Tuesday, October 29, 2013

இயற்கைவளம்

இயற்கைவளம் அழிக்கப்படுவதால் மனித இனத்திற்கு "நண்பனாக' விளங்கிய பல பறவைகள் மாயமாகி விட்டது.
சிட்டுக்குருவி,சிட்டுக்குருவி சேதி தெரியுமா... என்ற பாடல் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அந்த சிட்டுக்குருவியை தான் பார்க்க முடியவில்லை. வல்லூறுகள், கரிச்சான், மைனா, காட்டுபுறா, சிரகி, தாரா, உள்ளான், வெள்ளை கொக்கு போன்ற பல பறவை இனங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தது. இவை இப்போது அழிந்து விட்டதோ என்ற அச்சமும், அழிந்து வருகிறதோ என்ற கவலையும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மரங்கள், காடுகள் அழிக்கப்பட்டு மனைகளாகவும், பாலங்களாகவும், சாலைகளாகவும் மாறியது. பறவைகளின் இனப்பெருக்கத்திற்கான சூழ்நிலைகள், தங்கும் வசதிகளில் பின்னடைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுச்சூழலின் பாதுகாவலனாக விளங்கிய பறவையினங்கள் அழிக்கப்பட்டும், அழிந்தும் வருகிறது என இயற்கை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.தொற்று நோய் பரப்பும் இறைச்சிக்கழிவுகளை அகற்றும் பிணம் தின்னி கழுகுகள், காடு, வயல்வெளி மற்றும் பரந்து விரிந்த குப்பைமேடு உள்ளிட்ட திறந்த வெளிகளில் அழுகி கிடக்கும் எலி முதல் மாடுகள் உள்ளிட்ட பல்வேறு இறைச்சிகளை தின்று துப்புரவு பணி மேற்கொண்ட வல்லூறுகள். தேள், பூரான், விஷ வண்டுகளை காலி செய்யும் காடை, கரிச்சான் போன்ற பறவைகள், வீட்டுக்கு வீடு செல்ல பறவையாக வளர்ந்த மைனா ஆகியவை அழிந்து விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மனிதனுக்கு மருத்துவ ரீதியாகவும், சுகாதார ரீதியாகவும் உதவிய அற்புத பறவையினங்கள் இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலும் இல்லாமல் போய்விடும் நிலை காணப்படுகிறது. காடுகளிலும், வயல்களிலும் தோகை விரித்து ஆடி திரிந்த மயில்களும், வெளிநாட்டில் இருந்து இரை தேடி வரும் பொன்னி குருவிகளும் உணவுக்காக வேட்டையாடப்படுகிறது. பொன்னி குருவிகள் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இப்படி பல்வேறு இடையூறுகளின் காரணமாக பறவைகள் இனமே காணாமல் போய்விட்டது. வீடுகளிலும், தோப்புகளிலும் மக்கள் புறாக்களை மட்டும் வளர்த்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட காட்டுநாயக்கன் முன்னேற்ற சங்க தலைவர் சி.முருகேசன் கூறியதாவது;கண்மாய்களில் காணப்பட்ட கொக்குவும் தற்போது காணமுடியவில்லை. வேட்டை முற்றிலும் தடுக்கப்பட்ட நிலையில், பறவைகள் இனமே அழிந்து விட்டது. இவற்றின் நடமாட்டத்தின் போது சிக்குன் குனியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவவில்லை. இயற்கை வளம் அழிக்கப்பட்டதன் எதிரொலியாக பறவைகளின் நடமாட்டம் குறைந்தது.மொபைல்போன் டவர் கதிர் வீச்சுக்களின் தாக்குதலில், பறவை இனம் அழிந்து போயிருக்கலாம். குளத்தில் தவளைகள் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது, என்றார்."இயற்கையை காப்போம்' என்பதை சொல்லளவில் இல்லாமல் செயலளவில் காட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தான் எதிர்கால சந்ததிக்கு, நாம் செய்யும் உதவி என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment