண்டேன் தோழீநான்

இப்பிறவிக்கும் மேலுள்ள பிறவிகளுக்கும் பற்றாக இருப்பவனும், நமக்குத்தலைவன் நாராயணன் தனது திருக்கையினால் என் காலைப் பற்றி அம்மிமீது எடுத்துவைக்க நான் கனாக்கண்டேன் தோழி! என்கிறாள்.

நாராயணனைப் பற்றாகக் கொண்டால் எத்தனை பிறவியெடுத்தாலும் அவன் துணையிருப்பான் என்கிற கருத்து பௌத்த மதத்தினரின் மிகப் பெரிய கவலைக்கு பதிலாக உள்ளது. திரும்பத் திரும்ப பிறக்கும் சக்கரத்திலிருந்து எப்படி விடுபடுவது என்பதுதான் புத்தரின் கவலையாக இருந்தது.

அதை நீக்கும் வகையில் எத்தனை பிறவியெடுத்தாலும் நாராயணன் பற்றாவான் என்கிறார் ஆண்டாள்.

அடுத்த பத்தும் சிறப்பானவையே. நாராயணன் வாய்வைத்து முழங்கிய சங்கை சில கேள்விகள் கேட்கிறார்.

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே!

அவன் உதடுகள் என்ன வாசனை, கற்பூரமா? தாமரைப் பூவா? அவன் வாய் தித்திக்குமா? விரும்பித்தான் கேட்கிறேன். சொல்; சங்கே; ஆண்டாளின் இப்பாட்டு அவள் பகவான் மேல் கொண்ட வெறியை; அதீத இச்சையை வெளிப்தப்படுத்துகிறது:

உள்ளே உருகி நைவேனை உள்ளோ இலளோ என்னாத கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்தனனைக் கண்டக்கால் கொள்ளும்பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்தென் அழலை நீர்வேனே

நான் உள்ளுக்குள் உருகி வேதனைப் படுகிறேன்; இருக்கிறேனா, செத்தேனா, தெரியவில்லை. அக் கோவர்தனைப் பார்த்தால் எந்தப் பயனும் இல்லாத இந்த என் மார்பகங்களை அடியோடு (கிழங்கோடும்) அள்ளிப் பறித்து அவர் மார்பில் வீசி என் உஷ்ணத்தைத் (அழலை) தீர்வேன்.

ஆண்டாள் தன் அழகான மேனியின் மிக அழகான அடையாளங்களைப் பிடுங்கி எறிய விரும்புவது அவள் பெண் என்பதால் அடையும் வேதனையை பல படிமங்களில் இயக்குகிறது. அவளுடைய பெண்மையை மறக்க, ஏன் மறுக்க விரும்புகிறாள். Denial of femininity?

ஆண்டாள் திருப்பாவை

ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்தான கண்ணனை மணப்பதையே எண்ணிக்கொண்டிருப்பதற்கு சிகரம் வைத்ததுபோன்றது திருப்பாவை. ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் ‘சங்கத் தமிழ்மாலை’ என்று போற்றப்படுகின்றன. திருப்பாவை என்பது பின்னர் வைத்த பெயராக இருக்கலாம். முதலில் இதற்கு ‘சங்கத் தமிழ்மாலை’ என்றுதான் பெயர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

தொல்காப்பிய நூற்பா பேராசிரியரின் உரையில் பாவைப் பாட்டு என்பது குறிப்பிடப்படுகிறது. பாவை நோன்புக்கு அடிப்படை தமிழ் நாட்டின் பழைய வழக்கத்தை தழுவியது. இந்த நோன்பு சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை, பரிபாடல்களில் பாவை நோன்பும் தைந்நீராடலுமாகக் குறிப்பிடப்படுகிறது.

”நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த வண்டற் பாவை“ என்று நற்றிணையில் உள்ளது. அகநானூறிலும் உள்ள கடற்கரையோரப் பாவை விளையாட்டுகள்தாம் நாளடைவில் சமய வடிவு பெற்றது என்று கூறுகிறார்கள். ‘தைந்நீராடல்’ என்றாலும் மார்கழித் திங்களில் பௌர்ணமியில் திருவாதிரையில் தொடங்கியதால் இந்த நீராடல் தை மாதத்தில் தொடர்ந்தது. அதனால் தைந்நீராடல் என்பதும் பொருந்தும் என்று இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார். எப்படியும் மகளிரின் பாவை நோன்பு பழந்தமிழ் வழக்கம் என்பதில் சந்தேகமில்லை.

கண்ணனை அனுசரித்த பெண்ணாக தன்னை பாவித்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்ப்பாடியாகக் கொண்டு வடபெரும் கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும் அதில் உள்ள தெய்வத்தை கிருஷ்ணனாகவும் பாவித்து அந்தப் பெண்கள் செய்த பாவை நோன்பை ஆண்டாள் செய்வதாக யாத்த முப்பது பாட்டுகளின் மேல் வைணவ ஆச்சாரியர்களுக்கு- குறிப்பாக இராமானுஜருக்கு- மிகுந்த ஈடுபாடு. (அவரை திருப்பாவை ஜீயர் என்றும் அழைப்பர்). இதற்கு வைணவ ஆச்சாரியர்கள் பலர் விளக்கம் எழுதியுள்ளனர். அவைகளில் பெரியவாச்சான்பிள்ளை மூவாயிரப்படியும் அழகிய மணவாளப் பெருமான் நாயனார் ஜகந்நாதாசாரியார் போன்றவர்கள் வியாக்கியானங்களும் முக்கியமானவை.

திருப்பாவையின் முப்பது பாடல்களையும் மார்கழி மாதத்தில் அனுசரிப்பது வைணவர்கள் வழக்கம். பாவை நோன்பு என்பது பெண்கள் பழகும் ஒரு விதமான austerity. இது எல்லா நோன்புகளிலும் இருப்பதைப் பார்க்கலாம். கிறித்தவர்களின் லெண்ட், இஸ்லாமியர்களின் ரம்ஜான் போன்றவையுடன் ஒப்பிட முடிகிறது. எல்லா மதங்களிலும் நம்பிக்கைகளிலும் கடவுளை அடைய கொஞ்சமாவது மெய்வருத்தம் தேவை என்கிற கருத்து அடிப்படையானது. இதன் அதீத வடிவங்கள்தாம் காவடி எடுப்பது, அலகு குத்திக் கொள்வது, முதுகுத் தோலில் கொக்கி வைத்து தேர் இழுப்பது போன்றவை.

ஆண்டாளின் பாவை நோன்புக்கான கிரிசைகள் (காரியங்கள்) எளிமையானவை. எல்லாப் பெண்களும் கடைப்பிடிக்கக் கூடியவை.

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யும் ஆறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்

”நெய் கிடையாது, பால் கிடையாது, கண்ணுக்கு மை கிடையாது. கூந்தலுக்கு மலர் கிடையாது. செய்யக்கூடாத காரியங்களைச் செய்ய மாட்டோ ம், கோள் சொல்ல மாட்டோம் (குறளை), அதிகாலையில் (நாட்காலே) குளித்துவிட்டு தகுந்தவர்களுக்குப் பொருளும் பிச்சையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு (ஆந்தனையும்) கொடுப்போம். இப்படிப் பிழைக்கும் வழியை எண்ணி சந்தோஷப்படுவது எம் பாவை நோன்பு.“

அதற்காகத் தோழிகளை எழுப்பி நீராட அழைக்கும் காலை நேரப் பாடல்களில் இருக்கும் நுட்பமான அன்றாட சங்கதிகள் பல நம்மை பிரமிக்க வைக்கின்றன.

திருப்பாவையில் பொழுது விடிவதற்குரிய அடையாளங்கள் பல கூறப்பட்டுள்ளன. அவை, கீழ்வானம் வெளுப்பது, கோழி கூவுவது, பறவைகள் ஒலிப்பது, முனிவர்களும் யோகிகளும் துயிலெழுந்து செல்வது போன்றவை. அதை விரிவாகக் கீழே பார்க்கலாம். காலை நேரத்தின் பலவித சப்தங்களையும் நடைமுறைகளையும் இயல்பாகச் சொல்லும் திருப்பாவை பக்தியும் இலக்கிய நயமும் கலந்த மிகச் சிறந்த நூல்களில் ஒன்று.

மார்கழி மாதம் பெளர்ணமியில் துவங்குகிறது திருப்பாவை. மார்கழி மாதத்தை வைஷ்ணவமான மாதம் என்று சொல்வார்கள். கண்ணன் கீதையில் ”மாஸாநாம் மார்க ஸீர்ஷோ அஹம்“ என்னும்போது மாதங்களில் நான் மார்கழி என்கிறார். மழை பெய்து பயிர்கள் விழிக்கும்போது உயிர்களும் விழிக்க வேண்டுமல்லவா?

மார்கழி மாதத்தில் மட்டுமில்லாமல் எல்லா மாதங்களிலும் பெண்கள் இப்படியே இருந்துவிட்டால் உலகத்தில் கலகமே இருக்காது என்பது யோசிக்கத்தக்கது. பெண்களின் அழகினாலும் அலங்காரத்தினாலும் போர்களே நிகழ்ந்திருக்கின்றதைச் சரித்திரம் கூறுகிறது.

ஆண்டாளின் நான்காவது திருப்பாவையில் ஓர் அற்புதமான மழைக்காட்சியும் விஞ்ஞானக் குறிப்பும் உள்ளது. மழை எப்படிப் பெய்கிறது என்று ஆண்டாள் விவரிப்பதை இன்றைய வானிலை நிபுணர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள்.

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து பாழியந்தோளுடை பற்பநாபன் கையில் ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

வருண தேவனே சிறிதும் ஔதக்காதே (கைகரவேல்) சமுத்திரத்தினுள்ளே புகுந்து அங்கிருந்து நீரை மொண்டு இடிஇடித்து ஆகாயத்தில் ஏறி மாலின் திருமேனிபோல் கறுப்பாகி அழகான தோள் கொண்ட பத்மநாபன் கையில் உள்ள சக்கரம் போல மின்னலடித்து அவனுடைய சங்கம் போல அதிர்ந்து முழங்க அவனுடைய சக்கரத்தால் சிதறப்பட்ட சரங்கள் போல மழை பெய்து உலகம் அனைத்தும் வாழ நாங்களும் அந்த மழையில் நனையப் பொழிவாயாக.

மழை எப்படிப் பெய்கிறது என்பதற்கு ஆண்டாள் இரண்டுவிதமான படிமங்களைப் பயன்படுத்துவது அவரது கவிதைத் திறமையைக் காட்டுகிறது. ஒரு படிமம் திருமாலின் கரிய உடல் சங்கு சக்கரம் இவைகளோடு மழையை ஒப்பிட மற்றதில் மழை பெய்வதின் இயற்கையான விளக்கத்தைத் தப்பில்லாமல் தருகிறார். அந்த ஒன்பதாம் நூற்றாண்டில் ஆண்டாளுக்குத் இது தெரிந்திருந்தது விந்தையே.

ஐந்தாவது திருப்பாவையில் மாயனை மன்னு வடமதுரை மைந்தனை வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தால் செய்த பாவங்களும் வரப் போகிற பாவங்களும் (போய பிழையும் புகுதருவான் நின்றனவும்) நெருப்பில் இட்ட தூசி போல அழிந்துவிடும் என்கிறார்.

ஆறாவது திருப்பாவையில் (புள்ளும் சிலம்பின காண்) அதிகாலைக் காட்சி நம்முன் விரிகிறது. பறவைகள் ஒலிக்கின்றன. சங்கநாதம் நம்மை எழுப்புகிறது. பாற்கடலில் உறங்கும் திருமாலை முனிவர்களும் யோகிகளும் மெல்ல எழுப்புகிறார்கள். அவர்கள் அரி அரி என்று அழைப்பது உள்ளத்தைக் குளிர்விக்கிறது.

ஏழாவது பாட்டில் (கீசு கீசென்று) இன்னும் அதிகாலை சப்தங்கள். ஆனைச் சாத்தன் என்னும் வலியன் குருவியின் கீச்சு கீச்சு சப்தம், ஆய்ச்சியர்கள் மத்தில் ஓசைப்படுத்தும் தயிர் சப்தம், நாங்கள் நாராயணனைப் பாடும் பாட்டின் சப்தம் இவையெல்லாம் கேட்டுக் கொண்டே படுத்திருக்கிறாயே, கதவைத் திற.

எட்டாவது பாட்டில் கீழ்வானம் வெளுக்கிறது. எருமைகள் மெல்லப் புறப்படுகின்றன. ஒன்பதாவதில் (தூமணி மாடத்து) மணி மாடத்தில் சுற்றிலும் விளக்கெரிய தூபம் கமழ உறங்கும் மாமன் மகளை ஊமையா செவிடா களைப்பா இப்படித் தூங்குகிறாளே மாமி என்று அதட்டி எழுப்புகிறார்.

பத்தாவது திருப்பாவையில் உன் தூக்கத்துக்கு கும்பகர்ணன் தோற்றுப் போனான் என்கிறார்.

பதினொன்றாம் பாட்டில் என்ன இப்படி அசையாமல் பேசாமல் தூங்குகிறாய் என்று வியப்பு.

பனிரெண்டாம் பாடல் ஆயர்பாடியின் செல்வச் சிறப்பை விளக்கும் பாடல் - இளம் கன்றைக் கொண்ட எருமை கனைத்து தன் கன்றை நினைத்து வருந்த அதன் மடியில் தானாக பால் வடிய வீட்டையே சேறாக்கும் இல்லத்தவனின் தங்கையே, எங்கள் தலைமேல் பனி விழ உன் வாசலில் காத்திருக்கிறோம். இராவணைனைக் கொன்ற மனத்துக்கினிய இராமனைப் பாடுகிறோம். பேசாமல் இருக்கிறாய். இனியாவது எழுந்திரு. இது என்ன தூக்கம்? சுற்றத்தார் எல்லாருக்கும் தெரிந்துவிட்டது.

திருப்பாவை பதின்மூன்றாம் பாட்டில் (புள்ளின் வாய் கீண்டானை.) வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்னும் வரியில் உள்ள வானவியல் குறிப்பை வைத்துக் கொண்டு திருப்பாவையின் காலத்தை கி.பி.885 என்று ஆராய்ச்சியாளர்கள் அறுதியிட்டிருக்கிறார்கள்.

பதினான்காம் பாட்டில் மேலும் காலைக் காட்சிகள் விரிகின்றன. உங்கள் வீட்டுக்கு பின்னால் இருக்கும் குளத்தில் செங்கழுநீர் பூத்துவிட்டது. ஆம்பல் மலர் கூம்பியது. காவி உடை அணிந்த, வெண்மையான பற்கள் கொண்ட துறவிகள் தங்கள் கோவில்களுக்கு சங்கு ஊதப் போய்க் கொண்டிருக்கிறார்கள். எங்களை எழுப்புகிறேன் என்றாயே, நீயே தூங்குகிறாயே. எழுந்திரு.

பதினைந்தாம் பாட்டில் கடைசியாக தோழியை எழுப்ப முயற்சித்து விட்டு, பதினாறாம் பாடலில் வாயில் காப்போனைக் கதவைத் திறக்கச் சொல்கிறார்…

பதினோழாம் பாட்டில் நந்தகோபனையும் யசோதையையும் பலராமனையும் வாசுதேவனையும் ஒவ்வொருவராக எழுப்புகிறார்.

பதினெட்டாம் பாட்டில் நப்பின்னையை எழுப்புகிறார். பத்தொன்பதிலும் இருபதிலும் அவள் மார்பின் மேல் படுத்துறங்கும் கண்ணனை எழுப்புகிறார். இருபத்தொன்றிலும் அந்தத் துயிலெழுப்பும் முயற்சி தொடர்கிறது. இருபத்திரண்டாம் பாடலில் பெரிய பெரிய அரசர்கள் எல்லாம் தம் அகங்காரம் குலைந்து, உன் கட்டிலடியில் காத்திருக்கிறார்கள். உன் தாமரை போன்ற கண்களால் சூரியனும் சந்திரனும் ஒரே சமயத்தில் பார்ப்பது போல் எங்களை ஒருமுறை பார்த்தால் எங்கள் சாபமெல்லாம் நீங்கும் என்கிறார்.

இருபத்து மூன்றாம் பாடலில் கண்ணன் எழுந்திருப்பதை மழைக்காலத்தில் குகைக்குள் படுத்திருக்கும் சிங்கம் விழிப்பதுடன் ஒப்பிடுகிறார். பிடரியை சிலிர்த்துக் கொண்டு சிம்மாசனத்தில் அமர்ந்து நாங்கள் வந்த காரியத்தைக் கேள் என்கிறார்.

இருபத்து நான்கில் திருமாலின் அவதாரங்களைச் சொல்கிறார். அன்று உலகம் அளந்தவனே, தென் இலங்கையை வென்றவனே, சகடாசுரனை உதைத்தவனே, கன்றின் ரூபத்தில் வந்த அசுரனை வென்றவனே, கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தவனே, பகைவர்களைக் கெடுக்கும் வேல் கொண்டவனே உன்னைப் போற்றுகிறோம். உனக்கு என்றென்றும் சேவகம் பண்ணுகிறோம். உன்னிடமிருந்து பறை கொள்வதற்காக வந்திருக்கிறோம் என்கிறார்.

இருபத்தைந்தாம் பாட்டில் தேவகிக்கு மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் யசோதையின் மகனாக ஒளித்து வளர்ந்து அதையும் பொறுக்காத கம்சனின் கருத்தை வீணாக்கி அவனுடைய வயிற்றில் நெருப்பைக் கட்டிய திருமாலே, உன்னை யாசித்துக் கொண்டு வந்தோம் பறை தருவாய். உன்னை நாங்கள் பாடி வருத்தம் தீர்வோம் என்கிறார்.

இருபத்தாறாம் பாடலில் மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவதற்கும் பாவை நோன்புக்கும் ஏற்ற உபகரணங்களைக் கொடுத்தருள்வாய். பால்நிறம் கொண்ட உன் சங்கைப் போல சங்கங்களும் பறை, அழகான விளக்கு, கொடி, விதானம் இவையெல்லாம் அருள்வாய் என்று வேண்டுகிறார்.

இருபத்தேழில் பகைவரை வெல்லும் கோவிந்தனே, உன்னைப் பாடிப் பறை கொண்டால் எங்களுக்குக் கிடைக்கப் போகும் சன்மானங்கள் இவை. சூடகம், தோள்வளை, தோடு, செம்பூ, பாடகம் போன்ற பல ஆபரணங்கள் பட்டாடைகள், முழங்கை வரை நெய் வழியும் பால்சோறு இவைகள் எல்லாம் கிடைத்து மகிழ்வோம்.

இருபத்தெட்டாம் பாடலில் பசுக்களின் பின்னே சென்று காடுகளில் உண்போம். அறிவு அதிகமில்லாத எங்கள் ஆயர் குலத்தில் நீ வந்து பிறந்த புண்ணியம் உடையவர்கள் நாங்கள். குறையே இல்லாத கோவிந்தா உன்னோடு எங்கள் உறவு உன்னாலும் எங்களாலும் ஒழிக்க முடியாத பரஸ்பர உறவு. அறியாத சிறு பெண்களான நாங்கள் உன்னை அன்பினால் சின்னச் சின்ன பெயர்களாலே அழைக்கிறோம். கோபித்துக் கொள்ளாதே இறைவனே, நாங்கள் விரும்பும் பறை தருவாய்.

த்வயம் சரம ஸ்லோகம் இரண்டும் வைணவர்களுக்கு மிக முக்கியம். இவைகளின் முற்பாதியை இப்பாடல் விளக்குவதாகவும் வியாக்யானம் செய்கிறார்கள். ஒழிக்க ஒழியாத உறவு என்பது பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள பரஸ்பர பந்தத்தை நிலை நிறுத்துகிறது. இதுவும் வைணவத்தின் ஆதாரக் கருத்துகளில் ஒன்று.

இருபத்தொன்பதாம் - ”சிற்றம் சிறுகாலே வந்துன்னை.." என்ற - பாடலும் மிக முக்கியமான பாடல். அதிகாலையில் வந்து உன்னை சேவித்து உன் தாமரைப் பாதங்களைப் போற்றுவதன் பலனைக் கேளாய்! மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்த நீ எங்கள் சிறு கைங்கர்யங்களை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். இன்று ஒரு நாள் பறை கொள்வதற்காக மட்டும் நாங்கள் வரவில்லை. எப்போதும் எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னோடு உறவு கொண்டவர்கள் நாங்கள். உனக்கு நாங்கள் அடிமை. எங்களுடைய மற்ற விருப்பங்களை மாற்றிவிடு.

திருப்பாவையை நிறைவு செய்யும் முப்பதாம் பாடல் பட்டரின் மகளான கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதையும் தப்பில்லாமல் சொல்பவர்கள் திருமாலின் திருவருள் பெற்று இன்புறுவர் என முடிகிறது.

இந்த முப்பது பாடல்களையும் நோக்கும்போது ஆண்டாள் பெரும்பாலும் தன் தோழிகளையும் கண்ணனின் உறவினர்களையும், இறுதியில் கண்ணனையும் துயிலெழுப்புகிறார். ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து ஒரு பெண் தன் தோழிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, நீங்கள் வெறும் போகப் பொருள்களல்ல; பகவானையே எழுப்பி நீங்கள் விரும்பும் பறையைக் கேட்கலாம். புறத்தூய்மையாலும் அகத்தூய்மையாலும் அவனை அடைய உங்களால் முடியும் என்ற புது நோக்கில் அவரை ஒரு புரட்சிப் பெண்ணாகப் பார்க்க முடிகிறது. அதை எழுதிய அந்த இளம் பெண் நூற்றாண்டுகள் கடந்தும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறாள்.

http://vijayastreasure.blogspot.in/

Wednesday, October 29, 2014

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்

1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.

நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.

நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.

மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!

2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!

மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.

3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!

இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் - அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.

4. பொறாமை கொள்ளாதீர்!

வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது!

நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!

5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!

உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.

6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!

இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.

7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!

இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.

8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்

தியானம் - உள்மன ஆய்வு - மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.

சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம். ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.

9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!

வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லாத் தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.

10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!

"இது என்னால் முடியுமா? முடியாதா?" என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.

முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது - மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?

http://vijayastreasure.blogspot.in/

Monday, October 27, 2014

உலகை வெற்றி கொள்வீர்

                   

1. ‘உங்கள் மனதை வெற்றி கொண்டால் உலகை வெற்றி கொள்வீர்’ என்பது முது மொழி. இதைத் தான் ஆயிரம் படைகளை வென்றவனை விட தன்னை வென்றவனே உயர்ந்தவன் என்றார் புத்தர். மனிதனுக்கு வெளி உலகை வெல்வதை விட தன் உள் மனதை வெல்வது தான் சிரம மானது.

2. உலகில் இரண்டு சக்திகள் உண்டு.ஒன்று ஆக்கபூர்வ சக்தி. மற்றொன்று எதிர்மறை சக்தி. ஆக்கபூர்வமாக நினைத்து செயல்படும் பழக்கம் வந்து விட்டால் எல்லா எதிர்மறை சக்திகளும் பலமிழந்து விடும்.

3. காலை விடிந்ததும் நமக்கு இரண்டே வாய்ப்புகள்.ஒன்று மகிழ்ச்சியாக செயல்படுவது. மற்றொன்று சோகமாக செயல்படுவது. எதைத் தேர்வு செய்வது என்பது நம்கையில் தான்.

4. நாம் பழகுகின்ற மனிதர்கள் நம்மை ஊக்கு விப்பவரா? குறிக்கோளை அடைய உதவுபவரா?

நம்மீது உண்மையான ஆர்வம் உள்ளவரா?

இம்மூன்றுக்கும் ‘ஆம்’ இருந்தால் அவரிடம் ஆலோசனை கேட்கலாம். அல்லது குறைந்தபட்சம் நம்மைப் பின்னோக்கிதள்ளாதவராகஇருக்கவேண்டும்.

5. நாகரீக உலகில் மனிதர்களை திசை மாற்ற எண்ணற்ற சாதனங்கள். பொழுது முழுதும் தொலைக் காட்சி பார்ப்பவர்கள், மணிக் கணக்கில் தொலைபேசியில் பேசுபவர்கள் சாதனைகளைப் படைக்க முடியாது.

6. உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் நிறைத்து வழங்குவது குழந்தைப் பருவம். தண்ணீரில் நீந்துதல், படகு ஒட்டுதல், மலையேறுதல், விளையாடுதல், ஆடிப்பாடுதல், சிரித்து மகிழ்தல் போன்ற சாகசங்கள் நம்முள் உள்ள குழந்தைத் தன்மையை வெளிக்கொணர்ந்து புத்துணர்வைஉண்டாக்கும்.

யாருடன்தொடர்பு?

7. உயர் நெறியாளர்களின் தொடர்புகளை எப்படியேனும் உருவாக்கி கொள்ள வேண்டும். பலவருட அனுபவங்களால் கற்றுக் கொண்டயுக்திகளை ஒரு சில நிமிடங்களில் பகிர்ந்து கொடுப்பார்கள். இது தான் சிறந்த முதலீடு.

8. வியாபாரத்தில் பெரும்பாலான விற்பனைகள் முதல் மூன்று நிமிடங்களில் முடிவு செய்யப்படுகின்றன. ஒரு மனிதரைப் பற்றிய அபிப்பிராயமும் சந்திப்பின் முதல் சில நிமிடங்களில் உண்டாகி விடும். மனிதர்களைச் சந்திக்கும் போது இன் முகத்தோடு வரவேற்பது, உறுதியாக நிற்பது, கண்களை நேருக்கு நேராக பார்ப்பது, நிதானமான சுவாசம், அமைதியான செயல்பாடு – போன்றவற்றின் மூலம் நம்மைப் பற்றிய உயர் அபிப்பிராயம் உண்டாகும்.

9. சூரியன் உதிக்கும் முன்னர் எழுந்து விடுங்கள்.வாழ்க்கை ஒளிமயமாகி விடும் என்பது உண்மை. அதிகாலையில் நம் உடலில், மனதில் சக்திகளின் ஆற்றல் அதிகமாக இருக்கும். நேரம் செல்லச் செல்ல அதன் வீரியம் குறையும். இதனால் தான் அதிகாலையில் எழுபவனை வெல்வது கடினம்.

10. ஒவ்வொரு மனிதனுக்கும் நான்கு வகை வாழ்க்கை

* தனிமனித வாழ்க்கை

* குடும்ப வாழ்க்கை

* தொழில் வாழ்க்கை

* சமூக வாழ்க்கை

இந்த நான்கிலும் அதற்குரிய பங்களிப்பு இருந்தால் தான் முழுமையான வாழ்க்கை.

11. எமர்சன் சொன்னார்: அடிக்கடி சிரிப்பது, அதிகமாக நேசிப்பது, உயர்ந்த மனிதர்களின் மரியாதைக்குப் பாத்திரமாவது, குழந்தைகளின் அன்பைப் பெறுவது, நேர்மையான விமர்சனங்களை ஏற்பது, அழகைப் பாராட்டுவது, ஆரோக்கியமான குழந்தையைப் பெறுவது, சமுதாய உயர்வுக்காக ஒரு சில பங்களிப்பு மற்றும் ஆடிப்பாடி மகிழ்ச்சியோடு வாழ்ந்ததால் ஒரு ஆத்மாவாக சுகப்பட்டது என்பதை அறிந்தால் அதுவே வெற்றி.

வெற்றிமனம் :

12. சரியான மனநிலை கொண்ட ஒரு மனிதனை எந்த சக்தியாலும் அவனுடைய குறிக்கோளை அடைவதிலிருந்து தடுக்க முடியாது.அதேபோல தவறான மனநிலையோடு இருப்பவனுக்கு உலகின் எந்த சக்தியாலும் உதவ முடியாது – என அறிஞர் சொன்னதைப் போல சரியான மனநிலையே வெற்றியை அடைய உதவும்

13. மனிதன் வாழ்வதும் அழிவதும் அவனாலேயே. சரியான சிந்தனை, செயல் மூலம் உயர்கின்றான். தீயசிந்தனை, செயல்களால் தாழ்வடைகின்றான். உயர்ந்த மனிதரின் நற்பண்புகள்: தெளிந்த சிந்தனை, சுயக் கட்டுப்பாடு, உணவில் கட்டுப்பாடு, உணர்ச்சிகள் மீது ஆளுமை, வெற்றித் தோல்விகளில் சமமான மனநிலை, விடா முயற்சி ஆகியவை.

மேலும் இம்மாத இதழை இ புத்தக வடிவில் படிக்க;http://ci.magzter.com/IN/Thannambikkai/Indrayamaruthuvam/Health/38365

Tuesday, October 21, 2014

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள் .

நமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன.

கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன.

தினமும் காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ இதில் இல்லை.

யோக முத்திரைகள் செய்வதற்கு முன்பாக தெரிந்துகொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள்
                ----------------------------------------------------------------------------------------------------------
   விரலின் நுனி மற்ற விரலின் நுனியை குறிப்பிட்ட நேரம் தொட்டுக்கொண்டிருந்தால் சில நோய்கள் குணமாவதாக முனிவர்கள் சொல்லியிருக்காங்க அவை யோக முத்திரை எனப்படும்.

ஏன் முத்திரை என்று சொல்லக்கூடாதா என்றால் சதிர் (பரதநாட்டியம்) ஆட்டத்தில் நிறைய முத்திரைகள் உண்டு (மற்ற நாட்டியங்களிலும் முத்திரைகள் உண்டு) அவை நாட்டிய முத்திரைகள், எனவே முத்திரை என்று சொன்னால் நாட்டிய முத்திரை என்று தவறாக எண்ணக்கூடாது என்பதற்காகவே யோக முத்திரை என்கிறோம்.

இந்த முத்திரைகளை செய்தால் ஒரு வாரத்திலேயே பலன்கள் தெரிய ஆரம்பிக்குமாம். நோய் முத்திப்போய் இருந்தது என்றால் ஒரு வாரத்துக்கு மேல் ஆகலாம். நாள் பட செய்வது நல்லது என்கிறார்கள். முயன்று பாருங்களேன் காசு செலவு பண்ண தேவையில்லை, ஆனா நேரம் செலவு செய்யனும்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து பூதங்களை உள்ளடக்கியது இந்த அண்டவெளி. இதில் ஓர் உறுப்பாக விளங்கும் நமது உடலும் இந்த ஐந்து பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது காரணம் மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன நலம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

பெரு விரல் = சூரியன்

ஆட்காட்டி விரல் = காற்று

பாம்பு(நடு) விரல் = ஆகாயம் (வானம்)

மோதிர விரல் = மண்

சுண்டு விரல் = நீர்

நம்ம உடம்பு மூன்று நாடிகளால் ஆனது அவை வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்).

சித்த அல்லது ஆயுர்வேத மருத்துவர்கிட்ட போனா அவர் இதில் எது அதிகம்? எது குறை? என்று பார்த்துதான் மருத்துவம் பார்ப்பார். ஏன்னா வாத, பித்த, கபத்தால் ஆகியது இவ்வுடம்பு என்னும் கருத்துடையவர்கள் இவர்கள். ஐந்து பூதங்களின் முக்கூட்டு வாத, பித்த, கபமாகவும் அறியப்படுகிறது.

அன்றாட வாழ்விலேயே இவற்றை பயன்படுத்துவோம். இப்ப பயன்படுத்துவது குறைந்து விட்டது அல்லது இல்லை எனலாம். ஊர்புறங்களில் உள்ள பெரியவர்கள் இப்போதும் இந்த சொல்லாடலை பயன்படுத்துவார்கள்.

1. நெஞ்சில் கபம் கட்டிக்கிச்சு (நெஞ்சில் சளி கட்டிக்கிச்சு)

2. பித்தம் தலைக்கு ஏறிடுச்சு (சூடு தலைக்கு ஏறிடுச்சு)

3. வாதம் அதிகம் இருக்குன்னு நினைக்கிறேன் (மூட்டு வலி, கழுத்து வலி வந்தா இப்படி சொல்வார்கள்)

வானமும்(ஆகாயமும்), காற்றும் சேர்ந்து வாதமாகவும், வெப்பம் (சூரியன்) பித்தமாகவும், தண்ணீரும் மண்ணும் கபமாகவும் அறியப்படுகின்றன. அறுசுவையிலும் துவர்ப்பும், புளிப்பும் வாதமாகும். உப்பும் கசப்பும் பித்தமாகும். இனிப்பும் காரமும் கபமும் கபமாகும். இதுவன்றி முக்குணங்களாகிய வாதம், பித்தம் மற்றும் கபத்தின் சேர்க்கையே இவ்வுடலாகும்

முத்திரை பற்றி அடிப்படையான குறிப்பு.
   ---------------------------------------------------------------

 விரலின் நுனி பெருவிரலின் நுனியை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை ( காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) சமப்படுத்துவதாக பொருள்.

 விரலின் நுனி பெருவிரலின் அடிப்பாகத்தை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை (காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) குறைப்பதாக பொருள்.

 பெருவிரலின் நுனியால் விரலின் அடிப்பாகத்தை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை (காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) அதிகரிப்பதாக பொருள்.

கவனிக்க:

வாதம், பித்தம், கபம் அதிகரித்தால் நோய், அதனால் சமப்படுத்தினால் மட்டும் போதும் . சமப்படுத்தும் போதே குறைந்திருக்கும் மூலம் அதிகமாகிவிடுகிறது.

வாதம் இயக்கத்துக்கு காரணமானது. நரம்பு தொடர்பான நோய்கள், இதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள் வாதம் சீர்கேட்டால் வரும். மூன்று நாடிகளில் வாதம் சீர்கேட்டால் வரும் நோய்களே அதிகம். 80 வகையான நோய்கள் வரும் என்று சொல்லப்படுகிறது. வாதத்துக்கு அடுத்து பித்தம் இதனால் சுமார் 40 வகையான நோய்கள் வரும் எனப்படுகிறது. கபம் தான் கடைசி.

வெப்பம் அதிகமானால் பித்தம் வரும், மலச்சிக்கல் இதில் முதன்மையானது. பித்தம் அதிகமானாலும் நரைக்கும், வயதாகாமல் நரை வந்தால் அது பித்த நரையாக இருக்க வாய்ப்பு அதிகம், வயிற்றில் அமிலம் சுரந்து அது வாய் வழியாக வெளிவரும்.

சளி, எச்சில் அதிகம் சுரப்பது முதலிய நீர் தொடர்பான நோய்கள் கபம் சீர்கேட்டால் வரும்.




உணவுகள்:
  ---------------

1.வாதம்:

வாதத்தைக் கூட்டும் உணவு எது என்றால் அது புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமானத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உணவில் சேர்ப்பது வாதத்தை குறைத்திட உதவும்.

2.பித்தம்:

பித்தம் அதிகமாக துரித உணவு மற்றும் அதிகம் உணவகங்களில் தின்பது காரணம். (நமக்கே தெரியும் அவை நல்லதில்லை என்று).

பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட அதிகம் சேர்த்தால் பித்தம் கூடும். அரிசி அந்த விடயத்தில் நல்லது.(என்ன கொஞ்சம் அளவோடு அரிசியின் சட்டையை அதிகம் கழட்டாமல்(கைக்குத்தல்) திங்கணும்). கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க சமையலறை மட்டும் கவனித்தால் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம்

3.கபம்:

பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தவிர்க்கவும். மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை என்பவை கபத்தை குறைக்க உதவும்.

வாதம் இல்லையென்றால் மற்ற இரண்டு நாடிகளும் இயங்காது. அதனால் மூன்று நாடிகளில் வாதம் தான் ராசா.

இந்த நாடிகள் மக்களுக்கு அதிகரிக்கும் மிக மிக குறைவான பேருக்கு தான் குறையும். நல்ல சித்த மருத்துவர்கிட்ட கேட்கனும் அல்லது நல்ல நூற்கள் வாங்கி படிக்கனும். வாதம் பித்தம் கபம் பற்றி சிறிதளவு தெரிஞ்சிக்கிட்டோம். இந்த மூன்று நாடிகளை அதிகரிப்பது குறைப்பது சமன் செய்வது என்பது தான் முத்திரை. இப்ப முத்திரைகள் பற்றி பார்க்கலாம்.

முத்திரைகளை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்ற கேள்வி வரும். பலர் பல விதமா சொல்றாங்க. (24, 45, 60 நிமிடம் என்கிறார்கள்) அதனால் நாம் பொதுவாக 30 நிமிடம் என்று கொள்வோம். முத்திரைகளை எந்த நிலையிலும் செய்யலாம் அதாவது படுத்துகிட்டு, நடந்துகிட்டு, உட்கார்ந்துகிட்டு. ஆனால் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்தால் சிறந்தது. நம்மாள அது முடியலை என்றால் சம்மணம் போட்டு முதுகை நேராக வைத்துக்கொண்டு செய்தால் சிறப்பு, சம்மணம் போட முடியா நிலையில் உள்ளவர்கள் நாற்காலியில் முதுகை நேராக வைத்துக்கொண்டு உட்கார்ந்து செய்யலாம். 30 நிமிடத்திற்கு குறைவாகவோ அதிகமாகவோ செய்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாது. 30 நிமிடமும் ஒரே மூச்சாக (இடைவெளி விடாமல்) முத்திரை செய்தால் சிறப்பு இந்த அவசர உலகத்தில் ஒரே சமயத்தில் 30 நிமிடம் என்பது முடியாது என்று கருதுகிறீர்களா பாதகம் இல்லை, 5 நிமிடம் என்று 6 முறை இடைவெளி விட்டு செய்யலாம். முத்திரைகளை இரண்டு கையால் செய்ய வேண்டும் அது முடியாதவர்கள் ஒரு கையில் செய்யலாம்..

நமக்கு எது (வாதம், பித்தம், கபம்) குறைவு அதிகம் என்று தெரிந்து செய்தல் நலம், அதனால நாடி பார்க்க தெரிஞ்சிருந்தா சிறப்பு.

யோக முத்திரைகள் செய்யும் முன்...நமது உடலை அதற்காக தயார் செய்வோமா...

முதலில் இரண்டு முத்திரைகள் மட்டுமே செய்து உடலை சுத்தப்படுத்திக்கொள்வோம்...

முதலில் யோகாசனத்தில் வரும் முத்திரையை செய்யவேண்டும்:

இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வருபவர்க்கு முதுகுத்தண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது.இளமை ஏற்ப்படுதின்றது. முதுகுத்தண்டு வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருகின்றோம். இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் இந்த ஆசனத்தின் போது நன்றாக அழுத்துவதால் நீடித்த மலச்சிக்கல் நீங்குகிறது.

குடலை கழுவினால் மட்டுமே உடலை வளர்க்க முடியும் என்பது சித்தர் வாக்கு.

இதின் செய்முறை:

பத்மாசனத்தில் அமரவும்.இரண்டு உள்ளங்கைகளையும், இரண்டு குதின்கால்களின் மேல் வைத்து கைவிரல்களை மூடிக்கொள்ளவும். அல்லது கைகளை பின்புறமாக மூடிக்கொண்டும் செய்யலாம். நிமிர்ந்து நேரே உட்காரவும்.

நுரைஈரல் நிரம்பும் அளவு நன்றாக மூச்சை உள் இழுக்கவும்.இப்போது மூச்சை விட்டுக்கொண்டே முன்பக்கம் தரையை மூக்கு தொடும் வரை குனியவும். இந்த நிலையில் 10 முதல் 15 நொடிகள் இருக்கவும்.பிறகு மூச்சை இழுத்தவாறே நிமிர்ந்து சாதாரண நிலைக்கு வரவும். இதை தொடர்ந்து 3 முதல் 7 முறை செய்யலாம்.

இந்த ஆசனம் பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் செய்வது அவ்வளவு எளிது அல்ல. சிலருக்கு என்ன செய்தாலும் பத்மாசனம் போடவே வராது. அவர்கள் பத்மாசனம் சரியாக வரும் வரையில் சாதாரணமாக சுகாசனத்தில் அமர்ந்து செய்யலாம்.

பலன்கள்:மலச்சிக்கல் நீங்கும்.முதுகுத்தண்டில் இறுக்கம் நீங்கி முதுகுவலி போன்றவை வராது.முகத்தில் பொலிவும்,தேஜசும் ஏற்படுகிறது.நாளடைவில் வயிறு(தொப்பை), இடுப்பு சதை மற்றும் தொடை பகுதிகள் குறைந்து அழகுடன் இருக்கும். இப்பகுதியில் இருக்கும் நரம்புகள் இறுக்கம் பெரும்.இதனால் இந்த அசனம் எளிதில் செய்து மூக்கை வைத்து தரையை தொடலாம்.

குறிப்பு:

இந்த அசனம் கர்ப்பிணிப்பெண்கள் செய்யக்கூடாது.

இரண்டாவதாக கழிவு முத்திரை:

கட்டைவிரலின் நுனிப்பகுதியால் மோதிரவிரலின் கீழ அதாவது மூன்றாவதுரேகை உள்ள இடத்தை தொடவும். மெல்லியஅழுத்தம்போதுமானது.

சம்மணம், பத்மாசனம், சித்தாசனம் இந்தநிலையில் சுவாசத்தை சாதாரணமாகநிலையில் வைத்து அதை கவனித்துவரவேண்டும்.

தினமும் ஒரு நிமிடங்கள் செய்யும்போது 15 நாட்களில் அல்லது அதற்க்கு முன்காகவே உடலின்கழிவுகள் வெளியேற ஆரம்பிக்கும். அப்போது சிறுநீர் அதிகம்போவது, அதில்வாடைவீசுவது, மலம் அதிகவாடையுடன் அடிக்கடிபோவது, கறுத்துமலம் வெளியேறுவது, வியர்வை அதிகம் வெளியேறுவது, அதில் வாடைவீசுவது, பேதி உண்டாவது, இந்த அறிகுறிகள் அனைத்தும் கழிவு நம் உடலைவிட்டு நீங்குவதாக அர்த்தம்.

பின்பு மூன்று மாதங்களுக்கொருமுறை ஏழுநாட்கள் தொடர்ந்து செய்தால் கழிவுகள் மீண்டும் சேராது.

சிந்தனைச் சக்தி வளர தியான முத்திரை!
---------------------------------------------------------------

தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, சென்ஷன் முதலியவை அகலும். மன அமைதி கிடைக்கும்.

மூட்டு வலி குணமாக வாயு முத்திரை!
-----------------------------------------------------------

மூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், விரல்களை இப்படி வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி வைத்துக் கொள்ளவும்.

காது நன்கு கேட்க! சூன்ய முத்திரை
-------------------------------------------------------

காதில் வலி என்றால் இது போலக் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த ( shunya ) ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.

சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை!
-----------------------------------------------------------

மனம் மிகவும் பதற்றமாக உள்ளதா? உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்டனவா? நோய் வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக திடவலிமையை அளிக்க வேண்டுமா? அனைத்திற்கும் பிருதிவி முத்திரை பயன்படும். மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்.

இரத்தம் சுத்தமாக வருண் முத்திரை!
----------------------------------------------------------

இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் இது போல வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும்.

கொழுப்பு கரைய சூரிய முத்திரை!
----------------------------------------------------

உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.

கண்ணாடியைத் தவிர்க்க பிராண முத்திரை!
---------------------------------------------------------------------

நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.

காய்ச்சல் குணமாக லிங் முத்திரை!
-------------------------------------------------------

இரண்டு உள்ளங்கைகளையும் விரல்களையும் இதுபோல் கோர்த்து இறுக்கிக் கொள்ளவும். இடக் கைப் பெருவிரல் நிமிர்ந்து நிற்க வேண்டும். அந்த விரலைச் சுற்றி வலக்கைப் பெருவிரல் இருக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தால் குளிர், ஜலதோஷம், தொற்று நோய் முதலியன பரவும். வெளியூரில் காய்ச்சல் வருவதுபோல் தோன்றினால் இது போல் நுரையீரல்களுக்கு வெப்பத்தை உண்டாக்கும் சக்தியை லிங் முத்திரை கொடுத்துவிடும். சளிக் காய்ச்சல், கொழுப்பு உள்ளவர்கள் இந்த முத்திரையால் பெரிய அளவில் நன்மை அடையலாம். காய்ச்சலின் போது இந்த லிங்( ling ) முத்திரையை அடிக்கடி பயன்படுத்தவும். இதனால் விரைந்து குணம் பெறலாம்.

நெஞ்சுவலியா? அபான் வாயு முத்திரை
-------------------------------------------------------------

நெஞ்சுவலி, இதயம் வேகவேகமாகத் துடித்தல் முதலியவற்றை அபான் வாயு(apan vayu) முத்திரை குணப்படுத்தும். சுட்டுவிரல், கட்டை விரலின் அடியில் இருக்க வேண்டும். அதன் பிறகு நடுவிரலும் மோதிர விரலும் கட்டைவிரல், நுனியைத் தொடுவது போல வைத்துக் கொண்டு தியானம் செய்யவும்.

மாரடைப்பு, பதற்றம் முதலியவற்றைத் தடுக்க....
----------------------------------------------------------------------------

வாயு முத்திரை, அபான் வாயு முத்திரை ஆகியவற்றுக்கு அடுத்து இப்படி விரல்களை வைத்துக் கொள்ளலாம்.

இரத்தக் கொதிப்பா? வியான முத்திரை
--------------------------------------------------------------

இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த கட்டைவிரல் நுனி மீது சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை வைத்துக் கொண்டு அமரவும். வியான( vyana ) முத்திரை என்று இதற்குப் பெயர்.

எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். இதனால் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும். அது மட்டுமல்ல, மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும்.

அஸ்வின் முத்திரை:
---------------------------------

பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.

இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.

Friday, October 17, 2014

தியானம் என்றால் என்ன?


மனதில் தோன்றும் ஒரு எண்ணத்திற்கும் மற்றொரு என்னத்திற்கும் ஏற்படும் இடைவெளியை அதிகபடுத்துவதே ஆகும் மற்றும் அவற்றை ஒருமுகபடுத்தி பிறவி இல்லா நிலையை அடைவதே ஆகும்.

தவம் என்றால் என்ன?

எண்ணம் தோன்றும் இடத்திலேயே விழிப்பாய் நிற்பது தவம்.

எண்ணம் வர காரணம்?

1.தேவை

2.பழக்கம்.

3.சூழ்நிலை

4.பிறர் மனம் தூண்டுதல்

5.கருவமைப்பு

6.தெய்வீகம்

7.தெளிவு

8.முடிவு

9.செயல்

10.முயற்சி

11.அனுபோகம்

12.ஆராய்ச்சி

13.விளைவு

பாவங்கள் உருவாக காரணம் ?

1.உடல் செல் (செயல்)

2.மூளை செல் (எண்ணம்)

3.கருவமைப்பு(பெற்றோரின் பாவனைகள்)

4.சமுதாயம்.

எண்ணத்தின் வேலைகள் :

1.இன்பம்

2.துன்பம்

3.பேரின்பம்

4.அமைதி

Thursday, October 16, 2014

பணக்காரணாக வேண்டுமா....

உங்களின் தேவைகள் எளிதாக நிறைவேற்றலாம்? உங்கள் ஐம்புலன்களும் நீங்கள் அறை தூக்க நிலையில் இருக்கும் நேரம் ஓய்வில் இருக்கும் , இந்த நேரத்தில் உங்கள் ஆழ் மனதில் உங்களுக்கு வேண்டியதை பதிவிடுங்கள் .  தொடர்ந்து உங்கள் ஆழ் மனதில் நம்பிக்கையோடு பலநாள் பதிவிடும் எந்தக் காரியமும் விரைவில் நடக்கும் !!

1  பணத்தை யாருக்கு தந்தாலும்?   நம் மனதில் , அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து விட்டு மீண்டும் பல மடங்காக என்னிடமே திரும்பி வந்து விடு என்று மனதார ஆசீர்வதித்து கொடுக்க வேண்டும்! 

2 பணத்தை கேவலமாக நினைத்து0வீசி எறியக் கூடாது! 

3 பணத்தின் தலைப் பகுதியைப் நம் கையில் பிடித்துக் கொண்டு , வால் பகுதியை தருபவர்கள் கையில் கொடுக்க வேண்டும் ! 

4 சம்பளம் வாங்கியவுடன் ஓரு நாளாவது அந்தப் பணத்தை நாம் வைத்திருந்து , அடுத்த நாள்தான் யாருக்கு தர வேண்டியுள்ளதோ தர வேண்டும் ! இதை கடைபிடித்தால் உங்களிடம் பணம் சேரும் ! 

5 தம் வீட்டில் கல் உப்பு பானைக்குள், நம் ஒரு நாள் வைத்திருந்து அந்த பணத்தை எடுத்து செலவு செய்ய ? உப்பில் பணத்தில் சக்தி படியும் , நீங்கள் சமையலுக்கு அந்த உப்பை பயன் படுத்தும் போது , உப்பில் படிந்த பணத்தின் சக்தி உங்கள் உடலில் பரவி விடும் ! அதனால் பணத்தை ஈர்க்கும் சக்தி உங்கள் உடலுக்கு வநது விடும் ! !

6 விதைத்தாத்தான் அறுவடை பண்ண முடியும் . இதுதான் பிரபஞ்ச தத்துவம் ! நம் சம்பாத்தியத்தில் கண்டிப்பாக குறைந்தது நூற்றுக்கு, ஐந்நு பங்காவது தானம் செய்ய வேண்டும் ! நீங்கள் எதை விதைக்கின்றீர்களோ அதை கட்டாயம் நூறு மடங்கு அறுவடை செய்ய முடியும் ! வருமானம் எவ்வளவு வந்தாலும் தானே அனுபவித்து வந்தால் ? அப்படியேதான் நம் வாழ்க்கை ஓடும் ! முனனேற்றம் இருக்காது! விதையுங்கள் பணத்தை தானமாக உங்கள் வருமானத்தில் ஐந்து பங்காவது? அறுவடையாகும் நூறு பங்காக!! இது உண்மை!!

7 மணி பர்ஸ் ஒவ்வொருத்தரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதில் , குறிப்பிட்ட எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும் . எந்தப் பெருளும் அதன் தன்மையுள்ள பொருளை ஈர்க்கும் சக்தியுடையது ! பணம் பணத்தை ஈர்க்கும்.

8, நம் , குளிந்து முடித்தவுடன் , முதுகை முதலில் துவட்டுங்கள். முதுகை துவட்டும் போது ? உங்கள் மனதில் பிரச்சனைகளை தரக்கூடிய தீய ஆற்றல்கள் நீரில் கழுவப் பட்டு விட்டதென நினைத்துக்கொள்ளுங்கள் . பின் உங்கள் முகத்தை துவட்டுங்கள், முகத்தை துவட்டும் போது ? உங்கள் மனதில் ?, இளமையும் , ஆரோக்கியத்தையும் , சகல செல்வத்தையும் தரக் கூடிய நல் ஆற்றல்கள் உங்களைச் சூழ்வதாக நினைத்து வாருங்கள் ! ! உங்கள் வாழ்க்கையில் , எண்ணற்ற மாறுதல் நடப்பதை உணர்வீர்கள்! !

9 உங்கள் உள் மனதிடம் , நான் அளவற்ற செல்வத்துக்கு அதிபதி ஆகி விட்டேன் . எனக்கு செல்வம் பல வழிகளில் தடையின்னி வந்நு கொண்டு இருக்கிறது. நான் செல்வங்களை ஆளப் பிறந்தவன் ! என தினசரி பல முறை சொல்லி வாருங்கள் ! ! பகவத் கீதையில் "நீ எதை நிணைக்கிறாயோ , அதுவாகவே ஆகிறாய்" பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னது ! 

10 ஏழை , எளியவர்கள் , பார்வையற்றவர்கள், பெரும் நோயாளிகழுக்கு சிகிச்சை செலவுகளுக்கும் , செய்யும் பண உதவிகள் , உங்களுக்கு கைமேல் பலன் தரும் ! நீங்கள் செய்யும் பண உதவிகள் , நீங்கள் செலவு செய்த பணத்தைப் போல் பல மடங்கு பணத்தை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் !

Tuesday, October 14, 2014

சூரிய நமஸ்காரம்

சூரியனை முழுமுதற்கடவுளாகப் போற்றி வணங்கும் வழக்கம் பண்டைய காலம் தொட்டே இருந்துவருகிறது. சூரியனின் ஆற்றலையும், பயனையும் நம் முன்னோர்கள் மட்டுமின்றி, அன்றைய நவீன அறிவியல் தொழில் நுட்ப உலகத்தில் மின்சக்தி பற்றாக்குறையை நீக்க சூரிய சக்தியை சரியான முறையில் பயன்படுத்த நமது அறிவியல் அறிஞர்கள் முன்வந்துள்ளனர். காலம் செல்லச் செல்ல சூரிய நமஸ்காரம் மட்டுமல்லாது அனைத்து சக்திகளும் சூரியனிடமிருந்து நேரடியாகப் பெறும் வாய்ப்பு உருவாகும். 

சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிச்ய நோய்தீர்க்கும் யோக பயிற்சியாகும். தொன்று தொட்டே பாரத மக்கள் பின்பற்றி வந்த ஓர் ஆசார முறை சூரிய நமஸ்காரம். உடல் மற்றும் மனது உறுதியடையவும் அமைதியடையவும் உதவும் ஆசாரமிது. இதை விதி முறைகள் படி செய்யும் போது உடற்பாகங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றது. 

அதிகாலைநேரத்தில் நம் உடலில் படும் சூரிய ஒளி தேக ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதைத்தான் நமது புண்ணிய பாரத பூமியில் வாழ்ந்த சித்தர்கள் காலை வெயிலில் ஆரம்பிக்கும் பித்தம், மாலை வெயிலில் தணிந்து போகும் என்றனர். சூரிய ஒளியைக் கொண்டு கொடிய நோயான காமாலையையும் குணப்படுத்தலாம் என்கிறது அதர்வண வேதம். 

சூரிய நமஸ்காரம் வாயிலாக நமது உடலிலுள்ள எல்லா முட்டுகளுக்கும் அசைவு ஏற்படுகிறது. சருமத்தில் வைட்டமின் டி உற்பத்தி செய்யும் திறன் காலை சூரிய ஒளிகதிர்களும் உண்டு. கால்சியம் உற்பத்தியை கட்டுபடுத்தும் திறனும் உண்டு என்பது அறிவியல் துறைகள் அங்கீகரித்து உள்ளன. மேலும் உடலுறுப்புகள் உறுதி பெறுவதால் காச நோயனுக்களின் ஆக்கிரமிப்பையும் தடுக்கின்றன. தொடர்சியாக சூரிய நமஸ்காரம் செய்வதினால் அகால வயது முதிர்ச்சியை ஓரளவுக்கு தடை செய்யலாம். மூட்டுகள் நல்ல லாவகமடைகின்றது. தொப்பை வயிறு வருவதை கட்டுபடுத்த இயல்கின்றது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் நிலைநிறுத்தவும் சூரிய நமஸ்காரம் உதவகின்றது.

சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் ஆரம்பத்தில் அனுசரிக்க வேண்டிய சில விசயங்களை பார்ப்போம். பரிசுத்தமான எளிய வாழ்க்கை வாழ வேண்டும். அளவான உணவு அருந்த வேண்டும். விசாலமானதும் காற்றோட்டம் உள்ளதுமான இடத்தில் நமஸ்காரம் செய்ய வேண்டும். நமஸ்கார வேளையில் மிக அவசியமான ஆடை மட்டும் தளர்த்தியாக அணியவேண்டும். தேனிர், காபி, கொக்கோ, புகையிலை, மதுபானம் முதலியவை அருந்த வேண்டாம், இப்படி அநேக விஷயங்கள் கவனித்து சூரிய நமஸ்காரம் ஆரம்பிக்க வேண்டும்.

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு மிகவும் உகந்த நேரம் சூரிய உதயமாகும் அதிகாலை நேரம். இளஞ்சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. இரவில் தூக்கத்தால் உடலுக்கும், மனத்திற்கும் ஓய்வு கிடைப்பதால், அதிகாலையில் உடற்தசைகள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக இருக்கும். மூளையின் அலைகள், அதிர்வுகள் குறைந்து அமைதியாக இருப்பதும் அதிகாலையில்தான். அதிகாலையில் வெப்பம் குறைவாக இருப்பதால் சூரிய நமஸ்கார பயிற்சியின் போது நமது உடலும் உள்ளமும் சோர்வடைவதில்லை. சூரிய நமஸ்காரம் செய்வதற்கு உகந்த திசை கிழக்கு. சூரியனின் கதிர்கள் உடல் முழுவதும் படும் வகையில் சுத்தமான காற்று இருக்கக்கூடிய திறந்த வெளியில் நின்றபடி செய்ய வேண்டும்.

சூரிய நமஸ்காரம் எட்டு நிலைகளை வரிசையாகக் கொண்ட ஒரு யோக பயிற்சியாகும். ஒவ்வொரு சூரிய நமஸ்காரமும் மொத்தம் பன்னிரண்டு ஆசன நிலைகளை உள்ளடக்கியதாகும். பன்னிரண்டு ஆசனங்கள் இணைந்தது ஒரு சுற்று. இவ்வாறு 12 நமஸ்கார சுற்றுகள் இணைந்தது ஒரு சூரிய நமஸ்காரமாகும்.

செய்யும் முறை

1. கால்களை ஒன்றாக வைத்தபடி நிற்கவும். கைகளை தலைக்கு மேல் தூக்கவும். கைகளை ஒன்றாக இணைத்து உங்களது மார்புக்கு நேராகக் கொண்டு வரவும். கைகளை வணங்குவது போல் கொண்டு வரவும். மீண்டும் கைகளை மேலாகத் தூக்கியபடி கீழே இறக்கவும்.

2. மூச்சை உள் இழுத்தபடி, கைகளை மேலேத் தூக்கவும். கைகள் உங்கள் காதுகளை உராய்ந்தபடி இருக்க வேண்டும். மெதுவாக கைகளை பின்புறமாக வளைக்கவும். கைகளுக்கு இணையாக தலையும் கவிழ வேண்டும்.

3. மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவும். கைகளை கால்களுக்கு இணையாக தரையைத் தொடவும். தலை கால்களின் முட்டியைத் தொட்டபடி இருக்க வேண்டும். இதே நிலையில் ஒரு சில விநாடிகள் இருக்க வேண்டும். இது பாத பஷ்சிமோடாசனம்.

4. மூச்சை உள் இழுத்தபடி உங்களது வலது காலை பின்னோக்கி வைக்கவும். அதே சமயம் இரண்டு கைகளையும் இடது காலுக்கு இணையாக ஊன்றவும். தலையை மேல் நோக்கியவாறு பார்க்கவும். இதே நிலையில் ஒரு சில விநாடிகள் இருக்கவும்.

5. மூச்சை வெளியே விட்டபடி பின்னோக்கி செலுத்திய வலது காலுக்கு இணையாக இடது காலையும் எடுத்துச் செல்லவும். கைகளை நன்கு நீட்டி ஊன்றவும். இடுப்புப் பகுதி நன்று உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். அதாவது வளைவு தூண் போன்று உங்கள் உடல் அமைப்பு இருக்க வேண்டும்.

6. மீண்டும் மூச்சை உள்ளிழுத்தபடி உடலை தரையில் படுக்க வைக்கவும். கால்கள், முட்டி, கைகள், மார்பு மற்றும் நெற்றி ஆகியவை தரையை தொட வேண்டும். இடுப்புப் பகுதி மட்டும் சற்று உயர்ந்து இருக்க வேண்டும். இப்போது மூச்சை வெளியே விடவும்.

7. மூச்சை உள்ளிழுத்தபடி தலையை பின்புறமாக நீட்டவும். உங்கள் முதுகை எவ்வளவு முடியும் அவ்வளவிற்கு பின் பக்கமாக வளைக்கவும். இதைத்தான் புஜங்காசனம் என்று அழைப்பர்.

8. மூச்சை வெளியே விட்டபடி, மெதுவாக கைகளை உயர்த்தவும். அதற்கேற்ப இடுப்பு மற்றும் தலையையும் உயர்த்தி மீண்டும் வளைவுத் தூண் அமைப்பை ஏற்படுத்தவும்.

9. மெதுவாக மூச்சை உள்ளே இழுத்தபடி, வலது காலை ஒரு அடிக்கு முன்னாடி முட்டியை மடக்கியபடி கொண்டு வந்து வைக்கவும். தலையை மேலாகத் தூக்கி கைகளை நேராக வைக்கவும்.

10. வெளியே மூச்சை விட்டபடி, வலது காலுக்கு இணையாக இடது காலையும் மடக்கியபடி கொண்டு வரவும். தலை முட்டியைத் தொட்டபடி இருக்க வேண்டும்.

11. மூச்சை உள்ளே இழுத்தபடி மெதுவாக கைகளை உயர்த்தவும். பின்புறமாக வளைந்து கைகளைப் பார்த்தபடி தலை இருக்க வேண்டும்.

12. மீண்டும் வணக்கம் செய்யும் நிலைக்கு வர வேண்டும்.பின்னர் பழைய நிலைக்கு வர வேண்டும். இதுதான் சூரிய நமஸ்காரத்தின் முழுமையாகும். இதே முறையை அடுத்த காலுக்கு மாற்றி செய்யவும்.

எச்சரிக்கை.

முதுகுப் புறத்தில் பிரச்சினை இருந்தாலோ, இடுப்பு எலும்புப் பிரச்சினை இருப்பவர்களும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம். சூரிய நமஸ்காரம் செய்வதற்கு முன்பு தெளிவான அறிவுரையைப் பெற வேண்டும்.)

Wednesday, October 1, 2014

சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும்,இருப்பிடமும்


திருவொற்றியூர்:

பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி பட்டினத்தார் கோவில் வீதி.ஆவணி மாதத்தில் வரும் உத்ராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்= பட்டினத்தார் கோவில் வீதியில் இவரது பெயருள்ள மடம்

ஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி= பாடகச்சேரி ராமலிங்க சாமிகள் மடத்துள் இருக்கிறது.

அருள்மிகு யோகீஸ்வரர் சாமி=வடிவுடையம்மன் கோவில் அருகில் தட்சிணாமூர்த்தி ஆலயம் ஸ்தாபித்தவர்.

பரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில் 4,தங்கம் மாளிகை அருகில்.

ஞானப்பிரகாச சாமிகள்= வடக்கு மாடவீதி 145/30 இல் சிவாமிர்த ஞான ஆசிரமத்தில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை.

மவுன குரு சாமிகள்= கடற்கரையோரம் சமாதி கோவில்.

முத்துக்கிருஷ்ண பிரம்மம்=ஆஞ்சநேயர் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் எதிரே சமாதி; கார்த்திகை மாத சதயம் நட்சத்திரத்தன்று குரு பூஜை;

ஞானசுந்தர பிரம்மம்= முத்துக்கிருஷ்ண பிரம்மம் சமாதி அருகில் ஞான சுந்தர பிரம்மம் சமாதி.சித்திரை மாத உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

ராயபுரம்:

குணங்குடி மஸ்தான் சாயபு= காய்கறி மார்க்கெட் பின்புறம் பிச்சாண்டி தெருவில் உள்ளது.

ஞானமாணிக்கவாசக சிவாச்சாரியார் சித்தர்= மன்னார்சாமி கோவில் தெரு பழைய பாலம் இறக்கத்தில் உள்ள ருத்ர சோமநாதர் கோவிலில் சமாதி .

வியாசர் பாடி:

சிவப்பிரகாச சாமி=இரவீஸ்வரர்-மரகதாம்பாள் கோவிலில் சமாதி கோவில்.

கரபாத்திர சிவப்பிரகாச சாமி=1 வது தெரு சாமியார் தோட்டம் அம்பேத்கர் கல்லூரி அருகில்.பங்குனி உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

பெரம்பூர்:

அந்துகுருநாத சுவாமிகள்=மாதவரம் நெடுஞ்சாலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சமாதி கோவில்-பஞ்சமுக வடிவமும் உள்ளது.

மதனகோபாலசாமி=மேல்பட்டி பொன்னப்பமுதலி தெரு ஈஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில் சமாதி கோவில்;

சந்திர யோகி சுவாமி=மங்களபுரம் ஐந்துலைட் அருகில்.

வேர்க்கடலை சுவாமி=அய்யாவு தெரு,திரு.வி.க.நகர்.

மதுரை சாமி=செம்பியம் வீனஸ் தியேட்டர் 2 வது குறுக்குத் தெரு வலது பக்கம் மதுரை சாமி மடத்தில்.

மயிலை நடராஜ சுவாமி=கொளத்தூர்- பெரவள்ளூர் செல்லியம்மன் கோவில் பின்புறம்.

ஓட்டேரி:

ஆறுமுகச்சாமி=173/77 டிமலஸ் சாலை,பெரம்பூர் பேரக்ஸ் ரோடு-ஓட்டேரி மயானத்தில் சமாதி கோவில்-உருவப்பட பூஜை.

புரசைவாக்கம்:

வீரசுப்பையா சுவாமி

புவனேஸ்வரி தியேட்டர் எதிரில்-52,பெரம்பூர் பேரக்ஸ் ரோடு மடத்தில் சமாதி கோவில்.

ஈசூர் சச்சிதானந்த சாமி=கொசப்பேட்டை சச்சிதானந்தா தெரு(வசந்தி தியேட்டர் அருகில்) சமாதி கோவில்.

எழும்பூர்:

மோதி பாபா=422,பாந்தியன் சாலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில் தர்கா.

அனந்த ஆனந்த சுவாமி மற்றும் சபாபதி சுவாமி=பாலியம்மன் கோவில் பின்புறம் சாமியார் தோட்டத்தில் இருவரது சாமதி கோவில்-ஐப்பசி திருவாதிரை நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

நுங்கம்பாக்கம்:

கங்காத சுவாமி=ஹாரிங்டன் ரோடு 5 வது அவென்யூ ஜெயவிநாயகர் கோவிலில் சமாதி.

நாதமுனி சாமி=ஹாரிங்டன் ரோடு,பச்சையப்பன் கல்லூரி பின்வாசல் அருகில் நாதமுனி மடத்தில் சமாதி கோவில்.

பன்றிமலை சாமி=5,வில்லேஜ் ரோட்டில் ‘ஓம்நமச்சிவாய’என்ற பெயரில் ஆஸ்ரமத்தில் சமாதி.

ஆதிசேஷானந்தா=நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் பின்புறம் ஆதிசேஷானந்தா கோவிலில் சமாதி.

வீரமாமுனிவர்=நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் காவல்நிலையம் எதிரில் அசலத்தம்மன் கோவில்.

கோடம்பாக்கம்:

ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமி=அசோக் நகர்-சாமியார் மடம் டாக்டர் சுப்பராயன் நமர் சாமியர் மடம் ஞானோதய ஆலயம்-ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமிபீடம்.

வடபழனி:

அண்ணாசாமி,ரத்தினசாமி,பாக்கியலிங்கசாமிகள்=வடபழனி முருகன் கோவில் உருவாக இந்த மூவரும் காரண கர்த்தாக்கள்.இவர்களது சமாதி கோவில் முருகன் கோவில் பின்புறம் நெற்குன்றம் பாதையில் வள்ளி திருமண மண்டபம் அருகில்.

மைலாப்பூர்:

திருவள்ளுவர்-வாசுகி அம்மையார்=லஸ் அருகில் திருவள்ளுவர் கோவிலில்.

அப்பர் சாமிகள்=171,ராயப்பேட்டை ஹைரோடு-சமஸ்க்ருத கல்லூரி எதிரில்,மைலாப்பூர் அப்பர் சாமிகள் சமாதி உள்ளது.

குழந்தைவேல் சுவாமி=சித்திரகுளம் எஸ்.டி.பி.கில்டு பில்டிங்கில் இருக்கிறது.

முத்தையா சாமிகள்=குழந்தைவேல் சாமிகள் சீடர்-அவரது சமாதி அருகில்.

ஆலந்தூர்:

தாடிக்கார சுவாமி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் தாடிக்காரசாமி தெரு-பழைய எண்:23-24 இடையே சந்து.உள்ளே தாடிக்கார சாமியின் சிறிய ஜீவ சமாதி கோவில்.சிவலிங்க பிரதிஷ்டை.

குழந்தைவேல பரதேசி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் பின்புறம் 53,சவுரித்தெரு,எஸ்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாயிலுக்குக் கீழ்ப்புறம் சமாதி கோவில்.

கிண்டி:

சாங்கு சித்தர் சிவலிங்க நாயனார்=எம்.கே.என்.ரோடு 36 ஆம் எண்-சாங்கு சித்தர் சிவலிங்கநாயனார் சமாதி கோவில்-சிவலிங்க பிரதிஷ்டை.இத்துடன் இவரது சீடர்கள் ஸ்ரீகொல்லாபுரி சாமி,ஸ்ரீஏழுமலை சாமிகளின் சமாதி,ஆனி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை.

சத்யானந்தா கோழீபீ சித்தர்=பஸ் ஸ்டாப் அருகில் உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில்.

திருவான்மியூர்:

பாம்பன் சுவாமிகள்-கலா சேத்ரா அருகில் திருமட வளாகத்துள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் சமாதி ஆலயம்.ஸ்ரீமுருகக்கடவுள் பிரதிஷ்டை.

வால்மீகி=மருந்தீஸ்வரர் கோவில் எதிரில் சிறிய கோவில்.

சர்க்கரை அம்மாள்=75,கலா சேத்ரா ரோடு,

வேளச்சேரி:

சிதம்பரச்சாமி என்ற பெரியசாமி=காந்தி சாலை திருப்பம்-1,வேளச்சேரி மெயின் ரோடு-சிவலிங்க பிரதிஷ்டை.

ராஜகீழ்ப்பாக்கம்:

சச்சிதானந்த சற்குரு சாமிகள்=அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் சமாதி.

பெருங்குடி:

நாகமணி அடிகளார்=கந்தன் சாவடி பஸ்ஸ்டாப் – நாகமணி அடிகளார் சாலை அம்மன் கோவிலுகுள்.

நங்கநல்லூர்:

மோனாம்பிகை-ஞானாம்பிகை- சாதுராம்

இம்மூவரின் சமாதி பிளாட் 21,பொங்கி மடம்(மாடர்ன் உயர்நிலைப் பள்ளி அருகில்)-ஸ்டேட் பாங்க் காலனி

சிட்லப்பாக்கம்:

சாயி விபூதி பாவா= 83,முதல் மெயின் ரோடு,ஹெச்.சி.நகர்-சிட்லப்பாக்கம் பாலம் இறக்கத்தில் சமாதி கோவில்-அருகில் குமரன் குன்றம் மலைக்கோவில்.

தாம்பரம்:

எதிராஜ ராஜயோகி-ஊரப்பாகம் அருகில் கரணை புதுச்சேரியில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.

படப்பை:

துர்கை சித்தர்-ஜெயதுர்கா பீடம் கோவில்.

பெருங்களத்தூர்: ஸ்ரீமத் சதானந்தசாமி- ஆலம்பாக்கம் சதானந்தபுரம்- பெருங்களத்தூரில் சமாதி கோவில்.

புழல்

கண்ணப்ப சாமி

புழல் சிறைச்சாலையை அடுத்து காவாங்கரையில் கண்ணப்பசாமிகள் ஆசிரமம்;ஜீவசமாதி மேடை மீது சாமிகள் அமர்ந்த கோலத்துடன் காட்சியளிக்கிறார்.இவருக்கு அருகில் இவரது சீடர் கோவிந்த சாமியின் ஜீவசமாதி.

காரனோடை

மல்லையா சாமிகள் 

காரனோடை தாண்ட குசஸ்தல ஆற்றுப்பாலத்தின் கீழ் வடகரையில் சமாதிகோவில் அமைந்திருக்கிறது.இங்கு சாமிகளின் சிலை கருங்கல்லால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்

காரனோடை கோபிகிருஷ்ணா தியேட்டர் எதிரில் ஆத்தூர் சாலையில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.பிரதி ஆவணி மாதம் வரும் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

அலமாதி 

மார்க்கண்டேய மகரிஷி

அலமாதீஸ்வரர் கோவிலுக்குள் சமாதி அமைந்திருக்கிறது.

கோவணச்சாமி 

அலமாதீஸ்வரர் கோவில் அருகில் சமாதி இருக்கிறது.

பூதூர்

ஷா இன்ஷா பாபா

செங்குன்றம் வடக்கே சோழவரம் டூ ஓரக்காடு ரோட்டில் 6 கி.மீ.பூதூர் கிராமம் இருக்கிறது.இந்த கிராமத்தின் மேற்குப்பகுதியில் தர்கா உள்ளது. 

பஞ்சேஷ்டி

புலேந்திரர்(சித்தர்களின் தலைவர் அகத்தியரின் சீடர்)

ரெட் ஹில்ஸ் டூ பொன்னேரி நெடுஞ்சாலையில் ஜனப்பன் சத்திரம் கூட்டுரோடு தாண்டி பஞ்சேஷ்டி திருத்தலத்திலுள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தினுள் ஜீவசமாதி உள்ளது.இங்கு இருக்கும் இஷ்டலிங்கேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அம்பத்தூர்

ஐயா சூரியநாத கருவூரார்

பதினெண் சித்தர் மடம்,13,குமாரசுவாமி தெரு,வரதராசபுரம்,அம்பத்தூர்.பிரதி அக்டோபர் 10 ஆம் தேதி வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

வடதிருமுல்லைவாயில்

அன்னை நீலம்மையார்

37/1 வடக்கு மாடவீதி மாசிலாமணி ஈஸ்வரன் கோவில் அருகில் ஜீவசமாதி இருக்கிறது.பிரதி கார்த்திகை மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

மாசிலாமணி சுவாமிகள்

சோளம்பேடு தாமரைக்குளம் ஆஞ்சநேயர் கோவிலில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

பூந்தமல்லி

கர்லாக்கட்டை சித்தர்

வைத்தீஸ்வரன் கோவிலில் சிவன் சந்நதிக்கு வலப்புறம் தூணில் உள்ளார்.

பைரவ சித்தர்

பஸ்நிலையம் எதிரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

கருடகோடி சித்தர்

பூந்தமல்லி தண்டரை சாலையில் அமைந்துள்ள சித்தர்காட்டிலிருந்து 1 கி.மீ.தூரத்தில் சுந்தரவரதபெருமாள் கோவில் தெப்பக்குள இடப்பாகத்தில் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர்:

அருள்வெளி சித்தர்

பூதேரிபண்டை கிராமம்= வி.ஜி.பி.ராமானுஜ கிராமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.உயரமான சமாதி மேடை.சுவாமிகளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

வெள்ளறை கிராமம்

ராஜராஜ பாபா சித்தர்

கொளத்தூர் சமீபம் வெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ளது.

மாங்காடு :

சர்வசர்ப்ப சித்தர் 

மாங்காடு டூ போரூர் சாலையில் பேரம்புத்தூர் அருகில் கோவிந்தராஜா நகரில் ஸ்ரீசிவசித்தர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

புதுப்பட்டிணம்(ஈ.சி.ஆர்)

மாயவரம் சித்தர்சாமி & மாதாஜி சித்தர்

ஈ.சி.ஆர்.சாலை புதுப்பட்டிணம் அருகே மாயவரம் சித்தர்சாமி மற்றும் 18 சித்தர் திருவுருவங்கள் இருக்கின்றன.இருவருக்கும் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.

கோவளம் 

ஆளவந்தார் சாமி 

கோவளம் டூ நெமிலி வி.ஜி.பி.தாண்டி பீகாவரம் அருகில் இருக்கும் நெமிலியில் இவரது ஜீவசமாதி இருக்கின்றன.

திருக்கழுகுன்றம் :

குழந்தை வேலாயுத சித்தர் 

செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12 கி.மீ.தூரத்திலுள்ள திருக்கச்சூரில் சிறிய மலையில் மருந்தீஸ்வரர் கோவில் அருகே ஜீவசமாதிக் கோவில் அமைந்திருக்கிறது.

அப்பூர்=பதஞ்சலி சுவாமி 

திருக்கச்சூர் டூ ஓரகடம் இடையே அமைந்துள்ள அப்பூர் பஸ்நிலையம் அருகில் கருமாரியம்மன் புதுக்கோவில் அகஸ்தீஸ்வரர் ஆஸ்ரமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.

திருப்போரூர் :

சிதம்பரச்சாமி 

திருப்போரூரிலிருந்து 2 கி.மீ.கண்ணகப்பட்டு உள்ளது.இங்கே சிதம்பரசாமிகள் மடாலயம் நடுப்பகுதியில் ஜீவசமாதியின் கருவறையில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.பிரதி வைகாசி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

செம்பாக்கம் :

இரட்டை சித்தர்கள் 

செங்கல்பட்டு டூ கூடுவாஞ்சேரி சாலையில் செம்பாக்கம் ஸ்ரீபொன்னம்பல சாமிகள் மற்றும் ஸ்ரீதிருமேனிலிங்க சாமிகள் ஆகியோரது ஜீவசமாதிகள் உள்ளன.

கூடுவாஞ்சேரி :

மலையாள சாமி 

கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில்பின்புறம் ஜீவசமாதி இருக்கிறது.அருகில் இருக்கும் வயல்வெளியில் தியாகராய சாமி ஜீவசமாதி இருக்கிறது.

அச்சரப்பாக்கம் :

முத்துசாமி சித்தர் 

அச்சிறுப்பாக்கம் டூ கயப்பாக்கம் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் நடுப்பழனி முருகன் கோவில் உள்ள குன்று இருக்கிறது.இந்த முருகன் கோவில் வெளியே சன்னதிக்கு வடபுறம் முத்துச்சாமி சமாதி மண்டபம் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஓம்சிவசக்திஓம்

நன்றி :-http://anbinvaasal.blogspot.in/